தமிழர்கள் திருடர்களா? இதோட நிறுத்திக்கங்க.. பிரதமர் மோடிக்கு நேரடி வார்னிங்..பொங்கியெழுந்த ஸ்டாலின்!
சென்னை: தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி வி.கே.பாண்டியன் பிஜு ஜனதா தள காட்சியின் முக்கிய பிரமுகராக இருக்கும் நிலையில் பூரி ஜெகநாதர் கோவில் பொக்கிஷ அறைகளின் சாவியை 6 ஆண்டுகளாக காணவில்லை எனவும் அந்த சாவி தமிழ்நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியிருந்தார். இந்த நிலையில் தமிழர்களை திருடர்கள் என கூறும் அளவுக்கு பிரதமருக்கு ஏன் இவ்வளவு வன்மம் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
மக்களவைக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு இதுவரை ஐந்து கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றிருக்கிறது. இன்னும் இரண்டு கட்ட வாக்குப்பதிவு நடைபெற இருக்கும் நிலையில் ஜூன் ஒன்றாம் தேதி இறுதிக்கட்ட வாக்குப்பதிவும் ஜூன் நான்காம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறுகிறது.

இதையடுத்து இரண்டு கட்ட தேர்தலுக்காக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கட்சித் தலைவர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் ஒடிசாவில் பிரதமர் நரேந்திர மோடி கடந்த இரண்டு வாரங்களில் மூன்று முறை பிரச்சாரம் மேற்கொண்டார்.
பிரதமர் மோடி: குறிப்பாக பூரி பகுதியில் நடைபெற்ற பிரம்மாண்ட தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி,"ஒடிசாவில் கனிம வளங்கள் ஏராளமாக இருந்த போதிலும் மக்களிடம் தொடர்ந்து வெளியே செல்லும் நிலை இருக்கிறது. ஒடிசாவின் நிலையை பார்த்து நான் வேதனைபடுகிறேன் பிஜு ஜன தள் கட்சியின் சிறு நிர்வாகிகளும் தற்போது கோடீஸ்வரர்களாக இருக்கின்றனர். பூரி ஜெகநாதர் கோயிலின் பொக்கிஷ அறை சாவி காணாமல் போய்விட்டது. நமது வீட்டு சாவி காணாமல் போனால் ஜெகன்நாதரிடம் முறையிடலாம். ஆனால் ஜெகநாதர் கோயில் பொக்கிஷ் அறை சாவியே காணாமல் போய்விட்டது. அந்த சாவி தமிழ்நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மக்கள் கூறுகிறார்கள்" என விமர்சித்து இருந்தார்.
விகே பாண்டியன்: ஐஏஎஸ் அதிகாரியாக இருந்து தற்போது பிஜு ஜனதா தள் கட்சியின் முக்கிய பிரமுகராக இருக்கும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியும் மதுரையைச் சேர்ந்தவருமான விகே பாண்டியனின் பெயரை தான் பிரதமர் நரேந்திர மோடி மறைமுகமாக சாடினார். 2000ஆம் ஆண்டு நடைபெற்ற ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்ற விகே பாண்டியன் பஞ்சாப் கேடர் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து 2002ஆம் ஆண்டில் ஓடிஸா ஐஏஎஸ் அதிகாரி சுஜாதாவை மணமுடித்ததால் அம்மாநில பணிக்கு மாற்றப்பட்டார்
விமர்சனம்: ஒடிசா மக்களின் நம்பிக்கை நாயகனாக இருந்த வி.கே.பாண்டியன் 2010ஆம் ஆண்டுக்கு பிறகு முதல்வர் நவீன் பட்நாயக் தனிப்பட்ட உதவியாளராக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு மிகவும் நெருக்கமாக இருந்த அவர் விஆர்எஸ் பெற்று அந்த கட்சியிலேயே தன்னை இணைத்துக் கொண்டார். இப்போதைக்கு ஒடிசாவின் முக்கிய அதிகார மையமாக வி.கே.பாண்டியன் வலம் வரும் நிலையில் அவரால் தான் பிஜு ஜனதா தளம் -பாஜக கூட்டணி அமையவில்லை என பாஜகவினர் விமர்சித்து வருகின்றனர். இதன் காரணமாகவே அவரை பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்ததாக கூறப்படுகிறது.
முக ஸ்டாலின்: இந்நிலையில் வி.கே.பாண்டியனை விமர்சித்ததன் மூலம் தமிழர்களை திருடர்கள் என்பதா என பிரதமர் நரேந்திர மோடியை தமிழ்நாடு முதலைமைச்சர் முக ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான அவரது எக்ஸ் பதிவில்,"தமிழ்நாட்டின் மீதும் தமிழ்நாட்டு மக்களின் மீதும் பிரதமர் மோடிக்கு இருக்கும் காழ்ப்பின் வெளிப்பாடுதான் அவரது இரட்டை வேடம்""வாக்குக்காக எனது மக்களை அவதூறு செய்வதைப் பிரதமர் மோடி நிறுத்திக் கொள்ள வேண்டும்".
