#தாயுமானவன்_சீமான்.. வளைச்சு வளைச்சு டிரெண்ட் செய்யும் நாம் தமிழர் கட்சியினர்! என்னவா இருக்கும்?
சென்னை: நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானை பாராட்டி ட்விட்டரில் #தாயுமானவன்_சீமான் என்ற ஹேஷ்டேக்கை நாம் தமிழர் கட்சியினர் டிரெண்ட் செய்து வருகிறார்கள். திடீரென ஏன் டிரெண்ட் ஆகிறது? விரிவாக பார்ப்போம்.
தமிழ்நாட்டில் திமுக, அதிமுகவுக்கு அடுத்தபடியாக அதிக வாக்கு வங்கியை வைத்துள்ள கட்சியாக நாம் தமிழர் பார்க்கப்படுகிறது. அக்கட்சிக்கு ஒரு எம்பி, எம்.எல்.ஏ பதவி இல்லாவிட்டாலும் சீமான் என்ற தனிநபரால் தொடர்ந்து சமூக வலைதளங்களிலும் இளைஞர்கள் மத்தியில் அக்கட்சி அதிகளவில் டிரெண்டிங்கில் உள்ளது.

அதற்கு இணையாக நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானின் கருத்துக்கள் பல்வேறு சர்ச்சைகளையும், விவாதங்களையும் கிளப்பி வருகின்றன. குறிப்பாக கடந்த சில மாதங்களாக அவரது பேச்சுக்களால் எழுந்த சர்ச்சைகள் மிகவும் அதிகம். குறிப்பாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலின்போது அருந்ததியர்கள் என இவர் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இவருக்கு எதிராக அருந்ததியர்கள் பல்வேறு போராட்டங்களை கையில் எடுத்தனர்.
அதேபோல் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்துவர்கள் சாத்தானில் பிள்ளைகளாக மாறிவிட்டார்கள் என்று அவர் கூறியதும் பெரும் விவாதப்பொருளானது. இதற்கு எதிராக சிறுபான்மையின அமைப்புகளும் தலைவர்களும் கண்டனங்களை தெரிவித்தார்கள். அவர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது.
இது தொடர்பாக செய்தியாளர் சந்திப்புகளிலும் சீமான் சர்ச்சைக்குரிய கருத்துக்களையே தொடர்ந்து தெரிவித்து வந்தார். இந்த நிலையில், நேற்று நடிகர் விஜயலட்சுமி சீமான் மீது சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரளித்தார். அப்போது செய்தியாளர் சந்திப்பில் அவர் தெரிவித்த கருத்துக்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.
அன்று இரவே நடிகர் ரஜினிகாந்த் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் காலில் விழுந்ததை ஆதரித்து சீமான் பேசி இருந்தார். இதுவும் அதிகளவில் பகிரப்பட்டு விமர்சனத்துக்கு உள்ளானது. இந்த நிலையில் ட்விட்டரில் தாயுமானவன் சீமான் என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.
25 ஆயிரத்துக்கும் அதிகமான ட்விட்டர் கணக்குகளில் இந்த ஹேஷ்டேக்குடன் சீமானின் வீடியோக்கள், அவர் குறித்த வாழ்த்துக்களை நாம் தமிழர் கட்சியினர் பகிர்ந்து வருகிறார்கள். அந்த ஹேஷ்டேக்கில் வந்துள்ள சில பதிவுகளை பார்ப்போம்.
"ஐயா பழனிபாபாவிற்கு பிறகு இஸ்லாமிய அமைப்புகள் தடை செய்யப்பட்டதற்கு தமிழகத்தில் ஒற்றைய ஆளாக போராடியவர் அண்ணன் சீமான் மட்டுமே..!" என ஜான் பிரிட்டோ என்பவர் குறிப்பிட்டு உள்ளார்.
"தமிழீழ விடுதலை போராட்டம் மௌனித்து போன காலத்தில், தமிழ் தேசிய கருத்தியல், தளம் இனி என்னவாகுமோ என ஈழத்தவர் நாம் கலங்கி நின்ற காலத்தில், தமிழ் தேசிய கருத்தியல் புரட்சியை தமிழனின் பெருந்தாயகமான தாய் தமிழகத்தில் நிகழ்த்தி காட்டியவர் அண்ணன் சீமான்." என சசிகரன் என்பவர் குறிப்பிட்டு உள்ளார்.
"தமிழ் மொழியில் உள்ள பிற மொழி கலப்பு சொற்களை தமிழாக்கப் படுத்தி அதை அதிகம் பயன்படுத்தி மக்களிடையே அறியச் செய்தவர் அண்ணன் சீமான்..!" என பாலு அருணாச்சலம் என்பவர் பதிவிட்டு உள்ளார்.
"இப்படியான ஓர் அரசியலை உருவாக்க எத்தனை மன உறுதி வேணும்னு தெரியுமா.... உங்க அவதூறு எல்லாம் கால் தூசி... தம்பி தங்கைகள் என்றும் அண்ணனுடன் தான்..." என கரோலின் என்பவர் குறிப்பிட்டு இருக்கிறார்.












Click it and Unblock the Notifications