பாக முகவர்களுக்கு மட்டன் பிரியாணி விருந்து! மீண்டும் வடசென்னையில் களமிறங்கும் கலாநிதி வீராசாமி!
சென்னை: வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் வடசென்னை மக்களவை தொகுதியில் களமிறங்கும் திட்டத்தில் உள்ள கலாநிதி வீராசாமி, பாக முகவர்கள் கூட்டங்களை நடத்தி மட்டன் பிரியாணி, சிக்கன் 65 என அசைவ விருந்தளித்து கவனித்து வருகிறார்.
2024 நாடாளுமன்றத் தேர்தல் நெருங்குவதால் மீண்டும் சீட் கேட்கும் திட்டத்தில் உள்ள சிட்டிங் எம்.பி.க்கள் பலரும் மிகவும் சின்சியராக தொகுதியை வலம் வர ஆரம்பித்து விட்டார்கள். அந்த வகையில் வடசென்னை தொகுதி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, வடசென்னை தொகுதியில் மீண்டும் களமிறங்கும் திட்டத்துடன் தனது தொகுதியை வலம் வர ஆரம்பித்துள்ளார்.

வடசென்னை மக்களவை தொகுதி திமுக நிர்வாகிகளையும், தொண்டர்களையும் அடிக்கடி சந்தித்து வரும் கலாநிதி, பாக முகவர்கள் கூட்டத்தை தொடர்ச்சியாக நடத்த ஆரம்பித்துள்ளார். மாதவரம் பகுதியில் பாக முகவர்கள் கூட்டம் நடத்தியதுடன் மட்டன் பிரியாணி விருந்தும் கொடுத்திருக்கிறார். அதுமட்டுமல்ல பெரம்பூர் உட்பட தனது தொகுதி முழுவதும் கருணாநிதி நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடத்தி பெண்களுக்கு பரிசுப் பொருட்கள் கொடுத்து வருகிறார்.
கடந்த மார்ச் மாதம் முதலமைச்சர் ஸ்டாலினின் பிறந்தநாளை தடபுடலாக கொண்டாடிய கலாநிதி வீராசாமி வட சென்னை நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட 6,000 திமுகவினருக்கு புத்தாடைகளும், தலைக்கவசமும் வாங்கிக் கொடுத்திருந்தார். அதேபோல் தனது பெயரில் புதிதாக உருவாக்கப்பட்ட செயலியையும் ஆக்டிவாக இயக்கி வருகிறார்.
கலாநிதி வீராசாமியின் நாடாளுமன்ற செயல்பாடுகளை பொறுத்தவரை பெரியளவில் யாரும் குறை கூற முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. கூட்டத் தொடர்களில் முழுமையாக பங்கேற்பது, முக்கியத்துவம் வாய்ந்த கேள்விகளை எழுப்புவது, முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகள் குறித்து மத்திய அமைச்சர்களுக்கு தொடர்ச்சியாக கடிதம் எழுதுவது என ஆக்டிவாக இயங்கி வருவதுடன் திமுக அயலக அணியின் தலைவராகவும் செயல்பட்டு வருகிறார். முதலமைச்சரின் ஜப்பான் பயணத்தின் போது கலாநிதி வீராசாமியும் அதில் இடம்பெற்றது கவனிக்கத்தக்கது.
அண்மைக்கால நடவடிக்கைகளை பார்க்கும் போது வட சென்னையில் கலாநிதி வீராசாமி மீண்டும் போட்டியிடுவது உறுதியாகிவிட்டது போல் தெரிகிறது.












Click it and Unblock the Notifications