கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்கிறீர்கள்... அதிமுக உறுப்பினரை ஆஃப் செய்த அமைச்சர் ரகுபதி..!
சென்னை: காவல்துறை மீதான மானியக்கோரிக்கை விவாதத்தின் போது அரசுக்கு பல்வேறு கோரிக்கைகளை விடுத்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மனோஜ்பாண்டியனை கலாய்க்கும் விதமாக அமைச்சர் ரகுபதி பதில் கொடுத்தார்.
தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறை மீதான மானியக்கோரிக்கை விவாதம் நேற்று நடைபெற்றது. இந்த துறை குறித்த முக்கிய அறிவிப்புகள் வரும் திங்கள்கிழமை அன்று வெளியாகவுள்ளன.
இந்நிலையில் மானியக்கோரிக்கை விவாதத்தில் பேசிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மனோஜ் பாண்டியன், அலைபேசி எண் இருந்தாலே அதை வைத்து குற்றவாளிகளின் முழுத் தகவல்களையும் அறிந்துகொள்ளும் வகையில் நவீன கருவிகள் வந்துவிட்டதாகவும் அதனை அரசு பயன்படுத்த வேண்டும் எனவும் கூறினார்.

மேலும், போக்சோ வழக்குப்பதிவு செய்வதற்காகவே தனிப்பிரிவு உருவாக்கப்பட வேண்டும் என்றும் ஆன்லைன் ரம்மியை தடை செய்யும் சட்டத்தை உயர்நீதிமன்றம் தடை செய்துள்ளதால் இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
மேலும், காவல்துறையை சேர்ந்தவர்களுக்கான படியை ரூ.370-ல் இருந்து ரூ.1,700 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்று கோரினார். அதைத்தொடர்ந்து பெரும்பாலான காவல் நிலையங்களில் முதல் தகவல் அறிக்கை கூட பதிவு செய்யத் தெரியாதவர்கள் நிறைய பேர் உள்ளதாகவும் இதனால் முதல் தகவல் அறிக்கையை எவ்வாறு பதிவு செய்ய வேண்டும் என அதிகமானவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
இது மட்டுமல்லாமல் காவல்துறையினருக்கு தனி மருத்துவக் காப்பீட்டு திட்டமும் ஏற்படுத்தி தர வேண்டும் என பேசினார். வைகை புயல் நடிகர் வடிவேலு பாணியில் ''போதும் போதும் லிஸ்ட் பெரிசா போய்க்கிட்டே இருக்கு'' என்ற நகைச்சுவை வசனத்துக்கு ஏற்ப அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மனோஜ்பாண்டியனுக்கு பதிலளிக்க எழுந்த அமைச்சர் ரகுபதி, கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்கிறீர்கள் எனக் குறிப்பிட்டார்.
நான்கு மாதங்களுக்கு முன்பு வரை தமிழகத்தில் உங்கள் கட்சியின் ஆட்சி தான் நடைபெற்றது. அப்போதெல்லாம் செய்ய முடியாதைதை அல்லது செய்யச் சொல்லி கோராததை இப்போது சொல்லிக் கொண்டு இருக்கிறார் என கவுண்டர் கொடுத்தார் அமைச்சர் ரகுபதி. இதைத் தொடர்ந்து அவையில் சிரிப்பலை எழுந்தது.












Click it and Unblock the Notifications