“நீங்க அங்க உட்காருங்க”.. தோனியிடம் வற்புறுத்திய அமைச்சர் உதயநிதி! கவனித்து அழைத்த முதல்வர் ஸ்டாலின்
தோனியை முதல்வர் ஸ்டாலினுக்கு அருகே அமருமாறு கூறினார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
சென்னை : சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் கருணாநிதி ஸ்டாண்ட் திறப்பு விழாவில், குரூப் போட்டோ எடுத்தபோது முதல்வர் ஸ்டாலினுக்கு அருகே கிரிக்கெட் வீரர் தோனியை அமரச் சொல்லிவிட்டு, அவருக்கு அடுத்ததாக அமர்ந்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கலைஞர் மு.கருணாநிதி ஸ்டாண்ட் எனப் பெயர் சூட்டப்பட்டுள்ள புதிய பெவிலியனை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
பின்னர் குழு புகைப்படம் எடுத்தபோது, உதயநிதி ஸ்டாலின், தோனியை, முதல்வர் ஸ்டாலினுக்கு அருகே அமரச் சொன்னார், அவர் மறுத்த நிலையில், முதல்வர் ஸ்டாலினே அழைத்து அமர வைத்தார்.

புதிய கேலரி
சென்னை சேப்பாக்கம், எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானம் ரூ. 139 கோடியில் கூடுதல் இருக்கைகளுடன் புனரமைக்கப்பட்டுள்ளது. புதிதாக அமைக்கப்பட்டுள்ள பெவிலியன் கேலரிக்கு தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வரும், தீவிர கிரிக்கெட் ரசிகருமான கலைஞர் மு.கருணாநிதி பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த புதிய கேலரியை தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

திறப்பு விழா
இந்த திறப்பு விழாவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முன்னாள் ஐசிசி சேர்மன் சீனிவாசன், தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் அசோக் சிகாமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக, இந்த விழாவில் பங்கேற்க வந்த முதல்வர் ஸ்டாலினை கிரிக்கெட் வீரர் தோனி கைகுலுக்கி வரவேற்றார்.

அருகே அழைத்த ஸ்டாலின்
பின்னர் கேலரியை ரிப்பன் வெட்டி திறந்தபோது, சற்று தள்ளி நின்றுகொண்டிருந்த கிரிக்கெட் வீரர் தோனியையும் அருகே அழைத்தார் முதல்வர் ஸ்டாலின். பின்னர் விழா மேடையில் சீனிவாசன், முதல்வர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், எம்.எஸ்.தோனி என அடுத்தடுத்து அமர்ந்திருந்தனர். விழா மேடையில் லேசாக தடுமாறிய சீனிவாசனை சட்டென்று தாங்கிப் பிடித்தார் தோனி.

அப்பா பக்கத்துல உட்காருங்க
பின்னர் கேலரிக்கு முன்பாக மைதானத்தில் அனைவரும் ஒன்றாக குரூப் போட்டோ எடுத்துக்கொண்டனர். அப்போது, முதல்வர் ஸ்டாலினுக்கு அருகே உதயநிதி ஸ்டாலினுக்கு இருக்கை அமைக்கப்பட்டிருந்தது. அதற்கடுத்த இருக்கையில் தோனி அமர்ந்தார். உதயநிதி ஸ்டாலின் அமரப் போகும் முன்பாக, "நீங்க இங்க உட்காருங்க" என தோனியை முதல்வர் ஸ்டாலினுக்கு அருகே அமரச் சொன்னார் உதயநிதி. தோனி மறுத்தாலும் வற்புறுத்தினார்.

கவனித்த முதல்வர் ஸ்டாலின்
அதற்கு தோனி மறுத்து, நீங்களே அமருங்கள் எனச் சொன்னதும், பின்னர் உதயநிதி அந்த இருக்கையில் அமரப் போனார். முதல்வர் ஸ்டாலினே கவனித்து தோனியை தனக்கு அருகில் அமருமாறு மீண்டும் சொன்னதும், 'அப்பா சொல்றாங்க..' என மீண்டும் சொல்லி தோனியை சீட் மாறி அமர வைத்தார். தோனி அவருக்கு அருகே சென்று அமர்ந்தார். பின்னர் தோனிக்கு இடது புறமாக அமர்ந்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
வரும் 22 ஆம் தேதி சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டி நடைபெற உள்ளது. இந்தப் போட்டிக்கு புதிதாக திறக்கப்பட்ட ஸ்டாண்டுகளில் ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications