அகங்காரம் ஒழிந்தது, அங்கீகாரம் நிலைத்தது.. லோக்சபா தேர்தல் தோல்விக்கு என்ன காரணம்.. நமது அம்மா
சென்னை: பாஜகவுக்கு எதிராக திமுகவினர் செய்த பொய் பிரச்சாரங்களிலேயே பாஜக கூட்டணி தோல்வி அடைந்ததாக நமது அம்மாவில் செய்தி வெளியானது.
லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் அதிமுக கூட்டணிக்கு மக்கள் பேரிடியை இறக்கிவிட்டார்கள். இதுகுறித்து நமது அம்மா நாளிதழில் தலையங்கம் தீட்டியுள்ளது.
அந்த தலையங்கத்தில் கூறுகையில், எடப்பாடியார் ஆட்சி தொடர ஆதரவும், அங்கீகாரமும் வழங்கியிருக்கிறது தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலோடு நடைபெற்ற 22 சட்டசபை தொகுதிகளின் இடைத்தேர்தல்.
இந்தியாவில் ஒரே கட்சி.. திமுக மட்டும்தான் இனி போட்டி.. பாஜகவிற்கு அதிர்ச்சி தரும் புள்ளி விவரம்!
|
அங்கீகாரம்
மனசாட்சி துளியும் அற்ற அவதூறுகள், கோடான கோடி பணத்தை வாரி இறைத்த திமுகவின் ஸ்பெக்ட்ரம் பணம், உள்நோக்க ஊடகங்களின் உண்மைக்கு மாறான புரளிகளுடனான பிரச்சாரம், அனைத்தையும் தகர்த்து கழகம் பெற்றிருக்கும் வெற்றி எடப்பாடியார் அரசின் இரண்டாண்டு கால இடையறாத உழைப்புக்கும் மக்கள் தொண்டுக்கும் கிடைத்திட்ட மகோன்னத அங்கீகாரம் ஆகும்.
பொய் பிரசாரம்
அதே வேளையில் தொடர்ந்து மத்திய பாஜக ஆட்சிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் முன்னெடுத்த எதிர்ப்பு பிரச்சாரம், காங்கிரஸ், திமுக, ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட தமிழகம் எதிர்க்கும் திட்டங்களான மீத்தேன், ஹைட்ரோ கார்பன், ஜிஎஸ்டி, நீட் உள்ளிட்ட அனைத்திற்கும் பாஜக ஆட்சியே காரணம் என்பதாக தொடர்ந்து அவர்கள் முன்னெடுத்த பொய் பிரச்சாரம் நாடாளுமன்றத் தேர்தலில் நமக்கு பலத்த பின்னடைவை தந்திருந்தாலும் சுட்டு விரல் நீட்டி குறை கூறுவதற்கு வழியில்லாத அளவுக்கு ஓடி ஓடி உழைத்திட்ட சாமானியத் தலைமையான இபிஎஸ், ஓபிஎஸ் இணைகரத்து அரசு தொடர்ந்து தமிழகத்திற்கு சேவையாற்றுவதற்கான வாய்ப்பையும், வாழ்த்துகளையும் தமிழக மக்கள் இடைத்தேர்தல் வாயிலாக மனதார தந்திருக்கிறார்கள்.
தமிழ் பூமி
இதன் மூலம் மத்தியில் அமையும் நமது கூட்டணி கட்சியான பாஜகவின் ஆட்சியை பயன்படுத்தி தமிழகத்திற்கான நீண்ட கால தேவைகளை தொடர்ந்து நிறைவேற்றி கொள்ளவும், தமிழக மக்கள் விரும்பாத திட்டங்களில் மத்திய அரசு இதுகாறும் கொண்டிருக்கும் உறுதியை தளர்த்தி தமிழக மக்களின் மனம் குளிரும் வகையிலான முடிவுகளை மேற்கொண்டு எதிர்காலத்தில் அன்னை தமிழ் பூமியின் ஆதரவையும் தன்வயப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை வரலாற்றில் மேலும் ஒரு சாதனையாக ஆட்சியில் இருந்து கொண்டே தொடர்ந்து மூன்றாம் முறையாக ஆட்சியை தொடருகிறது பொது வாழ்க்கை புரட்சியை புறநானூற்று தமிழ் மண்ணில் நிகழ்ச்சி காட்டிடவும் ஒன்றரை கோடி சிப்பாய்களும் உளமார உறுதி ஏற்போம்.
அரசியல் வாழ்வு
அதே வேளையில் கழகத் தொண்டர்களின் உதிரத்தை உறிஞ்சிக் கொழுத்த மாஃபியா கும்பலின் தலைவனான திகார்கரனின் மாய பிம்பம் இத்தேர்தலில் உடைந்து நொறுங்கி இருக்கிறது. அமமுக கட்சியை ஓர் அரசியல் இயக்கமாகவே அங்கீகரிக்க தமிழக மக்கள் மறுத்திருக்கிறார்கள். கொள்ளையடித்து வைத்திருக்கும் பணத்தைக் கொண்டு ஆர் கே நகர் தொகுதியை விரோதிகளின் துணையோடு விலைபேசி வாங்கியதை போல் ஒட்டுமொத்த தமிழகத்தையும் டோக்கன் கொடுத்து ஆக்கிரமித்து விடலாம் என மமதை கொண்டு அலைந்த தினகரனின் அரசியல் வாழ்வுக்கு முடிவு கட்டியுள்ளார்கள்.
தேர்தல் முடிவுகள்
அதிமுக வெற்றியையோ தோல்வியையோ தீர்மானிக்கிற சக்தி டோக்கன் செல்வர் அல்ல என்பதை அடித்துச் சொல்லியிருக்கிறது ஒட்டுமொத்த தேர்தல் முடிவுகள். மேலும் மகராசி அம்மா மடி வளர்த்த இயக்கம் இபிஎஸ், ஓபிஎஸ் வழிநடத்தும் இரட்டை இலை கொண்ட இயக்கம் தான் என்பதையும் இத்தேர்தல் முடிவுகள் உறுதிபடுத்தியிருக்கின்றன என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.