முதல்வராகும் ஸ்டாலின்...கோபாலபுரத்தில் அம்மாவிடம் ஆசி.... திருஷ்டி சுற்றிப்போட்ட சகோதரி
கோபாலபுரத்தில் அம்மாவிடம் ஆசி பெறச்சென்ற திமுக தலைவர் மு.க ஸ்டாலினுக்கு எல்லார் கண்ணும் உங்க மேலதான் என்று கூறி தேங்காயில் சூடம் ஏற்றி திருஷ்டி சுற்றிப்போட்டுள்ளார் சகோதரி செல்வி.
சென்னை: சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராக பதவியேற்கப் போகும் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தனது அம்மாவிடம் ஆசி பெறுவதற்காக கோபாலபுரம் சென்றார். மனைவி துர்கா உடன் சென்ற ஸ்டாலினை ஆரத்தி எடுத்து வரவேற்று தேங்காயில் சூடம் ஏற்று சுற்றி திருஷ்டி கழித்துள்ளார் அவரது சகோதரி செல்வி.
சட்டசபைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் பெரும்பான்மையான இடங்களை பெற்று வெற்றி பெற்றனர். இன்னும் சில தினங்களில் மு.க ஸ்டாலின் முதல்வராக பதவியேற்கவுள்ளார்.
சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்ற மு.க ஸ்டாலினுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், திரை பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

முதல்வராக தேர்வாகும் ஸ்டாலின்
கொரோனா பரவலுக்கு இடையே நடந்து முடிந்துள்ளது தமிழக சட்டசபைத் தேர்தல். 234 தொகுதிகளில் திமுக ஆட்சியமைக்கத் தேவையான அளவை விட பெரும்பான்மையான இடங்களில் வென்றுள்ளது. நாளைய தினம் அண்ணா அறிவாலயத்தில் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டத்தில் சட்டசபை உறுப்பினர்கள் அனைவரும் முதல்வராக மு.க ஸ்டாலினை தேர்வு செய்ய உள்ளனர்.

கோபாலபுரம் சென்ற ஸ்டாலின்
வெற்றிச்சான்றிதழை வாங்கிய உடன் நள்ளிரவில் நேராக கருணாநிதி நினைவிடத்திற்கு சென்று ஆசி பெற்றார் ஸ்டாலின். இன்று காலையில் தனது தாயார் தயாளு அம்மாவிடம் ஆசி வாங்குவதற்காக கோபாலபுரம் இல்லத்திற்கு சென்றார். அங்கு அவருக்கு ஆரத்தி எடுத்து குடும்ப உறுப்பினர்கள் வரவேற்றனர். ஊர் கண்ணு எல்லாம் உங்க மேலாதான் என்று சொல்லி சகோதரி செல்வி தேங்காயில் சூடம் ஏற்றி சுற்றி திருஷ்டி கழித்தனர்.

விளையாடிய வீடு
கோபாலபுரத்தில் பிறந்து வளர்ந்த ஸ்டாலின், திருமணம் முடிந்து சில காலம் வரைக்கும் அங்குதான் வசித்து வந்தார். தனது மனைவி குழந்தைகள் பேரன் பேத்திகளுடன் வேறு வீட்டிற்கு சென்றாலும் அவ்வப்போது கருணாநிதி, தயாளு அம்மாளை சந்தித்து செல்வார்கள். மிகப்பெரிய வெற்றியை தனது தாயிடம் பகிர்ந்து கொண்டு ஆசி பெற வேண்டும் என்பதற்காக இன்று தான் பிறந்து வளர்ந்த கோபாலபுரம் வீட்டிற்குச் சென்றார்.

அம்மாவிடம் ஆசி
தாயாரிடம் ஆசி பெற்ற ஸ்டாலின், சொந்தங்களுடன் வெற்றி பெற்ற மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார். அக்கம் பக்கத்தினர், நண்பர்கள் வீட்டிற்கு சென்று நலம் விசாரித்தனர். கோபாலபுரம் பகுதியில் உள்ள பால்ய கால நண்பர் ராமச்சந்திரனையும் சந்தித்து பேசினார் ஸ்டாலின். சிறுவயது நினைவுகளை நண்பர்களுடன் பேசி மகிழ்ந்தார் ஸ்டாலின்.

குவியும் வாழ்த்து
மாணவப்பருவத்தில் அரசியலை தொடங்கி இளைஞரணி, செயல்தலைவர், துணை முதல்வர், எதிர்கட்சித்தலைவர் என படிப்படியாக வளர்ந்து விரைவில் முதல்வராக பொறுபேற்கப் போகிறார். மு.க ஸ்டாலினுக்கு உறவினர்களும், நண்பர்களும் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர். பலருடைய வாழ்த்துக்கள் வந்தாலும் அண்ணனின் வாழ்த்தை ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார் மு.க ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications