செந்தில் பாலாஜிக்கு பித்தப்பையில் கல்.. பின்னந்தலையில் வலி! எம்ஆர்ஐ ஸ்கேன் முடிந்தது! அடுத்தது என்ன?
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பித்தப்பையில் கற்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ள நிலையில் அவருக்கு இன்னும் சற்று நேரத்தில் எம்ஆர்ஐ ஸ்கேன் பரிசோதனை எடுக்கப்பட்டு வார்டுக்கு அழைத்து செல்லப்பட்டார்.
சட்டவிரோத பணபரிவர்த்தனை வழக்கில் ஜூன் 14 ஆம் தேதி கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு நேற்று முன் தினம் மதிய உணவு உட்கொண்டது முதலே வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.

இதையடுத்து சிறைத் துறை மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி அவர் உடனடியாக ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக அவர் ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு அவருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவரது கால் மரத்து போவதாக கூறிய நிலையில் இதயவியல் துறை பிரிவு தலைவர் மனோகரன் தலைமையிலான மருத்துவர்கள் குழு சிகிச்சை அளித்தனர். அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் சாப்பிட்டவுடன் வாந்தி மயக்கம் ஏற்பட்டதால் அவரது உடலை குடலியல் சிகிச்சை நிபுணர்கள் பரிசோதனை செய்தனர்.
அதில் அவருக்கு பித்தப்பையில் கற்கள் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதனால் அவருக்கு இன்னும் சற்று நேரத்தில் எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்கப்படுகிறது. நேற்றைய தினம் அவருக்கு சிடி ஸ்கேன் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. மேலும் அவருக்கு ரத்த அழுத்தம் குறையாமல் அதிகரித்த நிலையிலேயே இருக்கிறது. இதனால் அதை குறைக்க சிகிச்சைகள் அளிக்கப்படும் என தெரிகிறது.
இதுவரை செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுக்கள் 8 முறைக்கு மேல் நிராகரிக்கப்பட்டுவிட்டது. அவரது உடல்நிலையை காரணம் காட்டி திமுக வழக்கறிஞர்கள் ஜாமீன் பெற முயற்சிக்கிறார்கள். ஆனால் அமலாக்கத் துறையோ அவருக்கு ஜாமீன் வழங்கினால் அவர் சாட்சிகளையும் ஆதாரங்களையும் கலைத்து விடுவார் என ஆட்சேபம் தெரிவிக்கிறது.
அவரது உடல் எடையும் குறைந்துள்ளதாக சிறைத் துறை அதிகாரி ஒருவரே பேட்டி அளித்திருந்தார். மருத்துவமனைக்கு அழைத்து வந்த போது கூட செந்தில் பாலாஜியை ஒருவர் கைத்தாங்கலாக இறக்கிவிட்டார். பின்னர் அவர் வீல் சேரில் அமர்ந்தபடியே மருத்துவமனைக்குள்ளே சென்றார். அங்கு அவரது இதய துடிப்பு சீராக இல்லை என கண்டறியப்பட்டதால் ஸ்டான்லி மருத்துவர்களின் பரிந்துரைக்கேற்ப அவர் ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்கப்பட்டது. இதையடுத்து அவர் மீண்டும் வார்டுக்கு அழைத்து செல்லப்பட்டார். மேலும் அவருக்கு கால் நரம்புகளில் பிரச்சினை இருப்பதால் நரம்பியல் துறை மருத்துவர்கள் பரிசோதனை நடத்தவுள்ளார்கள். அது போல் தலையின் பின்புறத்திலும் வலி இருப்பதால் அதற்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவருக்கு மருந்து மாத்திரைகளிலேயே சிகிச்சை அளிப்பதா இல்லை மருத்துவமனையில் புறநோயாளியாக அனுமதித்து சிகிச்சை அளிப்பதா என மருத்துவர்கள் பரிந்துரைக்கு பிறகுதான் தெரியவரும்.












Click it and Unblock the Notifications