ஸ்டாலினுக்கு "தானா சேரும் கூட்டம்".. திமுகவை நோக்கி கிளம்ப தயாராகும் "புள்ளிகள்"..!
அதிமுக மீது சிறுபான்மையினர் பிரிவு அதிருப்தியில் உள்ளதாம்
சென்னை: சமீப காலமாகவே அதிமுகவில் சிறுபான்மையினர் பிரிவில் பலரும் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது.. இதையடுத்து அவர்கள் திமுக பக்கமும் நகர்ந்து செல்வதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்த முறை அதிமுக தோல்வியை சந்தித்துள்ளது.. கவுரவமான தோல்வி என்றாலும், அதிமுக தலைமை இதனால் கடுமையான அப்செட் ஆகி உள்ளதை மறுக்க முடியாது.
இந்த தோல்வியையொட்டி, ஓபிஎஸ் - இபிஎஸ் இடையே மீண்டும் பனிப்போர் வெடித்துள்ளது.. அது தனித்தனி அறிக்கை போர்கள் மூலமாகவும் தெரியவருகிறது.

தோல்வி
ஆனால், அதிமுகவின் தோல்விக்கு மிக முக்கியமான காரணமாக சொல்லப்படுவது பாஜகவுடனான கூட்டணிதான்.. கடந்த எம்பி தேர்தலிலேயே இது எதிரொலித்தபோதும், அதிமுக இந்த முறையும் கூட்டணி வைத்து போட்டியிட்டது, பல தரப்பினரால் ஏற்றுக் கொள்ளப்பட முடியவில்லை.. குறிப்பாக சிறுபான்மையினருக்கு இது அதிர்ச்சியாகவே பார்க்கப்பட்டது.

சிறுபான்மையினர் பிரிவு
ஆட்சியில் இருந்தபோதும், சிறுபான்மையினர்பிரிவின் கருத்துக்களையும் அதிமுக தலைமை எதுவும் காது கொடுத்து கேட்கவில்லை, பாஜகவுடன் கூட்டணி வேண்டாம் என்று எவ்வளவோ எடுத்து சொல்லியும் அதையும் கேட்கவில்லை என்ற புலம்பல்கள் வெடித்து கிளம்பி உள்ளது. தேர்தல் தோல்விக்குப் பின்னர் அதிமுகவில் கீழ் மட்ட புலம்பல் சற்று அதிகமாக கேட்கிறது.

புலம்பல்
குறிப்பாக அதிமுகவில் உள்ள கிறிஸ்தவ, இஸ்லாமிய நிர்வாகிகள் அதிருப்தியில் இருப்பதாகவும், இவர்களில் பலர் திமுக பக்கம் செல்ல அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. ஜெயலலிதா இருந்தபோது, சிறுபான்மையினரை இப்படி கண்டுகொள்ளாமல் விட்டதில்லை, இந்த 4 வருடத்தில் சிறுபான்மையினரின் கருத்துக்கள் சுத்தமாக எடுபடாமலேயே போய்விடவும்தான் திமுக பக்கம் சாய தயாராகி வருகிறார்களாம்.

ஸ்டாலின்
திமுகவை பொறுத்தவரை, சிறுபான்மையினருக்கு எப்போதுமே முக்கியத்துவம் தரும் கட்சி.. கருணாநிதி முன்பெல்லாம் பேசும்போது மறக்காமல் ஒன்று சொல்வார், "சிறுபான்மையினருக்கும் திமுகவுக்கும் இருப்பது தொப்புள் கொடி உறவு" என்பார்.. இதைதான் சில மாதங்களுக்கு முன்புகூட ஸ்டாலின் சொல்லி இருந்தார்..

அதிமுக
"நாடாளுமன்றத்தில் முத்தலாக் தடை மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்தபோது, அதை ஆதரித்து பேசிய அதிமுகவுக்கு சிறுபான்மையினரை பற்றி பேச எந்த அருகதையும் இல்லை" என்பதையும் தன்னுடைய பிரச்சாரங்களில் ஸ்டாலின் தொடர்ந்து விமர்சித்து வருவதையும் இங்கு நினைவுகூர வேண்டி உள்ளது. இப்படிப்பட்ட சூழலில்தான், தற்போதைய அதிமுகவில் கண்டுகொள்ளாமல் விடப்பட்ட சிறுபான்மையினர் பிரிவானது, திமுகவை நாடி வர தொடங்கி உள்ளது..

அதிர்ச்சி
அதேபோல் எம்எல்ஏக்கள் தரப்பிலும் சிலரை திமுக ஆதரவு நிலைப்பாடு எடுக்க வைக்கும் முயற்சிகளும் நடக்கிறதாம்.. இப்போதைக்கு கொரோனா பிரச்சனை தலைதூக்கி உள்ளதால், திமுக அரசு அதில் கவனம் செலுத்தி வருகிறது.. அநேகமாக தொற்று பாதிப்பு குறைந்தவுடன், இந்த சிறுபான்மையினர் பிரிவில் பெரும்பான்மையோர், திமுகவில் இணையக்கூடும் என்கிறார்கள்.. இந்தவிஷயம் கேள்விப்பட்ட அதிமுக தரப்போ அதிர்ந்து போயுள்ளதாம்.. அதனால், அந்த பிரிவின் முக்கிய நிர்வாகிகளை சமாதானப்படுத்தும் முயற்சியிலும் இறங்கி வருகிறார்களாம்..!












Click it and Unblock the Notifications