நாங்கள் கூட்டணி கட்சி சார்.. எங்களை திருமாவளவன் இப்படி பேசலாமா? திமுக தலைமையிடம் கமல் கட்சி புகார்
தங்கள் கட்சியின் வாக்கு வங்கி குறித்து தரக்குறைவாக திருமாவளவன் பேசியது குறித்து திமுக தலைமையிடம் மநீம புகார்
சென்னை: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் பேசிய வார்த்தைகள் கூட்டணி கட்சியான தங்களை மிகவும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது என திமுக தலைமையிடம் மக்கள் நீதி மய்யம் கட்சியின் கமல்ஹாசன் தரப்பு புகார் செய்துள்ளது.
அதிமுக ஆட்சியின் போது அவர்களை தொடர்ந்து ட்விட்டர் வாயிலாக எதிர்த்து வந்த கமல்ஹாசன் கடந்த 2018ஆம் ஆண்டு மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கினார். இதைத் தொடர்ந்து அடுத்த ஆண்டே நடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு கணிசமான வாக்குகளை மக்கள் நீதி மய்யம் பெற்றது.
அடுத்து நடந்த 2021 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலிலும் இந்திய ஜனநாயக கட்சி, சமத்துவ மக்கள் கட்சி ஆகியவற்றுடன் கூட்டணி அமைத்து மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிட்டது. இந்த தேர்தலிலும் வெற்றி பெறாவிட்டாலும் கணிசமான வாக்குகளை பெற்றது.

கமல்ஹாசன்
அதிலும் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி ஸ்ரீனிவாசனுக்கு டஃப் கொடுத்தார். அவர் காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமாரை 3ஆம் இடத்திற்கு தள்ளினார். இந்த நிலையில் தற்போது ஈரோடு இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும் என எதிர்பார்க்கப்பட்டது. கடந்த சட்டசபை தேர்தலில் கொங்கு மண்டலத்தில் பெற்ற வாக்குகளை வைத்து ஈரோடு கிழக்கில் கமல்ஹாசன் களமிறங்குவார் என எதிர்பார்த்தது.

மக்கள் நீதி மய்யம்
ஆனால் அவரோ இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடவில்லை. அதற்கு பதிலாக திமுக கூட்டணி வேட்பாளர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்தார். ஏற்கெனவே ராகுல் அழைத்ததன் பேரில் இந்திய ஒற்றுமை யாத்திரையில் கமல் கலந்து கொண்டார். அங்கு டெல்லியில் ராகுல் வீட்டிற்கு சென்றிருந்தார். இருவரும் அரசியல் குறித்து பேசிக் கொண்டனர்.

நாடாளுமன்றத் தேர்தல்
இதனால் கமல்ஹாசன் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைப்பதற்கு பதிலாக காங்கிரஸுடன் கூட்டணி அமைப்பார் என கருதப்பட்டது. காங்கிரஸுக்கு திமுக ஒதுக்கும் தொகுதியில் ஓரிரு தொகுதிகளை உள் ஒதுக்கீடாக காங்கிரஸ் மநீமவுக்கு ஒதுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சட்டசபை தேர்தலின் போதே திமுக கூட்டணியில் கமலை இழுக்க முயற்சிகள் நடந்ததாக சொல்லப்படுகிறது.

திமுக கூட்டணியில் இணையாத மநீம
ஆனால் அவர் திமுக கூட்டணியில் இணையவில்லை. இந்த நிலையில்தான் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஈரோடு இடைத்தேர்தலில் ஆதரவு என்ற நிலைப்பாட்டை கமல்ஹாசன் அறிவித்துள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சிக்கென வாக்கு வங்கி கணிசமாக இருக்கிறது. இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வாக்கு வங்கி கூட்டணிக்கு பலம் சேர்க்கும் என நான் கருதவில்லை என திருமாவளவன் தெரிவித்திருந்தார்.

கமல்ஹாசன்
ஆனால் எங்கள் கூட்டணி வேட்பாளருக்கு கமல்ஹாசன் ஆதரவு அளித்துள்ளதை நாங்கள் வரவேற்கிறோம் என தெரிவித்திருந்தார். கூட்டணியில் இருக்கும் தங்களின் வாக்கு வங்கி குறித்து இப்படியா பேசுவது என மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள் கடும் அதிருப்தியில் இருந்தனர். இந்த நிலையில்தான் மக்கள் நீதி மய்யம் கட்சியின் முக்கிய நிர்வாகி திமுக தலைமையிடம் நேராக சென்று புகாரையும் வேதனையையும் தெரிவித்துள்ளாராம். அதில் கூட்டணிக்குள் இருக்கும் கட்சியை எதிர்க்கட்சி போல் பாவித்து இப்படி திருமாவளவன் பேசியது சரியா என கேட்டுள்ளாராம். இதை கேட்ட திமுக தலைமையும் உங்கள் வருத்தத்தை நான் நிச்சயம் திருமாவளவனிடம் பகிர்வதாகவும் அவர் அப்படி பேசியதற்கு காரணத்தை கேட்பதாகவும் இனி வருங்காலத்தில் இப்படி நடக்காத வண்ணம் பார்த்துக் கொள்வதாகவும் தெரிவித்திருந்தார். இனியும் இப்படியே போனால் கமல்ஹாசனே நேரடியாக முதல்வர் ஸ்டாலினை சந்தித்து முறையிட முடிவு செய்துள்ளதாகவும் தெரிகிறது.












Click it and Unblock the Notifications