'எது.. நாங்கள் இந்துக்களுக்கு எதிரான கட்சியா? தேர்தல் முடிவுகளை பார்த்தீங்களா..' அமைச்சர் சேகர்பாபு
சென்னை: திமுக இந்துக்களுக்கு எதிரான கட்சி என்ற பிம்பத்தை மு.க. ஸ்டாலின் அரசு தகர்த்துள்ளதாகத் தெரிவித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, அனைத்து ஆக்கிரமிப்பு நிலங்களையும் மீட்கும் வரை சமய அறநிலையத்துறையின் வேட்டை தொடரும் என்றும் அவர் தெரிவித்தார்.
சென்னையை அடுத்துள்ள கொசப்பேட்டையில் அமைந்துள்ள கந்தசாமி கோயில், ஆதிமொட்டையம்மன் கோயில் ஆகியவற்றை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று ஆய்வு செய்தார்.
கோயில் நிலங்கள் மற்றும் சொத்துக்கள் குறித்தும் அவற்றைப் பராமரிக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்தும் அங்குள்ள அதிகாரிகளிடம் அமைச்சர் சேகர்பாபு கேட்டறிந்தார்.

சேகர்பாபு பேச்சு
அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, "இந்த கோயில் சுமார் 400 ஆண்டுகள் பழமையானது. இங்கு மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து ஆய்வு நடத்தினோம். . மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து கோயில்களிலும் சுத்தமான நீர், சுகாதாரமான கழிப்பிடம் போன்ற வசதிகள் பக்தர்களுக்குக் கிடைப்பதை உறுதி செய்யத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளது.

வேக்சின் பணிகள்
இந்து சமய அறநிலையத்துறையின் ஊழியர்களை வேறு எந்த துறை ஊழியர்களும் கட்டுப்படுத்த முடியாது. கொரோனா இன்னும் முழுமையாக கட்டுக்குள் வராததால் தற்போது கோயிலுக்கு உள்ளே மட்டும் தேர் இழுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது தமிழ்நாட்டில் இதுவரை 80% பேருக்கு வேக்சின் போடப்பட்டுள்ளது. தடுப்பூசி இன்னும் கூடுதல் நபர்களுக்குச் செலுத்தப்பட்டால் தளர்வுகளும் அதற்கேற்ப அறிவிக்கப்படும்.

குயின்ஸ்லேண்ட் விவகாரம்
குயின்ஸ்லேண்ட் இந்து அறநிலையத்துறைக்குச் சொந்தமானது. எனவே, இந்த விவகாரத்தில் யாரிடமும் சமரசம் செய்ய முடியாது. பஞ்சாயத்து செய்யும் அரசு இல்லை இது. குயின்சுலாந்து வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, இந்து சமய அறநிலையத்துறை சார்பாக வழக்கறிஞர் ஆஜர் ஆனார்கள். அந்த இடம் இந்து அறநிலையத் துறைக்குக்கு சொந்தமானது என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை.

இந்துக்களுக்கு எதிரான கட்சி இல்லை
இந்துக்கள் மற்றும் ஆன்மிகத்திற்கு எதிரான கட்சி திமுக என்ற பிம்பத்தை உருவாக்கியுள்ளனர். ஆனால் மு.க. ஸ்டாலின் முதலமைச்சரான பின்பு அதனை சுக்குநூறாக தகர்த்துள்ளார். இதைப் பொதுமக்களும் உணர்ந்தே உள்ளனர். அதனால் தான் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுகவுக்கு அமோக வெற்றியை மக்கள் கொடுத்துள்ளனர். இனிவரும் தேர்தல்களிலும் திமுகவின் வெற்றி பயணம் தொடரும்.

சிலை கடத்தல்
தமிழ்நாட்டில் கோயில் சிலைகளைத் தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது, கடத்தப்பட்ட அனைத்து சிலைகளையும் திமுக அரசு மீட்கும். இதுவரை எத்தனை சிலைகள் மீட்கப்பட்டுள்ளது என்பது குறித்து முறையாக அறிவிக்கப்படும். திமுக அரசு அமைந்த பிறகு, இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான ஆக்கிரமிப்பு நிலங்கள் 342.38 ஏக்கர் நிலங்களும், 1789.2 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளது.

தொடரும் வேட்டை
அனைத்து ஆக்கிரமிப்பு நிலங்களையும் மீட்கும் வரை சமய அறநிலையத்துறையின் வேட்டை தொடரும். நகைகளை உருக்கும் சம்பவத்தைத் தேவையில்லாமல் சிலர் பூதாகரம் ஆக்க முயல்கின்றனர். ஆனால் நிச்சயம் அவர்கள் தோல்வி தான் அடைவார்கள். எந்தவொரு சிறு தவறும் கூட நடைபெறாத வகையில் மிகவும் எச்சரிக்கையுடன் இந்த பணியைச் செய்து வருகிறோம்" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications