55 கோடிப்பு.. 500 தூய்மை பணியாளர்களை நெகிழ வைத்த ஸ்டாலின்! ரூ.11 லட்சம் மதிப்பில் புது வீடு
சென்னை: வீடற்ற 500 தூய்மை பணியாளர்களுக்கு தலா ரூ.11 லட்சம் மதிப்பீட்டில் மொத்தம் ரூ.55 கோடி செலவில் கட்டப்பட்ட வீடுகளை முதலமைச்சர் முக ஸ்டாலின் வழங்கி இருக்கிறார்.
பள்ளிக் கட்டடங்கள் மற்றும் ஏகலைவா உண்டு உறைவிடப்பள்ளிக் கட்டடங்களை திறந்து வைத்து, தாட்கோ மாவட்ட மேலாளர்கள் மற்றும் செயற்பொறியாளர் அலுவலகப் பயன்பாட்டிற்காக ரூ.2.04 கோடி மதிப்பிலான 23 வாகனங்களை வழங்கி, வீடற்ற 500 தூய்மைப் பணியாளர் நல வாரிய உறுப்பினர்களுக்கு ரூ.55 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரிய வீடுகளை வாங்க மானியம் வழங்குவதற்கான ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று தலைமை செயலகத்தில் நடைபெற்றது.

இதில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துகொண்டு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் 42 கோடியே 45 லட்சத்து 67 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஆதிதிராவிடர் மாணவ, மாணவியர்களுக்கான 21 விடுதிக் கட்டடங்கள், 16 கோடியே 59 லட்சத்து 14 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 9 பள்ளிக் கட்டடங்கள் மற்றும் 22 கோடியே 97 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 4 ஏகலைவா மாதிரி உண்டி உறைவிடப் பள்ளிக் கட்டடங்களை திறந்து வைத்தார்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின் மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக செயல்படும் தாட்கோ நிறுவனத்தின், மாவட்ட மேலாளர்கள் மற்றும் செயற்பொறியாளர்களின் அலுவலகப் பயன்பாட்டிற்காக 2 கோடியே 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான 23 வாகனங்களை வழங்கிடும் விதமாக முதலமைச்சர் வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

2022 - 23 ஆம் ஆண்டிற்கான ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மானியக் கோரிக்கையில், தமிழ்நாடு தூய்மைப் பணியாளர் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள வீடற்ற 500 தூய்மைப் பணியாளர் உறுப்பினர்களுக்கு தகுதியின் அடிப்படையில் தலா ரூ.11 லட்சம் வீதம் மொத்தம் ரூ.55 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் கட்டப்படும் பயனாளிகள் பங்களிப்புடன் கூடிய வீடுகள் வாங்க மானியம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி, வீடற்ற 500 தூய்மைப் பணியாளர் நல வாரிய உறுப்பினர்களுக்கு ரூ.55 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு நகழ்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் கட்டப்பட்டுள்ள வீடுகளை வாங்க அவர்களுக்கு மானியம் வழங்குவதற்கான ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக முதற்கட்டமாக 7 தூய்மைப் பணியாளர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆணைகளை வழங்கி தொடங்கி வைத்தார்.












Click it and Unblock the Notifications