இது என்ன புதுசா இருக்கே! வங்க கடல் மோக்கா புயல் தமிழ்நாட்டை தாக்குமா? இதுதான் ரூட்டா? வெளுக்க போகுது
சென்னை: வங்கக்கடலில் உருவாக உள்ள மோச்சா புயல் தமிழ்நாட்டை தாக்குமா என்ற கேள்வி, எதிர்பார்ப்பு மக்கள் இடையே எழுந்துள்ளது.
கடந்த இரண்டு நாட்களாக தமிழ்நாட்டில் கோடை மழை வெளுத்து வாங்கி வருகிறது. கோடை காலம் என்பதற்கான அறிகுறியே இல்லாத அளவிற்கு தினமும் மழை பெய்து வருகிறது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இந்த கோடை மழை பெய்து உள்ளது. ஆனால் இது நீண்ட நாட்களுக்கு நீடிக்காது என்று வானிலை ஆய்வு மையம் முதலில் கணித்து இருந்தது.

இந்த நிலையில்தான் தற்போது வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி வருகிறது. நேற்று மாலைதான் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் புதிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவானது. இது வலிமை அடைந்து வருகிறது.
இது நாளை காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலிமை அடையும். அதற்கு மறுநாள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் . அதை தொடர்ந்து வங்கக்கடலில் வடக்கு திசையில் நகர்ந்து மத்திய வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுபெறக்கூடும்.
பொதுவாக ஒரு தாழ்வு மண்டலம் வலிமை அடைந்து புயல் ஏற்பட கடலின் மேல் வெப்பநிலை 26 டிகிரி செல்சியசுக்கு மேல் இருக்க வேண்டும். அதாவது வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஏற்படுகிறதே, அதன் மையத்தில் இந்த வெப்பநிலைக்கு மேல் இருக்க வேண்டும். அல்லது காற்றழுத்த தாழ்வு பகுதியின் மையத்தில் இதை விட அதிக வெப்பநிலை இருக்க வேண்டும். அந்த வெப்பநிலை இருந்தால் மட்டுமே புயலுக்கு சாதகமான சூழ்நிலை நிலவும்.
கடலுக்கு நடுவே.. நிலத்தில் இருந்து இன்னும் நீண்ட தூரத்தில் இருந்தால் கண்டிப்பாக இது புயலாக மாறி இருக்கும். எவ்வளவுக்கு எவ்வளவு பூமியில் இருந்து தூரத்தில் இருக்கிறதோ அவ்வளவு நல்லது. அப்போதுதான் அது முழுதாக உருவாக முடியும்.

ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலம் பூமிக்கு அருகில் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். இது முழுமையாக உருவாகும் முன் அது கரையை கடக்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இதனால் பல தாழ்வு மண்டலங்கள் புயலாக மாறாமல் போய் இருக்கின்றன.
அதேபோல் மூன்றாவது விஷயம் வறண்ட காற்று. இந்த வறண்ட காற்று பொதுவாக தாழ்வு மண்டலம் உருவாக விடாமல் தடுக்கும். வறண்ட காற்று காரணமாக தாழ்வு மண்டலம் வேகமாக வலிமை இழக்கும். குளிர்ந்த காற்று இருந்தால் தாழ்வு மண்டலம் வேகமாக வலிமை அடையும்.
வறண்ட காற்று என்பது தாழ்வு மண்டலத்தை செயல் இழக்க செய்யும், ஆக்ரோஷத்தை குறைக்கும் ஒன்றாகும். இந்த மூன்று விஷயங்கள்தான் பொதுவாக ஒரு புயல் உருவாவதற்கான சூழ்நிலையை தீர்மானிக்கும். இந்த விஷயங்கள் சாதகமாக அமைந்தால் புயல் உருவாவதற்கான சூழ்நிலைகள் இருக்கும்.
இந்த மோச்சா புயல் மத்திய வங்கக்கடலில் இருப்பதால்.. மேற்கண்ட அனைத்து விஷயங்களும் புயல் உருவாவதற்கான சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தி உள்ளன. எனவே புயல் உருவாவது உறுதியாகிவிட்டது. ஆனால் இது தமிழ்நாட்டை தாக்குமா என்பது சந்தேகம்தான்.
தற்போது இருக்கும் நிலையில் இதன் பயணத்தை கணிக்க முடியாது என்றாலும் ஒடிசாவில் பெரும்பாலும் தாக்கும். ஒடிசா அல்லது ஆந்திர பிரதேசம் இடையே எங்காவது ஓரிடத்தில் கரையை கடக்கும் வாய்ப்புகள் உள்ளன. பெரும்பாலும் வடக்கு ஆந்திர பகுதி அதிகமாக இதனால் பாதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் இன்றும் பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. முக்கியமாக அடுத்த 3 மணி நேரங்களில் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
திருச்சி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், மதுரை, நீலகிரி, திண்டுக்கல், திருப்பூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இன்னும் சில மணி நேரங்களில் கனமழை பெய்யும்.
தூத்துக்குடி, கன்னியாகுமரி, நீலகிரி, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் கனமழை பெய்யும்.
கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம்,செங்கல்பட்டு, விழுப்புரம்,கடலூர் இன்று கனமழை பெய்யும்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், அரியலூர், பெரம்பலூர், மதுரை ஆகிய மாவட்டங்களில் இன்று அதிகாலையில் இருந்து கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.












Click it and Unblock the Notifications