அந்த மனசுதான் கடவுள்! போண்டா மணியின் மகளுக்கு பிறகு! நடிகர் முத்துக்காளை மகன்! சபாஷ் ஐசரி கணேஷ்!
சென்னை: வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் நடிகர் முத்துக்காளை (Muthukaalai) மகன் இலவசமாக படிக்க பி.காம் சீட் கொடுத்துள்ளார் ஐசரி கணேஷ். இவர் திரைப்பட தயாரிப்பாளராகவும் இருப்பதால் நிறைய நலிந்த கலைஞர்களுக்கு கல்வி செல்வத்தை அளித்து வருகிறார்.
காமெடி நடிகர் முத்துக்காளையை நினைவிருக்கிறதா? ஒரு திரைப்படத்தில் வடிவேலுவிடம் "செத்து செத்து விளையாடுவோமா"னு கேட்டு காமெடியில் கலக்கியிருப்பார். அது போல் இன்னொரு படத்தில் வடிவேல் அரசியல்வாதியாக இருப்பார்.

தேர்தலின் போது வாக்களித்துவிட்டு வந்த முத்துக்காளையிடம், "எனக்குத்தானே ஓட்டு போட்டே" என வடிவேல் கேட்பார். முத்துக்காளை சத்தியம் செய்து சொன்ன போதிலும் அதை வடிவேல் நம்ப மாட்டார். உடனே முத்துக்காளை, "இங்க பாருங்க தென்ன மர சின்னத்துல ஒரு குத்து குத்தியிருக்கேனே" என ஓட்டு சீட்டை காட்டிய போது வடிவேல் அதிர்ச்சி அடைந்து, "இத்தனை நாளாக ஓட்டை அதற்கான பெட்டியில் போடாமல் (அண்மையில்தான் வாக்குப் பதிவு இயந்திரம் வந்தது) இப்படித்தான் வீட்டுக்கு கொண்டுட்டு போறியா?"னு கேட்பார்.
சிறிய வேடம்
சிறிய வேடம் ஏற்று நடித்தாலும் முத்துக்காளை அதை பிரமாதமாக செய்வார். "காதலன்" படத்தில் "ஊர்வசி ஊர்வசி" பாடலில் அட்மாஸ்பியர் ஆர்டிஸ்ட்டாக திரையில் அறிமுகமானவர் முத்துக்காளை. அப்படியே வடிவேலுவுடன் காமெடியில் இணைந்து கலக்கினார்.
இவர் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்தவர். சினிமா மோகத்தால் சிறிய வயதிலேயே சென்னைக்கு வந்தார். 18 வயதில் கராத்தேவில் பிளாக் பெல்ட் வாங்கிய இவர், திரைத்துறையில் ஸ்டன்ட் மாஸ்டராக பணியாற்ற தொடங்கி பின்னர் அட்மாஸ்பியல் ஆர்ட்டிஸ்ட்டாக திரையில் அறிமுகமானார்.
மதுப்பழக்கம்
படிப்பை தொடர முடியாமல் போனது. மது பழக்கத்திற்கு அடிமையாகி இருந்த அவர் திடீரென அந்த பழக்கத்திலிருந்து மீண்டார். இதையடுத்து கல்வியில் கவனம் செலுத்திய முத்துக்காளை தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு படிக்க ஆரம்பித்தார்.
தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகத்தில் 2017ஆம் ஆண்டு இளங்கலை வரலாறும், 2019ஆம் ஆண்டு தமிழில் முதுகலைப் பட்டமும் பெற்றார். தனது 58 ஆவது வயதில் இளங்கலை தமிழ் இலக்கியத்தில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று சாதித்தார்.
58ஆவது வயதில் சாதனை
58ஆவது வயதில் முத்துக்காளை செய்த சாதனைக்கு மத்தியில் புலிக்கு பிறந்தது பூனையாகுமா என்பதை போல் அவருடைய மகன் வாசன் முரளியும் பிளஸ் 2 தேர்வில் சாதித்துள்ளார். 600-க்கு 438 மதிப்பெண்களை பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.
இந்த நிலையில் மகனை நல்ல கல்லூரியில் படிக்க வைத்த முத்துக்காளை நடிகர் சங்கத்திடமும் ஸ்டன்ட் யூனியனிடமும் பேசி வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் பி.காம் இலவசமாக படிக்க வாய்ப்பை பெற்றுத் தந்துள்ளனர்.
மகனுக்கு முத்துக்காளை அட்வைஸ்
இதுகுறித்து முத்துக்காளை கூறியிருப்பதாவது: "என் மகன் கிட்ட தெளிவாகச் சொல்லிவிட்டேன். அதாவது என் அப்பாவுக்கு என்னை படிக்க வைக்க அந்த காலத்துல காசு இல்லை. நீ (மகன்) காலேஜுக்கு போறப்ப கூட என்கிட்ட பணம் பெருசா இல்லப்பா.
4 மனுஷன்கள்
ஏதோ 4 மனுஷங்களை சம்பாதித்து வைத்திருப்பதால் ஃப்ரீ சீட்டு கிடைத்திருக்கு. நடிகர் சங்கமும், ஸ்டன்ட் யூனியனும் பேசுனதுல வேல்ஸ் யூனிவர்சிட்டு சீட்டு கொடுத்திருக்காங்க. அதனால் உன் பையன் (பேரன்) படிக்கும் போதாவது கைல நாலு காசு வச்சிருந்து முடிஞ்சா 4 பேருக்கு உதவுற மாதிரி வரணும் என சொல்லியிருக்கிறேன். அவனும் சரிப்பா என சொல்லியிருக்கான்" என்றார் முத்துக்காளை.
போண்டாமணியின் மகள்
வேல்ஸ் யூனிவர்சிட்டியின் வேந்தர் ஐசரி கணேஷ், சினிமா தயாரிப்பாளர். பல்வேறு நலிந்த கலைஞர்களின் வாரிசுகளுக்கு கல்விச் செல்வத்தை கொடுத்து வருகிறார். போண்டா மணியின் மகள் சாய் குமாரி, பிளஸ் 2 தேர்வில் 400 மதிப்பெண்களை பெற்றார். அவருக்கு ஐசரி கணேஷ் தனது கல்வி நிறுவனத்தில் பிசிஏ படிக்க சீட் கொடுத்திருந்தார். மேலும் உயர்கல்விக்கான செலவையும் ஏற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.















Click it and Unblock the Notifications