விவசாயிகளிடம் வீராப்பு காட்டாமல்... இடைக்கால நிவாரணத்தை வழங்கிடுக... ஸ்டாலின் வலியுறுத்தல்
சென்னை: புயலால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இடைக்கால நிவாரணத்தை உடனடியாக வழங்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், மாநிலப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ஒரு வாரத்திற்கு முன்பே 74 கோடி ரூபாய் ஒதுக்கி விட்டு, இன்று வரை பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கொடுக்காததற்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

எச்சரிக்கை
"நிவர்" புயல் நிவாரணத்திற்காக மாநிலப் பேரிடர் நிதியிலிருந்து ஒரு வாரத்திற்கு முன்பே 74 கோடி ரூபாய் ஒதுக்கி விட்டு, இன்று வரை பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும்- மீனவர்களுக்கும் - ஏழை எளியோர்க்கும் இடைக்கால நிவாரணம் கூட, முதல் தவணையாக, எதுவும் அறிவிக்காமல் இருக்கும் முதலமைச்சர் எடப்பாடி திரு. பழனிசாமிக்கு, மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருப்போரின் சார்பில், கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஸ்டாலின் கேள்வி
"உழவர்களின் துயரத்தை நேரில் பார்க்கப் போகிறேன்" என்று கூறிவிட்டு திருவாரூர் சென்றவர், தனது "ஊழல் நாயகர்" என்ற உண்மைத் தோற்றத்தை மறைக்கப் படாதபாடு பட்டுக் கொண்டிருப்பது, அவரது பத்திரிகைப் பேட்டிகளில் பரிதாப வண்ணத்தில் தெரிகிறதே தவிர- ஒதுக்கிய நிதியை ஒரு வாரமாக என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? என்றே பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தெரியவில்லை.

வயிற்றெரிச்சல்
வெந்த புண்ணிலே வேலைப் பாய்ச்சுவது போல் - வேளாண் விளைபொருட்களை இழந்து நிற்கும் விவசாயிகளின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்ளும் வகையில் முதலமைச்சர் பொறுப்பற்ற வகையில், தனது கடமையை மறந்து, கண்ணியம் துறந்து பேசி வருகிறார்; அதன் மூலம் தனது பக்குவமின்மையை வெளிச்சம் போட்டுக் காட்டி வருகிறார்.

வீராப்பு கூடாது
ஆனால் அதற்கு முன்பு, "கணக்கு எடுத்து நிவாரணம் கொடுப்போம்", "மத்திய அரசிடம் நிதி பெறுவோம்" என்றெல்லாம் சாக்குப் போக்கு சொல்லி வீராப்பு காட்டாமல் - ஆழ்ந்த சோகத்திலும், துயரத்திலும் மூழ்கியுள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும், குறைந்தபட்சம் 5 ஆயிரம் ரூபாயும், விளை பொருட்களை இழந்து விழிநீர் பெருக்கிக் கொண்டிருக்கும் விவசாயிகளுக்கு தலா 10 ஆயிரம் ரூபாயும் முதல் தவணை நிவாரணமாக - உடனடியாக வழங்கிட வேண்டும் என்று முதலமைச்சர் திரு. பழனிசாமியை மிகவும் வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

ஏமாற்றாதீர்
வியர்வை சிந்தி உழைத்த விவசாயிகளை, வீணே கண் கலங்க வைக்காமல்- முதலமைச்சர், "இடைக்கால நிவாரணம்" கொடுத்து உதவிட, மறு சிந்தனைக்கு இடம் கொடுத்துக் காலம் தாழ்த்தாமல், உடனடியாக முன்வர வேண்டும் என்றும்; ஒதுக்கிய பணத்தைப் பயன்படுத்தாமல், "விவசாயிகளின் கண்ணீர் துடைக்கிறேன்" என்று கபட நாடகம் போட்டு, வழக்கம் போல் இங்கு யாரையும் ஏமாற்ற முயற்சி செய்ய வேண்டாம் என்றும்; கேட்டுக் கொள்ள விரும்புகிறேன்.












Click it and Unblock the Notifications