மேகதாது அணை.. கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சியை ஆட்டம் காண வைக்கும் ஸ்டாலினின் "பலே" திட்டம்
சென்னை: மேககாது அணை குறித்து சோனியாகாந்தியிடம் பேசுவேன் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
கருணாநிதி சிலைத் திறப்பு விழாவுக்கு காங்கிரஸின் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோரை அழைப்பதற்காக மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி பயணம் மேற்கொள்கிறார்.
அதற்கு முன்னதாக சென்னை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் கருணாநிதி சிலை திறப்பு விழா வரும் 16-ஆம் தேதி நடைபெறுகிறது.
பங்கேற்பு
இந்த விழாவுக்கு சோனியா காந்தி, ராகுல் உள்ளிட்ட தலைவர்களை அழைப்பதற்காக டெல்லி செல்கிறேன். மேலும் பாஜகவுக்கு எதிராக உள்ள கட்சிகள் நடத்தும் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளேன்.
கூட்டணி ஆட்சி
அந்த சமயத்தில் மேகதாது அணை குறித்து சோனியாகாந்தியிடம் பேசுவேன் என்றார் ஸ்டாலின். கர்நாடகத்தில் காங்கிரஸ்-மஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.
ஸ்டாலின் எண்ணம்
இந்த நிலையில் மேகதாது என்ற இடத்தில் அணை கட்டியே தீருவோம் என முதல்வர் குமாரசாமி உள்ளிட்டோர் விடாபிடியாக இருக்கின்றனர். கூட்டணி கட்சி தலைவர் என்ற முறையில் சோனியா காந்தி இந்த விவகாரத்தில் தலையிட்டால் சரியாக இருக்கும் என ஸ்டாலின் கருதுகிறார்.
ஒப்புக் கொண்ட சோனியா
காங்கிரஸ் ஆதரவு இல்லாவிட்டால் மஜத ஆட்சி கவிழும். பாஜகவை வீழ்த்தவே தாங்கள் அதிகளவில் தொகுதிகளில் வெற்றி பெற்ற போதிலும் மஜத தலைமையில் ஆட்சியை நடத்த சோனியா ஒப்புக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.