பல்கலை வித்தகராக விளங்கிய விவேக்... இயற்கை இத்தனை அவசரமாக ஏன் பறித்துக் கொண்டதோ - மு.க.ஸ்டாலின்
இன்னும் பல சாதனைகளை நிறைவேற்றக்கூடிய ஆற்றல் படைத்த நடிகர் விவேக்கை இயற்கை இத்தனை அவசரமாக ஏன் பறித்துக் கொண்டதோ என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.
சென்னை: சின்னக் கலைவாணர் எனத் திரையுலகில் புகழ்பெற்ற நகைச்சுவைக் கலைஞர் விவேக் அவர்களின் மறைவுச் செய்தி பேரதிர்ச்சி அளிக்கிறது என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார். பல்கலை வித்தகராக விளங்கிய விவேக் தனது தனித்துவமான நடிப்பாற்றலால் நகைச்சுவையுடன் விழிப்புணர்வையும் மக்களுக்கு வழங்கியவர் என்றும் தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த விவேக்கிற்கு தீவிர சிகிக்சை அளிக்கப்பட்டது. இன்று காலை 5 மணி அளவில் மீண்டும் விவேக்கிற்கு மாரடைப்பு ஏற்பட்டது, மருத்துவர்கள் தீவிரமாக முயன்றும், அவரைக் காப்பாற்ற முடியாமல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பத்மஸ்ரீ, கலைவாணர் உள்ளிட்ட பல விருதுகளை பெற்ற நடிகர் விவேக் உயிரிழந்தது திரைத்துறையினர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் விவேக் மறைவிற்கு திரையுலகினர், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

பல்கலை வித்தகர்
இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், சின்னக் கலைவாணர் எனத் திரையுலகில் புகழ்பெற்ற நகைச்சுவைக் கலைஞர் விவேக் அவர்களின் மறைவுச் செய்தி பேரதிர்ச்சி அளிக்கிறது. பல்கலை வித்தகராக விளங்கிய விவேக் தனது தனித்துவமான நடிப்பாற்றலால் நகைச்சுவையுடன் விழிப்புணர்வையும் மக்களுக்கு வழங்கியவர்.

இயற்கைக்கு அவசரம்
பத்மஸ்ரீ விருது பெற்ற பெருமைக்குரியவர். தலைவர் கலைஞரிடம் தனி அன்பு கொண்டவர். மரம் நடுதல் போன்ற சூழலியல் சார்ந்த சமூகப் பணிகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். இன்னும் பல சாதனைகளை நிறைவேற்றக்கூடிய ஆற்றல் படைத்த நடிகர் விவேக்கை இயற்கை இத்தனை அவசரமாக ஏன் பறித்துக் கொண்டதோ!

பிரிவால் வாடும் குடும்பத்தினர்
அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினர் நண்பர்கள் திரையுலகினர் அனைவருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

மக்களின் கலைஞன்
நடிகர் விவேக் மறைவுக்கு திரைத்துறையினரும், ரசிகர்களும் நேரில் சென்று கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவரது பிரிவு திரைத்துறைக்கு பேரிழப்பாகும். விவேக்கின் இறுதிச்சடங்கு இன்று மாலை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications