கொடுங்கையூரில் மாணவர் மீது தாக்குதலில் ஈடுபட்ட போலீசாரை நிரந்தரமாக பணி நீக்கம் செய்க! மமக கோரிக்கை!
சென்னை: சென்னையில் சட்டக்கல்லூரி மாணவர் மீது தாக்குதல் நடத்திய காவலர்கள் மற்றும் காவல் அதிகாரிகளை நிரந்தரமாக பணியை விட்டு நீக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.
ஒரு சில காவல்துறையினரின் மனித நேயமற்ற செயலால் ஒட்டு மொத்த காவல் துறையினருக்கும் ஆளும் அரசுக்கும் கெட்ட பெயரை உண்டாக்கியுள்ளதாக அவர் வேதனை தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

பகுதி நேரப் பணி
சென்னையை சேர்ந்த சட்டக் கல்லூரி மாணவர் அப்துல் ரஹிம் என்பவர் கொடூங்கையூரில் பகுதி நேரமாக மெடிக்கல் கடையில் வேலை பார்த்து விட்டு சைக்கிளில் வீட்டிற்கு செல்லும் நேரத்தில் மாஸ்க் சரியாக அணியாததற்காக ரோந்துப் பணியில் இருந்த காவலர்கள் அபராதம் செலுத்துமாறு கூறியுள்ளனர். அந்த மாணவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து மிகவும் கடுமையாக தாக்கியுள்ளனர்.

ஆணவப் போக்கு
காவல்துறையின் இத்தகைய செயல் மனித உரிமைக்கு எதிரான செயலாகும். இது போன்ற ஒரு சில காவல் துறையினரின் மனித நேயமற்ற செயல் ஒட்டு மொத்த காவல் துறையினருக்கும் ஆளும் அரசுக்கும் கெட்ட பெயரை உண்டாக்கும் வகையில் உள்ளது. சட்ட கல்லூரி மாணவர் அப்துல் ரஹீமை கைது செய்து இரவு முழுவதும் கடுமையாக தாக்கியதோடு மாணவன் மீதே பொய் வழக்கு பதிவு செய்து கைது செய்திருப்பது கொடுங்கையூர் காவல் துறையின் அதிகார துஷ்பிரயோகத்தையும், மனித உரிமைக்கு எதிரான ஆணவப் போக்கையும் காட்டுகிறது.

கைது செய்க
சட்ட கல்லூரி மாணவர் அப்துல் ரஹீமை மிகவும் கடுமையாக தாக்கிய காவலர்கள், காவல்துறை அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, பணி இடை நீக்கம் செய்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருப்பதை வரவேற்கிறேன். அதே நேரத்தில் கடுமையான பிரிவுகளை சேர்க்காமல் சாதாரண பிரிவுகளை சேர்த்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திருப்பதும், இது வரை அவர்களை கைது செய்யாமல் இருப்பதும் வருந்ததக்கது.

நம்பிக்கை பிறக்க
ஆகவே சம்பந்தப்பட்ட காவல் துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் மீது எந்த வித பாரபட்சமுமின்றி கடுமையான வழக்கு பிரிவுகளை சேர்த்து வழக்கு பதிவு செய்ய வேண்டும். மேலும் துறை ரீதியாகவும் நடவடிக்கை எடுத்து பணியில் இருந்து நிரந்தரமாக நீக்கம் செய்ய வேண்டும் எனவும் தவறு செய்யும் காவல்துறையினர் மீது உடனடி நடவடிக்கை எடுத்து பொது மக்களுக்கு காவல்துறை மீது நம்பிக்கை உண்டாக்க வழி வகை செய்ய வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பாக கேட்டுக் கொள்கிறேன்.












Click it and Unblock the Notifications