எடப்பாடி வெர்சஸ் ஓபிஎஸ், நமது அம்மா Vs நமது புரட்சித் தொண்டன்.. பன்னீர் அணியின் புதிய நாளிதழ்
சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அணியினர் நமது புரட்சித் தொண்டன் என்ற பெயரில் நாளிதழை அறிமுகம் செய்துள்ளனர்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவர்களில் முதலிடம் ஓபிஸ்ஸுக்குத்தான். ஜெயலலிதா பல்வேறு வழக்குகளில் சிறை செல்ல நேரிட்ட போதெல்லாம் ஓபிஎஸ்ஸை முதல்வராக்கிவிட்டுத்தான் செல்வார்.

அந்த அளவுக்கு ஓபிஎஸ் மீது நம்பிக்கை. அது போல் காலம் காலமாக ஓபிஎஸ்தான் அதிமுக பொருளாளராகவும் இருந்து வந்தார். கிட்டதட்ட ஜெயலலிதாவின் அரசியல் வாரிசாகவே ஓபிஎஸ்ஸை அவருடைய ஆதரவாளர்கள் கருதினர்.
ஜெயலலிதா 2016 ஆம் ஆண்டு இறந்த போது கூட ஓபிஎஸ்ஸையே சசிகலா முதல்வராக்கினார். அதன்பின்னர் அதிமுக பொதுச் செயலாளரான சசிகலா முதல்வராக ஆசைப்பட்டார். இதற்காக ஓபிஎஸ்ஸை சசிகலா முதல்வர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ய கூறினார். அவரும் செய்தார்.
பின்னர் சசிகலாவை எதிர்த்து தர்மயுத்தம் நடத்தினார். இவரது பின்னால் கணிசமானவர்கள் திரண்டனர். இந்த நிலையில் அதிமுக இரு அணிகளாக பிரிந்ததால் இரட்டை இலை முடக்கப்பட்ட நிலையில் அதிமுகவின் இரு அணிகளும் ஒன்று சேர்ந்தன. இதையடுத்து சசிகலா, தினகரனை நீக்கிவிட்டு இவர்கள் ஒன்று சேர்ந்துவிட்டனர்.

அது போல் சசிகலாவுக்கு வழங்கப்பட்ட பொதுச் செயலாளர் பதவியும் டிடிவி தினகரனுக்கு வழங்கப்பட்ட துணை பொதுச் செயலாளர் பதவியும் பறிக்கப்பட்டது. மேலும் நிரந்தர பொதுச் செயலாளர் ஜெயலலிதா என கூறி அந்த பதவியை நீக்கிவிட்டு அந்த பதவிக்கு நிகரான அதிகாரங்கள் கொண்ட ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை ஏற்படுத்தினர்.
அதில் ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ்ஸும் இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் இருந்தனர். இந்த நிலையில் 2019 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி படுதோல்வி அடைந்தது. போட்டியிட்ட எல்லா தொகுதிகளிலும் தோற்ற அதிமுக, தேனி மாவட்டத்தில் மட்டும் வென்றது. அங்கு ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் வென்றார்.
இதனால் தென் தமிழகத்தில் ஓபிஎஸ் தனது மகனின் தொகுதியை தவிர வேறு எங்கும் பணியாற்றவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. இந்த தோல்வி அடுத்தடுத்த தேர்தல்களிலும் தொடர்ந்தது. இந்த நிலையில்தான் அதிமுகவில் ஒற்றைத் தலைமை குறித்த பேச்சு எழுந்தது. அப்போது எடப்பாடி பழனிசாமி பக்கம் பொதுக் குழு உறுப்பினர்கள் திரண்டனர்.
இதையடுத்து எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச் செயலாளராக தேர்வு செய்தனர். அதிமுக பொதுக் கூட்டத்தில் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி தேர்வு செய்யப்பட்ட போதே ஓபிஎஸ் உள்ளிட்டோர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். இந்த நிலையில் பொதுச் செயலாளர் தேர்வை எதிர்த்து ஓபிஎஸ் கோர்ட்டுக்கு போயும் எதுவும் நடக்கவில்லை.
இந்த நிலையில் அதிமுகவை மீட்க ஓபிஎஸ் போராடி வருகிறார். ஆனால் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிதான் என தேர்தல் ஆணையமே அங்கீகாரம் கொடுத்துவிட்டது. இந்த நிலையில் தினகரனை ஒதுக்கியதால் அதிமுகவுக்கென நமது அம்மா எனும் நாளிதழும் நியூஸ் ஜெ எனும் தொலைகாட்சி சேனலும் தொடங்கப்பட்டது.
அது போல் தற்போது நமது புரட்சித் தொண்டன் என்ற நாளிதழை ஓபிஎஸ் அணியினர் தொடங்கி வைத்துள்ளனர். சென்னை எழும்பூரில் உள்ள அசோகா ஓட்டலில் நடந்த நிகழ்ச்சியில் முதல் பிரதியை மூத்த நிர்வாகி பண்ருட்டி ராமசந்திரன் வெளியிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications