வெளிநாடுகளில் தமிழர்களுக்கு சிக்கல் ஏற்பட்டால்.. அயலகத் தமிழர் விழாவில உதயநிதி பரபரப்பு பேச்சு
சென்னை: வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களுக்கு சிக்கல் ஏற்பட்டால் அதை தீர்க்கும் பணியை அயலக நலத்துறை உடனடியாக மேற்கொள்கிறது என்று சென்னையில் நடைபெற்று வரும் அயலக தமிழர் தின விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
தமிழக அரசு வெளியிட்டிருந்த அறிவிப்பில் கூறியுள்ளதாவது: "தமிழ்நாடு அரசின் அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை 3-ம் ஆண்டாக 'தமிழ் வெல்லும்' என்னும் கருப்பொருளை மையமாக கொண்டு அயலக தமிழர் தின விழாவை சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் இன்றும் (வியாழக்கிழமை), நாளையும் என 2 நாட்கள் நடத்துகிறது.

இந்த விழாவில் இலங்கை, மலேசியா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், துபாய், இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட 58 நாடுகளில் இருந்து தமிழ் வம்சாவளியினர், மந்திரிகள், கல்வியாளர்கள், கவிஞர்கள் பங்கேற்கின்றனர்.வெளிநாடுகளில் வாழும் 1,400-க்கும் மேற்பட்டோர் இந்த மாநாட்டில் பங்கேற்க பதிவுசெய்து உள்ளனர். இதில், 218 சர்வதேச தமிழ் சங்கங்கள், 48 பிற மாநில தமிழ் சங்கங்கள் ஆகியவற்றை சேர்ந்த வெளிநாடுவாழ் தமிழர்கள் பங்கேற்கிறார்கள்
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விழாவை தொடங்கிவைத்து பேசுகிறார். தொடர்ந்து அங்கு அமைக்கப்பட்டுள்ள 40-க்கும் மேற்பட்ட அயலக தமிழர் கண்காட்சி அரங்குகளையும் திறந்துவைக்கிறார். மேலும், கருணாநிதி நூற்றாண்டை முன்னிட்டு அயலக தமிழர்களின் புத்தக வெளியீடு நிகழ்ச்சியும் நடைபெறும்.
விழாவில், சிறப்பு நிகழ்ச்சிகளாக 4 கலந்துரையாடல்களும், ஒரு கவியரங்கமும் நடைபெறுகின்றன. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2-வது நாளான நாளை (வெள்ளிக்கிழமை) விழா பேருரை நிகழ்த்துவதுடன், 'எனது கிராமம்' என்ற முன்னோடி திட்டத்தையும் தொடங்கிவைக்கிறார்.
இந்த திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் தாங்கள் பிறந்த கிராமத்தை மேம்படுத்த விரும்பும் வெளிநாடுவாழ் தமிழர்கள் அதற்குரிய நிதியை அளித்து இந்த திட்டத்தின் வாயிலாக செயல்படுத்த வகை செய்யப்பட்டு உள்ளது. நிகழ்ச்சியில் சிங்கப்பூர் உள்துறை மற்றும் சட்டத்துறை மந்திரி கா.சண்முகம் தலைமை விருந்தினராக பங்கேற்கிறார்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ் இலக்கியம், கல்வி, சமூக மேம்பாடு, மகளிர் நலன், வணிகம், தொழில்நுட்பம், விளையாட்டு, மருத்துவம் ஆகிய 8 பிரிவுகளில் வெளிநாடுவாழ் தமிழர்களுக்கு விருதுகள் வழங்குகிறார்.
வெளிநாடு வாழ் தமிழர்கள் தமிழகத்தில் முதலீடுகள் செய்வதற்கான வசதி வாய்ப்புகள் குறித்து விளக்குவதற்காக ஸ்டார்ட் அப், டிஎன் பேம் உள்ளிட்ட கண்காட்சி அரங்குகளும் அமைக்கப்பட்டு உள்ளன. விழாவுக்கு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.மஸ்தான் முன்னிலை வகிக்கிறார். அயலகத் தமிழர் நல வாரியத்தின் தலைவர் கார்த்திகேய சிவசேனாதிபதி வரவேற்கிறார்" மேற்கண்ட தகவல் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்கறிப்பில் கூறப்பட்டு இருந்தது.
தமிழக அரசின் அறிவிப்பின் படி, அயலக தமிழர் தின விழாவை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்து உரையாற்றினார். அப்போது பேசிய அவர், இந்தியாவில் உள்ள மாநிலக்கட்சிகளிலேயே அயலக தமிழர்களுக்காக ஒரு அணியை தொடங்கியது திராவிட முன்னேற்ற கழக அரசு. இந்தியாவிலேயே முன்மாதிரியாக வெளிநாட்டில் வாழும் தாய் நாட்டு மக்களுக்காக, அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறையை தமிழக அரசு உருவாக்கியது. இப்போது 58 நாடுகளில் இருந்து விழாவிற்கு வந்துள்ளீர்கள். உங்களுக்கு நன்றி. பல்வேறு நாடுகளுக்கு படிக்கவும், வேலைபார்க்கவும் நீங்கள் சென்றுள்ளீர்கள். எங்கு போனாலும் தமிழ் பேசும் மக்களை காண முடிகிறது. கிட்டத்திட்ட 138 நாடுகளில் தமிழர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
தமிழர்களின் நலனை கருத்தில் கொண்டு தான் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு தான், தமிழ்நாடு அரசின் அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறையை உருவாக்கியது. இந்த துறை வெளிநாடுகளில் வேலை செல்வோருக்கு உதவியாக பல்வேறு பணிகளை செய்து வருகிறது. வெளிநாடுகளில் வேலைக்கு சேருவதில் ஏமாறுவதை பெருமளவு தடுக்கிறது. சட்டப்பூர்வமாக வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு பெற வழிகாட்டுகிறது. வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களுக்கு சிக்கல் ஏற்பட்டால் அதை தீர்க்கும் பணியை அயலக நலத்துறை உடனடியாக மேற்கொள்கிறது" என்றார்.












Click it and Unblock the Notifications