எத்தனையோ பேர் எடுத்துரைத்தும்... அமைச்சரவையில் என்னை சேர்க்க கலைஞர் மறுத்தார் -மு.க.ஸ்டாலின் பேச்சு
சென்னை: கடந்த 1996-ம் ஆண்டு திமுக ஆட்சியின் போது அமைச்சரவையில் தன்னை சேர்க்க கருணாநிதி மறுத்துவிட்டதாக கூறியுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
சிங்காரச் சென்னை 2.0 தூய்மைப் பணிகளுக்காக ரூ.36 கோடியில் 1,684 மூன்று சக்கர பேட்டரி வாகனங்கள் மற்றும் 15 காம்பாக்டர் இயந்திரங்களை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அதில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மேயராக தாம் பணியாற்றிய காலம் குறித்தும் இன்னும் தனது பழைய நினைவுகள் பற்றியும் தெரிவித்தார். அந்த வகையில் கடந்த 1996-ம் ஆண்டு தமிழகத்தில் திமுக ஆட்சி அமைத்தவுடன் அமைச்சரவையில் தன்னை சேர்க்குமாறு திமுகவின் முன்னணி நிர்வாகிகள் பலரும் கருணாநிதியிடம் எடுத்துக்கூறியதாகவும் ஆனால் அமைச்சரவையில் தன்னை சேர்க்க அவர் மறுத்துவிட்டதாகவும் தெரிவித்தார்.
அதேநேரத்தில் அப்போது மக்களால் நேரடியாக தேர்வு செய்யப்படும் மேயர் தேர்தல் வந்தபோது தன்னை வேட்பாளராக நிறுத்தி மேயராக்கியவர் கருணாநிதி எனக் கூறினார். தாம் மேயராக வருவதற்கு முன்பு, மேயர் என்றாலே கவுனும், 100 சவரன் தங்கச்சங்கிலியை அணியவும், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வதும், விழாக்களில் பங்கேற்பதும் தான் வேலை என்ற நிலை இருந்ததாகவும் தாம் மேயராகிய பிறகு தான் அதனை உடைத்தெறிந்து மக்கள் பணியாற்றுவது தான் மேயரின் வேலை என்ற நிலையை உருவாக்கியதாக கூறியுள்ளார்.
மேலும், தாம் மேயராக பதவியேற்கும் போது அதற்கான அழைப்பிதழை கருணாநிதியிடம் கொடுத்தபோது ஒரு நிமிடம் அழைப்பிதழை மட்டும் உற்றுநோக்கிய அவர், எல்லோரும் உன்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் உள்ள ஒரு அறையில் அமர வைக்க பார்த்தார்கள், நான் உன்னை இவ்வளவு பெரிய கட்டிடத்தில் (ரிப்பன் மாளிகை) அமர வைத்திருக்கிறேன் என நகைச்சுவை ததும்ப கூறியதாக தனது நினைவலைகளை பகிர்ந்துகொண்டார் முதலமைச்சர் ஸ்டாலின்.
எனவே ரிப்பன் மாளிகை வழியாக எப்போது சென்றாலும் தவறாமல் அந்தக் கட்டிடத்தை தாம் பார்த்துக்கொண்டே செல்வேன் எனவும் அந்த நிகழ்ச்சியில் பேசினார். மேலும், சட்டமன்றம் நடக்கிறபோது பொதுவாக எந்த நிகழ்ச்சிகளுக்கும் தாம் தேதி கொடுப்பதில்லை என்றும் சிங்காரச்சென்னை 2.0 திட்டத்தின் கீழ் தூய்மைப்படுத்தும் பணிகள் என்பதால் சென்னை மாநகராட்சி சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் தாம் கலந்துகொண்டதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.












Click it and Unblock the Notifications