அபாண்டமான பழி: தேர்தல் பரப்புரையில் நாகரிக வரம்புகளை மீறாமல், கொள்கை - கோட்பாடுகள் - செயல்திட்டங்கள் மீது ஆக்கப்பூர்வமான விமர்சனங்களையும் தங்களது ஆட்சியின் சாதனைகளையும் முன்வைத்து வாக்கு சேகரிப்பதில் முன்னுதாரணமாகத் திகழ வேண்டிய பிரதமர் நரேந்திர மோடி, வெறுப்புப் பேச்சுகளின் மூலம் மக்களிடையே பகை உணர்வையும் - மாநிலங்களுக்கு இடையே குரோதத்தையும் தூண்டி வருவது நாட்டுக்கு நல்லதல்ல! முன்னதாக, உத்தரப் பிரதேச மக்களை இழித்தும் பழித்தும் தென்னிந்தியர்கள் பேசுவதாகத் தமிழ்நாட்டு மக்கள் மீது அபாண்டமான பழியைச் சுமத்தி இருந்தார்.
பகையுணர்வைத் தூண்டுவது தவறு: மதம், மொழி, இனம் மற்றும் மாநிலத்தின் பெயரால், இன்னொரு தரப்பு மக்களைத் தூண்டிவிடும் செயல் ஆபத்தானது என்று எனது கண்டனத்தை அப்போதே தெரிவித்து இருந்தேன். சகோதரத்துவத்தை வளர்க்க வேண்டிய அரசியல் தலைவரே பகையுணர்வைத் தூண்டுவது தவறு என்றும் கூறியிருந்தேன். ஆனாலும் தமிழ்நாட்டு மக்களை மோசமானவர்களாக இழித்தும் பழித்தும் பேசும் வழக்கத்தைப் பிரதமர் மோடி நிறுத்திக்கொள்ளவில்லை. ஒடிசா மாநிலத்தில் தேர்தல் பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, புகழ்பெற்ற ஜெகந்நாதர் ஆலயத்தின் பொக்கிஷ அறையின் தொலைந்துபோன சாவிகள் தமிழ்நாட்டில் இருப்பதாகப் பேசி இருக்கிறார்.
காழ்ப்பும் வெறுப்பும் ஏன்?: இது, கோடிக்கணக்கான மக்களால் வணங்கப்படும் புரி ஜெகந்நாதரை அவமதிப்பதோடு, ஒடிசா மாநிலத்தோடு நல்லுறவும் நேசமும் கொண்ட தமிழ்நாட்டு மக்களை அவமதிப்பதும் புண்படுத்துவதுமாகும். ஜெகந்நாதர் மீது அளவற்ற பக்தி கொண்ட ஒடிசா மக்களைத் தமிழ்நாட்டு மக்களுக்கு எதிராகத் தூண்டும் பேச்சல்லவா இது? ஆலயத்தின் பொக்கிஷத்தைக் களவாடும் திருடர்கள் என்ற பழியைத் தமிழ்நாட்டு மக்கள் மீது பிரதமர் மோடி சுமத்தலாமா? தமிழ்நாட்டு மக்களை நேர்மையற்றவர்கள் என்று கூறுவது, தமிழ்நாட்டை அவமதிப்பது அல்லவா? தமிழர்கள் மீது மோடிக்கு இத்தனை காழ்ப்பும் வெறுப்பும் ஏன்?
இரட்டை வேடம்: தமிழ்நாட்டுக்கு வரும்போது தமிழ்மொழியை உயர்வாகப் போற்றுவதாகப் பேசுவதும், தமிழர்களைப் போன்ற அறிவாளிகள் இல்லை என்று பாராட்டுவதும், அதேநேரத்தில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், ஒடிசா போன்ற மாநிலங்களில் வாக்கு சேகரிக்கும்போது தமிழ்நாட்டு மக்களைத் திருடர்களைப் போலவும், வெறுப்பு மிகுந்தவர்களாகவும் அந்த மாநிலங்களுக்கு எதிரானவர்களாகவும் பேசுவது இரட்டை வேடம். இதை மக்கள் புரிந்து கொள்வார்கள்! வாக்குக்காகத் தமிழ்நாட்டையும் தமிழர்களையும் அவதூறு செய்வதைப் பிரதமர் நிறுத்திக் கொள்ள வேண்டும்" என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications