“நீட் சூழ்ச்சி அம்பலம்.. இதான் தகுதியா? எதுக்கு தேர்வு நடத்தணும்?”: உதயநிதி ஸ்டாலின் கொதிப்பு!
சென்னை: நீட் தேர்வில் 0 பெர்சன்டைல் பெற்றாலே முதுநிலை மருத்துவம் படிக்கலாம் என்ற மத்திய அரசின் அறிவிப்பு, நீட் தேர்வின் சூழ்ச்சி அம்பலமாகியுள்ளது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
நீட் முதுநிலை தேர்வில் தகுதி மதிப்பெண் (கட் ஆஃப் பெர்சன்டைல்) பூஜ்ஜியமாக குறைக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வில் 0 பெர்சன்டைல் மதிப்பெண் எடுத்திருந்தாலும் எம்.டி, எம்.எஸ் படிப்புக்கான கலந்தாய்வில் பங்கேற்கலாம் என்று மத்திய அரசின் மருத்துவ கலந்தாய்வுக் குழு அறிவித்துள்ளது. ஏற்கனவே 2 சுற்று முதுநிலை மருத்துவ கலந்தாய்வுகள் முடிவடைந்துள்ள நிலையில் 3-வது சுற்றுக் கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்ளுக்கு சலுகை வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மத்திய அரசின் இந்த அறிவிப்பு பற்றி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். நீட் தேர்வை திமுக தொடர்ந்து எதிர்த்துக் குரல் எழுப்பி வருகிறது. நீட் தேர்வின் காரணமாக ஏழை எளிய மாணவர்களின் மருத்துவக் கனவு பறிக்கப்படுகிறது என திமுக தொடர்ந்து கூறி வருகிறது. இந்நிலையில், மருத்துவ முதுநிலை படிப்புகளில் 0 பெர்சன்டைல் பெற்றவர்களும் சேரலாம் என்ற மத்திய அரசின் அறிவிப்பை உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
நீட் தேர்வில் பூஜ்ஜியம் பெர்சன்டைல் எடுத்தாலே முதுநிலை மருத்துவம் படிக்கலாம் என ஒன்றிய அரசு அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது, நீட் தேர்வின் சூழ்ச்சியை அம்பலமாக்கியுள்ளது.
— Udhay (@Udhaystalin) September 20, 2023
தகுதி, தகுதி என்று சொல்லிவிட்டு, நீட் தேர்வை எழுதினாலே முதுநிலை மருத்துவம் படிக்கலாம் என்றால், அந்த தேர்வை ஏன்…
இதுதொடர்பாக உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "நீட் தேர்வில் பூஜ்ஜியம் பெர்சன்டைல் எடுத்தாலே முதுநிலை மருத்துவம் படிக்கலாம் என ஒன்றிய அரசு அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது, நீட் தேர்வின் சூழ்ச்சியை அம்பலமாக்கியுள்ளது. தகுதி, தகுதி என்று சொல்லிவிட்டு, நீட் தேர்வை எழுதினாலே முதுநிலை மருத்துவம் படிக்கலாம் என்றால், அந்த தேர்வை ஏன் நடத்த வேண்டும் என்பது தான் மாணவர்கள் - பெற்றோர்களின் கேள்வியாக இருக்கிறது.
தனியார் பயிற்சி மையங்களையும் - தனியார் மருத்துவக்கல்லூரிகளையும் வளப்படுத்துவதற்கான ஏற்பாடு தான் நீட் தேர்வு என்று தி.மு.கழகம் ஆரம்பம் முதல் கூறி வந்தது இன்றைக்கு உண்மையாகியுள்ளது. மருத்துவராகும் கனவுடன் புறப்படும் நம் ஏழை - எளிய பிள்ளைகளை மரணக்குழியில் தள்ளும் நீட் அநீதிக்கு, ஒன்றிய அரசு பதில் சொல்லும் நாள் தொலைவில் இல்லை." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications