பிரதமர் பதவியில் நீடிக்கும் தகுதியை மோடி இழந்து விட்டார்.. திருமாவளவன் பரபரப்பு குற்றச்சாட்டு
சென்னை: சனாதனத்திற்கு எதிராக போராடுபவர்களை வேட்டையாட பெகாசஸ் செயலி பயன்படுத்தப்படுகிறது பிரதமர் பதவியில் நீடிக்கும் தகுதியை மோடி இழந்து விட்டார் என விசிக தலைவர் தொல் திருமாவளவன் விமர்சித்துள்ளார்.
சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்களின் தொலைபேசிகளை இஸ்ரேலின் பெகாசஸ் உளவு செயலியின் மூலம் உளவு பார்த்ததாக பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசை கண்டித்து மே 17 இயக்கம் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் தெகலான் பாகவி, மதிமுக கட்சியின் துணை பொது செயலாளர் மல்லை சத்யா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு மத்திய பாஜக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பினர்.

திருமாவளவன்
இந்த ஆர்ப்பாட்டத்தில் திருமாவளவன் பேசியதாவது: மோடி அரசுக்கு எதிராக பற்ற வைத்திருக்கும் தீ பொறி இந்த ஆர்ப்பாட்டம். மோடி பிரதமர் பதவியில் நீடிக்கும் தகுதியை இழந்துவிட்டார். அவர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை நாம் உரத்து முழங்க வேண்டும். நீட் உள்ளிட்ட விவகாரங்களுக்காக தனி தனியாக போராடுவதற்கு மாற்றாக மோடியை பிரதமர் பதவியில் இருந்து விலக கோரி போராட வேண்டும்.

ஆபத்தானது
சனாதனத்திற்கு எதிராக போராடுபவர்களை வேட்டையாடவே பெகாசஸ் செயலி பயன்படுத்தப்படுகிறது. இந்தியா ஒரு நெருக்கடியான சூழலில் சிக்கியுள்ளது. பெகாசஸ் செயலி மனித குலத்திற்கே ஆபத்தானது. அறிவு சார்ந்த தளத்தில் தாக்கத்தை ஏற்படுத்துபவர்களை மோடி அரசு வேட்டையாடுகிறது. கவுரி லங்கெஷ், கல்புர்கி உள்ளிட்டோர் வேவு பார்க்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர். சங் பரிவார் கும்பலின் திட்டத்திற்கு எதிராக இருப்பதால் அவர்கள் கொல்லப்பட்டனர்.

வேவு பார்ப்பது அவசியம்
இந்தியாவின் பெயரை மாற்றி இந்து ராஷ்டிராமாக்க வேண்டும் எனும் கனவு கொண்டுள்ளனர். : எதிர் கட்சிகளை பிளவு படுத்தவும் பாழ்படுத்தவும் செய்கிறது பாஜக. இது போன்ற பல்வேறு செயல்களுக்காக வேவு பார்க்கிறார்கள். மத சாதி வெறியை வளர்க்க வேண்டும் என்பது பாஜகவின் நீண்ட கால கனவு அதற்கு வேவு பார்ப்பது அவர்களுக்கு அவசியமாக உள்ளது.

பாஜக மிரட்டி உள்ளது
உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்யை பெகாசஸ் மூலம் மிரட்டி பாபர் மசூதி உள்ளிட்ட வழக்குகளில் தங்களுக்கு தேவையான தீர்ப்புகளை பாஜக பெற்றுள்ளது. பெகாசஸ் செயலியால் வாட்ஸ் அப், மின்னஞ்சல், ஸ்மார்ட் போன்கள் உள்ளிட்டவற்றை பயன்படுத்த முடியுமா என்கிற அச்சம் ஏற்பட்டுள்ளது. வேவு பார்ப்பது கேவலமானது இழிவானது. மோடி பதவி விலக வேண்டும் என்கிற கோஷத்தை தேசம் முழிவதும் எழுப்ப வேண்டும்" இவ்வாறு திருமாவளவன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications