‘லியோ’ சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு எந்த தடையும் போடல.. அனுமதி கொடுத்தாச்சே! அமைச்சர் ரகுபதி பேட்டி
சென்னை: 'லியோ' அதிகாலை சிறப்புக் காட்சிக்கு அனுமதி கோரிய வழக்கில் ஐகோர்ட் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளதற்கு இடையே, 'லியோ' சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு எந்தவித தடையும் விதிக்கவில்லை என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய்யின் 'லியோ' திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு இடையே வரும் அக்டோபர் 19-ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டில் லியோ படத்திற்கு சிறப்பு காட்சிக்கு அனுமதி அளித்த தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளையும் வித்தித்துள்ளது. அதன்படி, லியோ படத்தின் முதல் நாள் முதல் காட்சி காலை 9 மணிக்கு தான் தொடங்க வேண்டும் என்றும், நள்ளிரவு 1.30 மணி வரை காட்சிகளை திரையிடவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

லியோ அதிகாலை காட்சி இல்லை: மேலும் சிறப்பு காட்சி அனுமதியை தவறாக பயன்படுத்துவதை தடுக்கும் வகையில், மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் சிறப்பு குழு அமைத்து கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனிடையே லியோ படத்திற்கு காலை 4 மணிக்கு ரசிகர்கள் காட்சி திரையிட அனுமதிக்க வேண்டும் என்று கூறி அரசுக்கு எதிராக பட தயாரிப்பு நிறுவனம் நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்துள்ளது.
இதற்கிடையே, நடிகர் விஜய்யை பார்த்து ஆளும் திமுக அரசு பயப்படுகிறது. அதனால் தான் அவரது லியோ படத்துக்கு அதிகப்படியான கட்டுப்பாடுகளை திமுக அரசு விதித்துள்ளது, நடிகர்களிடையே அரசு பாரபட்சம் பார்க்கக்கூடாது என அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்திருந்தார். திரைத்துறையை திமுக முடக்குவதாகவும் அவர் விமர்சித்திருந்தார்.
அமைச்சர் ரகுபதி சொன்ன விளக்கம்: இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, "திரையுலகம் திமுக அரசின் நட்பு உலகம். திரைத்துறையை திமுக அரசு ஒருபோதும் முடக்காது. திமுக அரசால்தான் திரைத்துறை செழிப்பாக இருக்கிறது என்பதே உண்மை. நலிந்த தயாரிப்பாளர்களைக் கூட திமுக அரசு ஊக்குவிக்கிறது. சினிமா விவகாரத்தில் அரசு எப்போதும் தலையிட்டதே இல்லை.
லியோ சர்ச்சையைப் பொறுத்தவரை சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு எந்தவித தடையும் விதிக்கவில்லை. திரைப்படங்கள் வழக்கமாக ஒரு நாளைக்கு 4 ஷோ. சிறப்புக் காட்சி என்றால் ஒரு நாளைக்கு 5 ஷோ. 'லியோ' படத்திற்கு நாளொன்றுக்கு 5 காட்சிகள் திரையிட அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. நீதிமன்றம் உத்தரவிட்டால் அதிகாலை 4 மணி காட்சிக்கும் அதாவது ஒரு நாளைக்கு 6 ஷோ திரையிடவும் தமிழக அரசு அனுமதியளிக்கும்." எனத் தெரிவித்துள்ளார் அமைச்சர் ரகுபதி.
லியோ - அரசின் உத்தரவு என்ன?: படக்குழு தரப்பிலிருந்து 'லியோ' படத்தின் முதல் காட்சியை, அக்டோபர் 19-ம் தேதி அதிகாலை 4 மற்றும் 7 மணிக்கும், 20ஆம் தேதியில் இருந்து 24 ஆம் தேதி வரை காலை 7 மணிக்கும் சிறப்புக் காட்சிகள் திரையிட அனுமதிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. தமிழக அரசு 'லியோ' படத்தின் சிறப்புக் காட்சி தொடர்பாக சில அறிவுரைகளை வழங்கியது. அதன்படி 19ஆம் தேதி முதல் 24ஆம் தேதிவரை அதிகபட்சம் 1 நாளுக்கு 5 காட்சிகள் திரையிட அனுமதி வழங்கியது. ஒரே ஒரு சிறப்புக் காட்சி மட்டுமே திரையிட வேண்டும், காலை 9 மணி முதல் நள்ளிரவு 1.30 மணி வரை காட்சிகள் மட்டுமே திரையிட வேண்டும் என உத்தரவிடப்பட்டது.
இதனையடுத்து, லியோ படத்தின் ரசிகர்களுக்கான சிறப்புக் காட்சியை காலை 4 மணிக்கு திரையிட அனுமதிக்க வேண்டும் எனக் கோரி படத்தின் தயாரிப்பு நிறுவனம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. லியோ திரைப்படத்துக்கு அதிகாலை 4 மணி காட்சியை திரையிட அனுமதி அளிப்பதில் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு சிக்கல்கள் உள்ளன என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்தது.
4 மணி ஷோ கிடையாது: இந்த மனுவை விசாரித்த நீதிபதி 4 மணிக்கு காட்சிக்கு அனுமதி இல்லை என்று கூறியுள்ளார். மேலும் 7 மணிக்கு முதல் காட்சி திரையிட அனுமதி கோரி தமிழக அரசிடம் கோரிக்கை மனு கொடுக்கவும், இந்த மனு மீதாக முடிவை நாளை மதியத்திற்குள் அரசு எடுக்க வேண்டும் என்றும் நீதிபதி அனிதா சுமந்த் உத்தரவிட்டுள்ளார். இதனால் லியோ படத்திற்கு 4 மணி காட்சி கிடைக்கும் என்று எதிர்பார்த்த ரசிகர்கள் ஏமாற்றத்தில் உள்ளனர்.
திரைத்துறையில் அரசியல் தலையீடு உள்ளது, விஜய் படத்திற்கு எதிராக சதி நடக்கிறது என்று விஜய் ரசிகர்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர். இதற்கு இடையே தான், நீதிமன்றம் உத்தரவிட்டால் 'லியோ' 4 மணி காட்சிக்கு அனுமதி வழங்கப்படும் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications