தமிழக வளர்ச்சிக்கு ஆளுநர் முட்டுக்கட்டை போடுகிறார்! அவர் தேவையில்லை! ஜவாஹிருல்லா போர்க்கொடி!
சென்னை: மாநிலத்தின் வளர்ச்சிப் பணிகளுக்கு ஆளுநர் ரவி முட்டுக்கட்டை போட்டுவருவதாக மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
ஆளுநர் ரவியை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெறவேண்டும் என வலியுறுத்தி கேட்டுக்கொள்வதாக கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

மாநில வளர்ச்சி
மாநில வளர்ச்சி நாட்டுக்கு உகந்ததாக இருக்காது, அது ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தும் என்று தமிழக ஆளுநர் ரவி அவர்கள் தெரிவித்திருப்பது கண்டனத்திற்குரியது. தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் 22-வது பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ரவி அவர்கள் இந்தச் கருத்தை தெரிவித்துள்ளார். பிராந்தியங்கள் என்று கூறப்படும் மாநிலங்களின் வளர்ச்சி ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தும் என ஆளுநர் கூறியுள்ளது அபத்தமானது.

கூட்டாட்சி திட்டங்கள்
ஒவ்வொரு மாநிலத்திற்கும் அதன் சொந்த பலவீனங்களும், சிக்கல்களும் உள்ளன. கூட்டாட்சி திட்டங்கள் என்பது மாநிலங்களில் உள்ள குடிமக்களின் வருமானத்தை அதிகரித்தல், வறுமையைக் குறைத்தல், சுகாதாரப் பாதுகாப்பை மேம்படுத்துதல், மாநிலக் கல்வியை மேம்படுத்துதல், உணவின் தரத்தை மேம்படுத்துதல், சுற்றுச்சூழல் பிரச்சினைகளைத் தீர்ப்பது, கலாச்சாரம், விளையாட்டு, தொழிலாளர் சந்தையை உருவாக்குதல், பொழுதுபோக்கு பகுதிகளை உருவாக்குதல் மற்றும் அவற்றை மேம்படுத்துதல் என்பதாகும். இவை அனைத்தையும் மேம்படுத்தி வளர்ச்சி அடைய வைப்பது ஒன்றிய அரசின் முக்கியக் கடமையாகும்.

சொந்த வருவாயில்
இதனை ஒன்றிய அரசு செய்யத்தவறும் பட்சத்தில் மாநிலங்கள் தனது சொந்த வருவாயில் மேற்குறிப்பிட்டுள்ளவையை கொண்டு வளர்ச்சிப் பாதையில் பயணிக்கின்றன. மேலும், நாட்டின் ஒட்டுமொத்த சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு பிராந்தியங்களின் வளர்ச்சி முக்கியப் பங்கு வகிக்கின்றது. இதில் எந்த இடத்திலும் ஏற்றத்தாழ்வு இல்லை என்பதை ஆளுநர் புரிந்துகொள்ள வேண்டும்.

திரும்பப்பெறுக
தொடர்ந்து மாநில அரசின் கோப்புகளைக் கிடப்பில் போடுவதுடன் மாநிலத்தின் வளர்ச்சிப் பணிகளுக்கு முட்டுக்கட்டைப் போட்டுவரும் ஆளுநர் ரவி அவர்களை உடனடியாக ஒன்றிய அரசு திரும்பப் பெறவேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.












Click it and Unblock the Notifications