கால் இல்லாத 2 வீரர்களின் கண்ணீரைத் துடைத்த உதயநிதி..! ரூ. 14.50 லட்சம் உபகரணங்கள் ரெடி!
சென்னை: சாதிப்பதற்கு உடல் ஒரு தடையாக இருக்கக் கூடாது. அதை மனதில் வைத்து இரண்டு இளம் மாற்றுத்திறனாளி வீரர்களுக்குக் கிட்டத்தட்ட 14.50 லட்ச ரூபாய் செலவில் செயற்கைக் கால் உபகரணத்தை வழங்கி உள்ளார் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
கே.ராஜேஷ் மற்றும் கே.கலைச்செல்வன் ஆகிய இரண்டு மாற்றுத்திறனாளி வீரர்களும் ஏதோ ஒரு விபத்துக் காரணமாக தங்களின் கால்களை இழந்தவர்கள். காலை இழந்தபிறகும் தங்களின் விளையாட்டுத்துறை மீது வைத்திருந்த இலட்சியக் கனவை இழந்திடக்கூடாது என்று போராடி வந்துள்ளார்கள் இந்த இருவரும்.

ஆகவே பல கட்டப் போராட்டங்கள் மூலம் தங்களின் தடகள கனவைக் கருகவிட்டுவிடாமல் தொடர்ந்து விளையாட்டுப் பயிற்சியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
ஆனால், அவர்களின் பொருளாதாரத்தில் வாங்கிய செயற்கை கால் உபகரணங்களால், இலக்கை எட்டிப் பிடிப்பதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் நிலவி உள்ளன.
அந்த வேளையில்தான் தங்களின் லட்சிய கனவிற்கு உதவிக்கரம் நீட்டியுள்ளார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். என்ன நடந்தது இந்த வீரர்கள் வாழ்க்கையில்? உதயநிதி செய்த உதவியால் நடந்துள்ள மாற்றம் என்ன? இதற்கான எல்லா பதில்களையும் அவர்களே தந்தார்கள்.

"என் பெயர் கலைச்செல்வன். நான் ஒரு பாராலிம்பிக்ஸ் வீரர். திருச்சியில்தான் தங்கி பயிற்சி எடுத்துவருகிறேன். எனக்கு ஐந்து வயது இருக்கும்போது ஒரு விபத்தில் சிக்கி என் காலை இழந்துவிட்டேன்.
ஆனாலும் எனக்கு ஓட்டத்தின் மீதுள்ள ஆர்வம் குறையவே இல்லை. ஆகவே தொடர்ந்து அதற்கான போட்டிகளில் பங்கெடுத்து விளையாடி வந்தேன். இதற்கு முன்னதாக 100 மீட்டர் தூரத்தை 11.09 செகண்ட்டில் கடந்திருக்கிறேன்" என்கிறார் இவர்.
இவரைப் போலவே உதயநிதி மூலம் உதவி பெற்ற மற்றொருவர் என்ன சொல்கிறார்? அதைக் கேட்டோம். அவர், "என் பெயர் ராஜேஷ். நானும் ஒரு பாராலிம்பிக்ஸ் வீரர்தான். சென்னையில்தான் நான் வசித்துவருகிறேன். கந்த 6 வருடங்களாக பாராலிம்பிக்ஸ் ஸ்போர்ட்சில் ஈடுபட்டு வருகிறேன்.

நான் ஓடுவதைப் பார்த்துவிட்டு, என் பயிற்சியாளர் 'உனக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. தீவிரமாகப் பயிற்சி எடு' என்றார். இதற்கு முன்னால் எனக்கு ஒரு ஈவெண்ட் மூலமாகச் செயற்கை கால் உபகரணம் கிடைத்தது.
அதில் என்ன பிரச்சினை என்றால், அது அந்தளவு தரமானதாக இல்லை. ஓரளவுக்குத்தான் அந்த ப்ளேட்டை வைத்து ஓட முடிந்தது. அதில் அப்டேட் வெர்ஷன் தேவைப்பட்டதால், மேற்கொண்டு போட்டிகளில் கலந்துகொள்வதில் தடைகள் இருந்தன" என்கிறார்.
இந்த இருவருக்கும் உதவியது குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அவரது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், "திறமையாளர்களின் கனவுக்கும் - சாதனைக்கும் தடையேதும் இருக்கக் கூடாது என்பதே நம் திராவிட மாடல் அரசின் லட்சியம்.

குறிப்பாக, விளையாட்டுத்துறையை பொறுத்தவரை, நம் வீரர் - வீராங்கனையரின் இலக்குகளுக்குப் பொருளாதாரம் உட்பட வேறு எந்த காரணங்களும் தடைக்கல்லாக இருக்கக் கூடாது என்று செயல்பட்டு வருகிறோம்.
அந்த வகையில், தடகள வீரர்களான மாற்றுத்திறனாளி தம்பிகள் கே.ராஜேஷ் மற்றும் கே.கலைச்செல்வன் ஆகியோருக்கு தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை மூலம் தலா ரூ.7.20 லட்சம் செலவில் செயற்கை கால் உபகரணத்தைப் பொருத்திக்கொள்ளும் வசதியை ஏற்படுத்திக் கொடுத்தோம்.
தம்பிகள் இருவரும், தங்கள் கனவுகளை எட்டிப் பிடிக்க இந்த கால்கள் சிறகுகள் தரட்டும். அவர்களுக்குக் கழக அரசு என்றும் துணை நிற்கும்!" எனக் குறிப்பிட்டுள்ளார்.

