லீவு முடிஞ்சு சென்னை வரும் பயணிகளுக்கு குட் நியூஸ்.. நாகர்கோவில்- தாம்பரம் ஸ்பெஷல் ரயில் நீட்டிப்பு
சென்னை: தம்பரம் டூ நாகர்கோவில், நாகர்கோவில் டூ தாம்பரம் இடையே இயக்கப்பட்டு வந்த வாராந்திர சிறப்பு ரயில் சேவை வரும் நவம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நாகர்கோவிலில் இருந்து ஞாயிற்றுக்கிழமை இந்த ரயில் புறப்படும். இதனால், விடுமுறை முடிந்து சென்னைக்கு கிளம்பும் பயணிகளுக்கு தெற்கு ரயில்வேயின் இந்த அறிவிப்பு மகிழ்ச்சி கொடுத்துள்ளது.
சென்னையில் வசிக்கும் தென் மாவட்ட மக்கள் விடுமுறை நாட்களிலும், கோவில் திருவிழா, பண்டிகை போன்ற நாட்களில் சொந்த ஊர் செல்வது வழக்கம். குறிப்பாக வார இறுதி நாட்களில் சென்னையில் வேலை பார்க்கும் பலரும் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று விட்டு வருகிறார்கள். இதனால், மதுரை, நெல்லை, தூத்துகுடி, நாகர்கோவில் போன்ற தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில், பேருந்துகளில் பயணிகள் கூட்டம் அலைமோதும்.

தாம்பரம் - நாகர்கோவில் ரயில்: சென்னை எழும்பூரில் இருந்து நெல்லை எக்ஸ்பிரஸ், அனந்தபுரி எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், முத்து நகர் எக்ஸ்பிரஸ், முன்பதிவு இல்லாத அந்தியோதயா ரயில் உள்ளிடவை இயக்கப்படுகின்றன. ஆனாலும் பயணிகள் கூட்டம் அதிகமாக இருப்பதால் ரயில்களில் அவ்வளவு எளிதில் டிக்கெட் கிடைத்து விடுவது இல்லை. பேருந்துகளிலும் டிக்கெட்டுகள் வார இறுதி நாட்களில் கிடைப்பதற்கு கொஞ்சம் சிரமப்பட வேண்டியிருக்கும்.
தனியார் ஆம்னி பஸ்களில் கட்டணம் பல மடங்கு அதிக விலையில் இருப்பதால் பயணிகள் வேறு வழியே இலலாதபட்சத்தில்தான் பயணம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. ரயிலில் முன்பதிவு இல்லாத பொதுப்பெட்டிகளிலும் கூட்டம் அலைமோதும். பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக அவ்வப்போது சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்து வருகிறது.
ரயில் சேவை நீட்டிப்பு: அந்த வகையில், சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு திங்கள் கிழமையும், நாகர்கோவிலில் இருந்து சென்னை தாம்பரத்திற்கு ஞாயிற்றுக்கிழமையும் வாரந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. வார விடுமுறை முடிந்து சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்பும் பயணிகளுக்கு இந்த ரயில் மிகவும் பயனுள்ளதாக இருந்து வருகிறது. இந்த நிலையில்தான், இந்த ரயில் சேவையை நீட்டித்து தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
எந்தெந்த தேதிகளில் இயக்கப்படும்?: தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், நாகர்கோவிலில் இருந்து இரவு 11.15 மணிக்கு புறப்பட்டு சென்னை தாம்பரத்திற்கு மறுநாள் காலை 11.15 மணிக்கு புறப்படும் வாராந்திர சிறப்பு ரயில் (வண்டி எண் 06012) நவம்பர் மாதம் வரை நீட்டிக்கப்படுகிறது. அதன்படி, இந்த ரயில் செப்டம்பர் 01, 08, 15, 22, 29, அக்டோபர் 06, 13, 20, 27, நவம்பர் மாதம் 03, 10, 17 ஆகிய தேதிகளில் இயக்கப்படும். மொத்தம் 13 ரயில் சேவைகள் இயக்கப்படும். நவம்பர் மாதம் வரை ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் இந்த சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
நின்று செல்லும் இடங்கள்: மறுமார்க்கத்தில் தாம்பரத்தில் இருந்து நவம்பர் 25 ஆம் தேதி வரை ஒவ்வொரு திங்கள் கிழமையும் இயக்கப்படும். இந்த ரயில் (வண்டி எண்: 06011) தாம்பரத்தில் இருந்து மாலை 3.30 மணிக்கு புறப்படும் ரயிலானது நாகர்கோவிலுக்கு அதிகாலை 3.45 மணிக்கு சென்று சேரும். இந்த ரயில், செங்கல்பட்டு , விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில் பட்டி, திருநெல்வேலி, வள்ளியூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.












Click it and Unblock the Notifications