சாலைகளில் தண்ணீர்.. மின் வயர்கள் துண்டிப்பு.. கொசு உற்பத்தி.. நடவடிக்கை தேவை.. ஸ்டாலின்
சென்னை: தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வரும் இந்த நேரத்தில் போர்க்கால அடிப்படையில் மாவட்ட நிர்வாகங்கள் செயல்பட வேண்டும் என திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்தார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் கனமழை கொட்டி வருகிறது.
நவம்பர் 30, டிச.1, டிச.2 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் கனமழை இருக்கும் என வானிலை மையங்கள் அறிவித்தன. அது போல் நேற்று முன் தினம் இரவு மழை கொட்டி தீர்த்தது.
சென்னை மழை.. ஒரே நாளில் கிடுகிடுவென உயர்ந்த செம்பரம்பாக்கம்.. பல ஏரிகளுக்கு அதீத நீர்வரத்து!
அடை மழை
இந்த நிலையில் நேற்று மாலை முதலே ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்தது. பின்னர் இரவு முதல் விடியற்காலை வரை அடை மழை பெய்தது.
மாவட்ட நிர்வாகங்கள்
இதனால் சாலைகளில் அடிக்கணக்கில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதுகுறித்து திமுக தலைவர் முக ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வரும் இந்த நேரத்தில் போர்க்கால அடிப்படையில் மாவட்ட நிர்வாகங்கள் செயல்பட வேண்டும்.
டெங்கு
சாலைகளில் வெள்ளமெனத் தேங்கி இருக்கும் தண்ணீர், பல ஊர்களில் வீடுகளுக்குள் புகுந்துள்ளது. மின் வயர்கள் துண்டிக்கப்பட்டு மின்விநியோகம் தடைப்பட்டுள்ளது. தண்ணீர் தேக்கம் காரணமாக கொசு உற்பத்தி பெருகி, அதன் மூலம் #Dengue பரவுவது அதிகரிக்கக் கூடும்.
நிவாரணப் பணி
வருமுன் காக்கும் நடவடிக்கைகளில் அரசும், அரசு அதிகாரிகளும் உடனடியாக இறங்கிட வேண்டும். உடனடி நிவாரணப் பணிகளையும் உடனடியாகத் தொடங்கிட வேண்டும் என தெரிவித்தார்.