விவசாயிகளை ஏஜென்டும் வியாபாரியும் தூண்டிவிடுறாங்களாம்.. யார் சொல்றது சேலத்து விஞ்ஞானி.. ஸ்டாலின்
சேலம்: விவசாயிகளை போராட்டம் நடத்த ஏஜென்டுகளும் வியாபாரியும் தூண்டிவிடுகிறார்கள் என சேலத்து விஞ்ஞானி எடப்பாடி பழனிச்சாமி தெரிவிக்கிறார் என திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.
வேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரி டெல்லியில் விவசாயிகள் 10 ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களுக்கு ஆதரவாக பல்வேறு மாநில விவசாயிகள் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக திமுக சார்பில் கருப்புக் கொடி போராட்டத்தை இன்று தமிழகம் முழுவதும் நடந்து வருகிறது. சேலத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ஆர்ப்பாட்டம் நடத்தினார்.
விவசாயிகள்
அப்போது விவசாயிகளுக்கு ஆதரவான போராட்டத்தில் பங்கேற்க வந்த திமுகவினரை போலீஸ் தடுத்து நிறுத்தியது. இந்த நிலையில் மு.க.ஸ்டாலின் பேசுகையில் போராட்டத்தில் பங்கேற்க வந்த திமுகவினரை போலீஸ் தடுத்து நிறுத்தியுள்ளது. சீப்பை மறைத்து வைத்துவிட்டால் திருமணம் நின்றுவிடாது.
ஹரியானா
பஞ்சாப் , ஹரியானா விவசாயிகளையும் ஏஜென்டுகளும் வியாபாரிகளும் தூண்டுவிடுகிறார்கள். அதனால்தான் போராட்டம் நடத்துகிறார்கள் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கொச்சைப்படுத்தியுள்ளார்.
விவசாயிகள்
விவசாயிகளை தூண்டுவிடுகிறார்கள் என யார் சொல்றது இந்த சேலத்து விஞ்ஞானி. சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் விவசாயிகள் இது போன்ற போராட்டத்தை நடத்தியது இல்லை. குறைந்தபட்ச ஆதார விலை தொடரும் என மோடி அரசு வாய்மொழியாக சொல்வதை நம்ப முடியாது.
விவசாயிகள்
இது திமுகவிற்கான போராட்டம் அல்ல. விவசாயிகளுக்கான போராட்டம் என்பதை ஆளுங்கட்சி உணர வேண்டும். திமுக விரைவில் ஆட்சி அமைக்க போகிறது என்பதை நினைவுப்படுத்த விரும்புகிறேன் என்றார் ஸ்டாலின். வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என கோஷங்கள் எழுப்பப்பட்டன.
எங்கு யார் பங்கேற்பு
வேலூரில் பொதுச்செயலாளர் துரைமுருகன், மயிலாடுதுறையில் பொருளாளர் டி.ஆர்.பாலு, திருச்சியில் முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, திண்டுக்கல்லில் துணைப் பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி, திருவண்ணாமலையில் துணைப் பொதுச்செயலாளர் க.பொன்முடி, ஈரோட்டில் துணைப் பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன், நீலகிரியில் துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா, நாமக்கல்லில் துணைப் பொதுச்செயலாளர் அந்தியூர் ப.செல்வராஜ் ஆகியோர் பங்கேற்றார்கள்.