கூட்டணியில் கடைசி நேரத்தில் கூட மாற்றங்கள் வரலாம் - நயினார் நாகேந்திரன்
சென்னை: கூட்டணிக் கட்சித் தலைவர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்துப் பேசுவது நல்ல விஷயம் என்றும், தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்கள் இருக்கிறது. கடைசி நிமிடங்களில் கூட மாற்றம் வரலாம் என்றும் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடியின் 75 ஆவது பிறந்த நாள் இன்று அக்கட்சியினரால் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. பிரதமரின் பிறந்த நாளை முன்னிட்டு, திருவான்மியூர் கடற்கரையில் பா.ஜ.க. சார்பில் தூய்மை பாரதம் என்ற பெயரில் கடற்கரையை தூய்மைப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தொடங்கி வைத்து பங்கேற்றார்.

2026 தேர்தல்
2026 சட்டமன்ற தேர்தல் அறிவிப்புக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ளது. தமிழக அரசியல் களம் இப்போதிருந்தே சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. திமுக கூட்டணி தலைமையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியும், அதிமுக தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணியும் களம் காண்கின்றன. இதனுடன் தவெக, நாம் தமிழர் கட்சிகளும் போட்டியில் உள்ளனர்.
அதிமுக கூட்டணி
நாம் தமிழர் கட்சி தனித்து போட்டி என்று அறிவித்துவிட்டனர். தவெக சார்பில் கூட்டணி அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. திமுக கூட்டணியுடன் ஒப்பிடும்போது, அதிமுக - பாஜக கூட்டணியில் உள்ள கட்சிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவு. ஆனால் அதிமுக கூட்டணியில் தினசரி பல்வேறு பிரச்சனைகள் வெடித்து கொண்டிருக்கிறது.
விமர்சனம்
ஓ.பன்னீர்செல்வம், டிடிவி. தினகரன் கூட்டணியில் இருந்து வெளியேறியது, பிரிந்தவர்களை ஒன்றிணைக்க முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கெடு விதித்தது, ஜான் பாண்டியன், கிருஷ்ணசாமி உள்ளிட்ட தலைவர்களின் விமர்சனம் என்று நெருக்கடிகளால் சூழ்ந்துள்ளனர். அது அந்தக் கூட்டணிக்கு பின்னடைவை ஏற்படுத்தி வருகிறது.
அதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மத்திய அமைச்சர் அமித்ஷா மற்றும் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு என்பது கூட்டணி கட்சித் தலைவர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்து பேசுவது நல்ல விஷயம் தான். எதிர்க்கட்சி தலைவர்கள் சந்தித்தால் தான் பிரச்சனை இருக்கும். அதிமுகவை 4 ஆண்டுகள் காப்பாற்றியது பாஜகதான் என்பதை எந்த அர்த்தத்தில் சொன்னார் என்று தெரியவில்லை.
டிடிவி தினகரன் விமர்சனம்
தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் இருந்தபோது மத்திய அரசின் மூலம் ரூ. 40 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை தமிழகத்திற்கு பெற்று தந்தார். டி.டி.வி. தினகரன் எதற்காக பா.ஜ.க.வையும், என்னையும் விமர்சனம் செய்கிறார் என்று எனக்குத் தெரியவில்லை. ஸ்ரீவில்லிபுத்தூரில் என்னை நண்பர் என்று சொன்னார். 30 ஆண்டு காலம் எனக்கு டி.டி.வி. தினகரன் நண்பர். அரசியலில் எல்லாருமே எனக்கு நண்பர்கள் தான் என்றார்.
எடப்பாடி அமித்ஷா சந்திப்பு
தொடர்ந்து, பட்டினப்பாக்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பாஜக என்றுமே மற்ற கட்சிகளின் பிரச்சனையில் தலையிடாது. பஞ்சாயத்தும் செய்யாது. நல்ல விஷயங்களுக்காக எது வேண்டுமானாலும் செய்வார்கள். எடப்பாடி பழனிசாமியும் அமித்ஷாவும் சந்தித்துப் பேசுவதில் எந்தத் தவறும் இல்லை.
மாற்றம் வரலாம்
தமிழக சட்டப் பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்கள் இருக்கின்றன. கடைசி நிமிடங்களில் கூட மாற்றம் வரலாம். பா.ம.க., அ.தி.மு.க. கட்சிகளில் பிரச்சனைகள் உள்ளன. புயலுக்குப் பிறகுதான் அமுத மழை பொழியும். அதுபோல பிரச்சனைக்கு பிறகு நல்ல தீர்வு கிடைக்கும் என்றார்.












Click it and Unblock the Notifications