வெறும் வார்த்தைகள் மூலம் நம்பிக்கை அளிப்பவர்கள் அதிகம். அந்த உதவிக்கு உடனடியாக செயல்வடிவம் கொடுப்பவர்கள் மிகமிகக் குறைவு.
அந்த வகையில் அமைச்சர் உதயநிதியை அடித்துக்கொள்ள ஆள் இல்லை. அவர் பொறுப்பேற்ற உடன் விளையாட்டுத்துறை என்பது ஏதோ ஒப்புக்கு ஒரு துறை என்ற நிலையை மாற்றி, பல முன்னேற்றங்களைக் குறுகிய காலத்திற்குக் கொண்டுவந்து காட்டி இருக்கிறார் என்றே சொல்லத் தோன்றுகிறது.
இந்த இளைஞர்கள் எல்லாம் இதே தமிழ்நாட்டில்தான் இருந்திருக்கிறார்கள். ஆனால், ஆதரவுக் கரம் என்னவோ உதயநிதி வந்தபிறகுதான் நீண்டுள்ளது.

"நான் இதற்கு முன்னால் தரம் குறைந்த வேறு ஒரு பிளேட்டை அணிந்துகொண்டு ஓடிக் கொண்டிருந்தேன். என்னுடைய வேகத்திற்கு அந்த பிளேட்டின் தரம் ஒத்துழைக்கவில்லை.
ஆகவே அதிக வலி ஏற்பட்டு கால் மூட்டில் ரத்தக் கசிவு ஏற்பட்டுவிட்டது. அப்போது மனதளவில் அதிகம் சோர்ந்துபோய்விட்டேன். இனிமேல் அவ்வளவுதான், விளையாட்டுத்துறையை விட்டே வெளியேறிவிட வேண்டியதுதான் என மனதிற்குள் ஓர் எண்ணம் உருவாகிவிட்டது.
அப்போது தான் ஓட்டத்தில் மிக வலிமையாக இருந்த காலகட்டம். அந்த பிளேடினால் எனது கனவு கரைந்துபோக ஆரம்பித்தது. நிச்சயம் மெடல் என்ற நிலையிலிருந்த எனக்கு, மிகப்பெரிய பின்னடைவு அது.

மேலும் தொடர வேண்டும் என்றால் புதிய உபகரணம் வாங்க வேண்டும். அதன் விலை 7 லட்சம் ரூபாய்க்கு மேல். அதைத்தான் ஒலிம்பிக் வீரர்கள் பயன்படுத்தி வருகின்றன. அந்தளவுக்குப் பணம் செலவு செய்து உபகரணத்தை வாங்கும் அளவுக்கு குடும்ப பொருளாதாரமும் இல்லை.
அந்தத் தருணத்தில்தான் அண்ணன் உதயநிதியைச் சந்தித்து உதவிக்கேட்டு இருந்தேன். அவரிடம் நான் எந்த நிறுவனத்தில் உபகரணம் வேண்டும் என்று கேட்டிருந்தேனோ அதையே அவர் வாங்கிக் கொடுத்துள்ளார். இது சாதாரண உதவி இல்லை.
ஒலிம்பிக்ஸ் போட்டியாளர்கள் பயன்படுத்தும் அதே தரத்திலான உபகரணத்தை வாங்கிக் கொடுப்பது சும்மா இல்லை. இந்த பிளேடை வைத்து இயற்கையான கால் இருந்தால் எப்படி ஓட முடியுமோ அப்படி ஓட முடியும். வலித் தெரியாது. வேகமாகவும் ஓட முடியும். அந்தளவுக்கு வளைந்துதரக் கூடிய உபகரணம் இது.

மாநில அளவில், தேசிய அளவில் பல போட்டிகளில் பங்கேற்றுள்ளேன். தங்கம்கூட வென்றுள்ளேன். எனது கனவு பாராலிம்பிக்ஸ். அந்தக் கனவை அடைய அண்ணன் உதயநிதி இப்போது உதவி இருக்கிறார். அவரது உதவிக்கு எனது மெடல் மூலமாக நன்றி செலுத்துவேன்" என்கிறார் கலைச்செல்வன்
"இப்போது நான் பயன்படுத்தும் இந்த உபகரணம் மிகமிக புதுமையான மாடல். 2023இல் அமைச்சர் அண்ணன் உதயநிதி வாங்கிக் கொடுத்தது. இதன் விலை சுமார் 8 லட்சம் வரும். இந்த விளையாட்டுத்துறையில் 7 வருடங்களாக ஈடுபட்டும் வரும் எனக்கு, இந்தளவுக்கு ஸ்பான்சர் யாரும் செய்தது இல்லை. நான் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெண்கலம் விருதை வென்றிருக்கிறேன்.
பாராலிம்பிக்ஸ்தான் என் லட்சியம். 2028இல் நான் அதற்குள் கட்டாயம் செல்வேன்" என்கிறார் ராஜேஷ்.
இவர்களின் லட்சியம் நிறைவேற நிச்சயம் நாம் வாழ்த்துவோம்!












Click it and Unblock the Notifications