மூச்சுக்கு முன்னூறு தடவை "முதல்வர் உத்தரவுக்கிணங்க".. கலக்கி வரும் விஜயபாஸ்கர்.. என்ன மேட்டர்?
முதல்வர் அமைச்சர் விஜயபாஸ்கருக்கும் நல்ல இணக்கம் ஏற்பட்டு வருகிறது
சென்னை: இப்போதெல்லாம் வார்த்தைக்கு வார்த்தை "முதலமைச்சர்", "முதல்வர் உத்தரவுக்கிணங்க" என்று வாய் நிறைய சொல்லிவருகிறார் அமைச்சர் விஜயபாஸ்கர்..
குட்கா விவகாரம் தலைதூக்கியபோதே, விஜயபாஸ்கரின் அமைச்சர் பதவியை பிடுங்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை மேல் கோரிக்கை விடுத்தன. ஆனால், "குட்கா அமைச்சர்" என்று விமர்சிக்கப்பட்டும், சிபிஐ விசாரணை வரை நடந்து முடிந்ததும் அப்படி ஒரு சமாச்சாரமே நடக்கவில்லை.
இதற்கு பிறகுதான் கொரோனா சமயத்தில் விஜயபாஸ்கரின் செயல்பாடு மக்களால் உற்று கவனிக்கப்பட்டது.. பெரும் பாராட்டையும் பெற்றது.. ஒரு நிமிஷம்கூட ஓய்வில்லாமல் விஜயபாஸ்கர் தொற்றை ஒழிக்க அதிகமாகவே மெனக்கெட்டார்.. மிக சிறப்பாகவே செயல்பட்டார்.. நாலாபக்கமும் விஜயபாஸ்கரின் பெயர் ஓங்கி ஒலிக்க தொடங்கியது.
ஆனால் திடுதிப்பென்று பீலா ராஜேஷ் முன்னிறுத்தப்பட்டு, விஜயபாஸ்கர் ஓரங்கட்டப்பட்டார்.. இதை பற்றி அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் கேட்டபோதும், அப்படியெல்லாம் இல்லவே இல்லை என்று மறுத்தார்.. இதையடுத்து உடனே சுகாதாரத்துறை செயலாளர் மாற்றப்பட்டார்... சுகாதாரத்துறை செயலாளரே மாற்றப்பட்டிருக்கிறார் என்றால், அமைச்சரும்தானே மாற்றப்பட வேண்டும்? அவரும் மாற்றப்படுவாரா? அதிகார விளையாட்டுக்கு அப்பாவிகள் பலிகடாவா? என்று திமுக உட்பட எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியிருந்தனர்.
அதற்கும் அதிமுக பெரிதாக ரியாக்ட் செய்யவில்லை.. பேக் டூ ஃபார்ம்-க்கு வந்துவிட்டார் விஜயபாஸ்கர்.. பழைய மாதிரியே பேட்டிகள் தர ஆரம்பித்துவிட்டார்.. தற்போது மேலும் சில மாற்றங்கள் அவரிடம் தென்பட்டு வருகிறது. எதற்கெடுத்தாலும் முதல்வரை முன்னிறுத்தி பேட்டிகளை தந்து வருகிறார்.. அறிவிப்புகள் என்றாலும், "முதலமைச்சரின் உத்தரவின்பேரில்" என்றுதான் ஆரம்பிக்கிறார்.. அறிக்கை வெளியிட்டாலும், முதல்வருடன் கூட்டாக சேர்ந்துதான் வெளியிடுகிறார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றாத தனி நபர்கள் மற்றும் நிறுவனங்கள் ஆகியோருக்கு அபராதம் விதிப்பது குறித்து அவசர சட்ட திருத்தம் கொண்டு வருவது தொடர்பாகவும், "முதல்வர்தான் அறிவிப்பார்" என்றார்.. இந்த ஆண்டு நீட் தேர்விற்கு விலக்கு கோரி தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டை நாடுமா என்ற கேள்விக்கு, தமிழக அரசின் உரிமையை முதல்வர் விட்டுத் தந்துடுவாரா என்ன? நிச்சயம் விட்டுக்கொடுக்காமல் முதல்வர் சட்டப் போராட்டங்களை நடத்தியும், அரசியல் அழுத்தத்தை கொடுத்தும் வருவதுபோல எல்லா விஷயத்திலும் எடுப்பார்" என்று நம்பிக்கை தெரிவித்தார்.
இதற்கெல்லாம் என்ன காரணம் என்று தெரியவில்லை.. ஒரு அமைச்சர் முதல்வரின் உத்தரவுக்கிணங்கதான் செயல்படுவார் என்பது பொதுவான விஷயம்தான்.. இருந்தாலும், ஓரங்கட்டப்பட்டு விட்டார் என்று கிசுகிசுக்கப்பட்டவர், இன்று முதல்வருடன் இணைந்து பாடுபடுவதும், முதல்வரை விட்டுத்தராமல் தொடர்ந்து பேசி வருவதும் நல்ல ஆரோக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது.
சில மாதங்களுக்கு முன்பு, கொரோனா நிவாரண உதவிப் பொருட்களில் "நாளைய முதல்வர்" என்று தன்னுடைய பெயருக்கு முன்பு விஜயபாஸ்கர் போட்டுக்கொண்டதாக ஒரு செய்தி சோஷியல் மீடியாவில் பரவியது.. அந்த போட்டோக்களும் வெளியானது.. அதுமட்டுமல்ல, விஜயபாஸ்கருக்கு தமிழக முதலமைச்சர் பதவி மீது ஆசை என்றும் அதனால் அவர் சில காலம் ஓரங்கட்டப்பட்டதாகவும் செய்திகள் பரவிய நிலையில், இந்த அத்தனை சர்ச்சையும் தற்போது முடிவுக்கு வந்துள்ளது.
கூடிய சீக்கிரம் தேர்தல் வர போகிறது.. அப்போதும் சரி, அல்லது சசிகலா வெளியே வந்தாலும் சரி.. இந்த இணக்கம் இப்படியே இருந்தால் அது நல்ல ஆரோக்கிய அரசியலின் அடையாளம்தான்!