ஆழ்ந்த ஆன்மீகச் சிந்தனை கொண்டவர் ராமகோபாலன்... அவரது மறைவு வருத்தமளிக்கிறது -மு.க.ஸ்டாலின் இரங்கல்
சென்னை: இந்து முன்னணி நிறுவனர் ராம கோபாலன் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
ராமகோபாலனை இழந்து வாடும் இந்து முன்னணியினருக்கு தனது ஆழ்ந்த அனுதாபத்தையும், இரங்கலையும் தெரிவித்துக்கொள்வதாக கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது;
இந்து முன்னணியின் நிறுவனத் தலைவர், பெரியவர் திரு. ராம கோபாலன் அவர்கள் உடல் நலக்குறைவு காரணமாக மறைவெய்தினார் என்ற துயரச் செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன். திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்!
சிந்தாந்த வேறுபாடுகள் எத்தனையோ இருந்தாலும், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களும், பெரியவர் திரு. ராம கோபாலன் அவர்களும், நல்ல நண்பர்களே! அவர்களிடையே இருந்த பரஸ்பர நன்மதிப்பு, ஒருவருக்கொருவர் கருத்துப் பரிமாறிக் கொள்ளும் கண்ணியம், பண்பாடு மற்றும் பக்குவம் நிறைந்த நட்புணர்வு ஆகியவற்றை நான் அறிவேன்.
இருவரும் நேரில் சந்தித்து அளவளாவிய நேரங்களில் கூட, தத்தம் கொள்கைகளில் இருவருமே உறுதியாக இருந்தவர்கள். அந்தக் "கொள்கைச் சுதந்திரம்" இருவரின் நட்புணர்வில் என்றைக்குமே குறுக்கிட்டதில்லை.
ஆழ்ந்த ஆன்மீகச் சிந்தனையுடன், சமயக் கருத்துகளை சமுதாயத்திற்கு எடுத்துரைத்த துறவியான அவரது மறைவு பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் இந்து முன்னணியினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இராம கோபாலன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து கவிப்பேரரசு வைரமுத்து தமது ட்விட்டர் பக்கத்தில் எழுதியுள்ளதாவது:
இந்து முன்னணித் தலைவர்
இராமகோபாலன்
கொண்ட கொள்கையில்
குன்றாது நின்றவர்;
கருத்து வேறுபாட்டிலும்
கண்ணியம் காத்தவர்.
அவரை இழந்து துயர்ப்படும்
அனைவர்க்கும் என் இதய இரங்கல்.
இவ்வாறு வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications