புஸ்ஸி ஆனந்துக்கு தீபாவளியே கிடையாது.. ’சாமி’ ஸ்டைலில் ஓட விட்ட காவல்துறை! ஸ்டாலின் மாஸ்டர் ப்ளான்
சென்னை: கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் நடந்து 15 நாட்களுக்கு மேல் கடந்துள்ள நிலையில் விஜயின் பிரச்சாரத்தை ஏற்பாடு செய்த கரூர் மாவட்ட நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர். ஆனால் தவெக கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் நிர்வாகிகளான ஆதவ் அர்ஜுனா, சிடிஆர் நிர்மல் குமார் இதுவரை கைது செய்யப்படவில்லை. இந்த நிலையில் அவர்கள் தற்போதைக்கு கைது செய்யப்பட வாய்ப்பு இல்லை என கூறப்படுகிறது. மேலும் இதற்கு பின்னர் திமுகவின் அரசியல் உத்தியும் இருக்கிறது என்கின்றனர் தமிழக வெற்றி கழகத்தினர்.
கரூர் கூட்ட நெரிசல் துயர நிகழ்வு நடந்து இன்றுடன் 15 நாட்கள் கடந்துள்ளது. அந்த சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்வை ஏற்படுத்திய நிலையில், போலிசாரால் வழக்குகள் பதிவு செய்யப்பட்டநிலையில், தற்போது நீதிமன்ற உத்தரவுப்படி எஸ்ஐடி விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கரூர் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த தமிழக வெற்றி கழக கரூர் மாவட்ட பொறுப்பாளர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். அதே சமயம், தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் (A2) மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகியான சிடிஆர் நிர்மல் குமார் (A3) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, இருவரும் தற்போது தலைமறைவாக உள்ளனர்.

கரூர் துயர நிகழ்வு
இவர்களை பிடிக்க காவல் துறை தொடர்ந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், இருவரும் முன்ஜாமினுக்காக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். ஆனால், அந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனால், இருவரும் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்ற அச்சம் காரணமாக மறைவிலேயே இருப்பதாக கூறப்படுகிறது. இதே வழக்கில், சமூக வலைதளத்தில் சர்ச்சைக்குரிய கருத்து பதிவிட்ட ஆதவ் அர்ஜுனா மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர்மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புஸ்ஸி ஆனந்த்
ஆனால் இவர்களிலும் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக, "ஏன் தவெகவின் முக்கிய நிர்வாகிகள் கைது செய்யப்படவில்லை?" என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த வட்டாரங்களிடம் பேசிய போது"கரூர் துயர நிகழ்வுக்குப் பிறகு தமிழக அரசு உடனடியாக மருத்துவ உதவி, நிவாரண தொகை, ஒருநபர் ஆணையம் என அனைத்தையும் வேகமாக செய்தது. இதனால் அரசு மீது குற்றம் சாட்ட வழியில்லை. ஆனால், இதேசமயம், தவெக நிர்வாகிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்தால், அவர்கள் அதிமுக அல்லது பாஜக பக்கம் நகரும் வாய்ப்பு இருப்பதால் அரசு எச்சரிக்கையுடன் நடந்து வருகிறது" என்று தெரிவித்தனர்.
தவெக
மேலும், "தவெகவுக்கு மிகுந்த அழுத்தம் கொடுத்தால், பாஜக அதனை அரசியல் வாய்ப்பாக பயன்படுத்தும். இதனால், திமுக எதிர்ப்பு வாக்குகள் ஒன்றிணைந்து செல்லும் சூழல் உருவாகலாம். அதனால், திமுக அரசு விஜய்யை நேரடியாக குறி வைக்காமல், நிதானமாக கையாளுகிறது. புஸ்ஸி ஆனந்த் தான் தவெகவின் இயக்க சக்தி. அவர் இல்லையென்றால் கட்சி இயங்க முடியாது. அதனால் அவரை கைது செய்யாமல், தொடர்ந்து தேடுதல் நடவடிக்கையில் வைத்திருப்பது, அவரை வெளிப்படையாக இயங்க விடாமல் கட்டுப்படுத்தும் அரசியல் யுத்தி ஆகும்" எனவும் குறிப்பிட்டனர்.
நிர்மல் குமார்
இதனால், புஸ்ஸி ஆனந்த் - நிர்மல் குமார் மீது தேடுதல் வேட்டை இன்னும் நீளக் கூடும் என்றும், இதன் பின்னணியில் அரசியல் கணக்குகள் செயல்படுகின்றன என்றும் அரசியல் வட்டாரங்கள் மதிப்பிடுகின்றன. இதனால் விஜயின் கரூர் பயணம் கூட தள்ளிப் போகலாம் எனவும் சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications