இதனால்தான் சிக்கல்.. இனிமேல் இப்படி தப்பு நடக்காம பார்த்துக்குறோம்: பிரஸ் மீட்டில் உதயநிதி ஸ்டாலின்!
சென்னை : தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாட்டு மாணவர்கள் பங்கேற்க முடியாமல் போனது ஒரு தகவல் தொடர்பு இடைவெளியால் ஏற்பட்டது. இனிமேல் இப்படியான தவறு நடக்காமல் பார்த்துக் கொள்கிறோம் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்று வரும் பள்ளி மாணவர்களுக்கான தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில், தமிழ்நாடு சார்பில் போட்டிகளில் பங்கேற்க வீரர்களை தேர்வு செய்து அனுப்பாதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

போட்டிகளில் பங்கேற்க 247 மாணவர்களை அனுப்புமாறு லக்னோவில் இருந்து விளையாட்டு குழுமம் சார்பில் கடந்த மே மாதம் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையின் கீழ் உள்ள உடற்கல்வி முதன்மை ஆய்வாளருக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு, அதனை பள்ளிக்கல்வித்துறை கவனிக்காமல் விட்டதால் மாணவர்கள் போட்டியில் பங்கேற்க இயலவில்லை எனத் தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், தமிழ்நாட்டு மாணவர்கள் தேசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பு பறிபோனதற்கு அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையான கண்டனத்தை பதிவு செய்து வருகின்றன.
தனது நிர்வாகத் திறமையின்மையால் விளையாட்டுத் துறையில் தமிழக மாணவர்களுக்கு முறையாக கிடைக்க வேண்டிய வாய்ப்பை கிடைக்கவிடாமல் செய்துள்ளது திமுக அரசு, இதற்கு காரணமான பள்ளி கல்வித்துறை அமைச்சரும், விளையாட்டுத்துறை அமைச்சரும் இனிவரும் காலங்களிலாவது தங்கள் துறை சார்ந்த பணிகளில் உரிய கவனம் செலுத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இன்று சென்னை அண்ணா சதுக்கத்தில் கருணாநிதி நூற்றாண்டு நினைவு பேருந்து நிலையம் திறப்பு விழாவுக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம், செய்தியாளர்கள் இந்த விவகாரம் குறித்துக் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த உதயநிதி ஸ்டாலின், "தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாட்டு மாணவர்கள் பங்கேற்க முடியாமல் போனது பற்றிய விவகாரத்தில் தீர விசாரிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது ஒரு தகவல் தொடர்பு இடைவெளியால் ஏற்பட்டது. இரண்டு ஆண்டுகளாக கோவிட் பெருந்தொற்று காரணமாக இந்த விளையாட்டு போட்டிகள் நடக்கவில்லை.
வீடியோ கான்பிரன்ஸ் மீட்டிங்கில் அரசு அதிகாரிகள், பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் பங்கேற்றிருக்கிறார்கள். ஆனால், தொடர்ந்து நடவடிக்கை எடுக்காமல் விட்டுவிட்டார்கள். காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இனிமேல் இப்படியான தவறு நடக்காமல் பார்த்துக் கொள்கிறோம்." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications