அஷ்வின் பந்துவீச்சை பறக்கவிட்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.. “கிட்ட நிக்காதம்மா”.. மேயர் ஒரே சிரிப்பு!
சென்னை : கிரிக்கெட் சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின் வீசிய பந்தை தூக்கி அடித்தார் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். பேட்டிங் ஆடும்போது, அருகே நின்ற மேயர் பிரியா ராஜன் உள்ளிட்டோரை தள்ளி நிற்கும்படி எச்சரித்து, உதயநிதி ஸ்டாலின் ஃபீல்டை க்ளீயர் செய்தது கலகலப்பை ஏற்படுத்தியது.
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள மாந்தோப்பு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கான கால்பந்து மற்றும் கிரிக்கெட் விளையாட்டு பயிற்சியை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி, துணை மேயர் மகேஷ் குமார், கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கிரிக்கெட் பயிற்சியை தொடங்கி வைத்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சிறிது நேரம் பேட்டிங் பிடித்தார். முன்னணி சுழற்பந்து வீச்சாளரான அஷ்வின் பந்து வீச, சுற்றிலும் நிறைய பேர் இருந்ததால் வேகமாக ஆடாமல் ஸ்ட்ரோக் வைத்தார் உதயநிதி. அடுத்த பந்தை ஷாட் ஆட முயற்சித்த நிலையில், அது மிஸ் ஆனது.
பின்னர், மீண்டும் அஷ்வின் பந்து வீச அது வைடாக வந்தது. பந்தை பேட்டால் அடிக்காமல் இடது கையால் கேட்ச் பிடித்த உதயநிதி ரீ பால் போடச் சொன்னார். மேலும், பேட்டை வீசும் தொலைவில் நின்ற மேயர் பிரியா ராஜன் உள்ளிட்டோரை தள்ளி நிற்கச் சொன்னார்.

பிறகு, அஷ்வின் வீசிய அடுத்த பாலை தூக்கி அடித்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். உதயநிதி ஆடிய ஷாட்டை பார்த்து அமைச்சர், மேயர் மற்றும் திமுக நிர்வாகிகள் என பலரும் கைதட்டி ஆரவாரம் செய்தனர். இதையடுத்து, கால்பந்து பயிற்சியையும் தொடங்கி வைத்து மாணவ மாணவிகளுக்கு வாழ்த்து தெரிவித்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications