Nanjil Sampath: விஜய் அனுபவம் குறைந்தவர்.. குறை உள்ளது.. நாஞ்சில் சம்பத் தடாலடி பேச்சு
சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களத்தில் உச்சகட்ட பரபரப்பு நிலவி வருகிறது. கூட்டணிகள், தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டு வருகின்றன. தவெக தலைவர் விஜய்யின் செயல்பாடு சர்ச்சையாகி வருகிறது. இந்நிலையில் அந்தக் கட்சியின் நிர்வாகி நாஞ்சில் சம்பத், எங்கள் தலைவர் அனுபவம் குறைந்தவர். அவரின் செயல்பாடுகளில் குறை உள்ளது என்று பேசியுள்ளார்.
சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்ற தவெக கூட்டத்தில் பேசிய அந்தக் கட்சியின் நிர்வாகி நாஞ்சில் சம்பத், "தமிழ் சினிமாவிற்கு உலக அங்கீகாரம் கிடைக்கும் என்றால் அதை கமல்ஹாசன் வாங்கி தருவார் என்று நம்பியவன் நான். தொலைக்காட்சி பெட்டியை உடைத்தார். திமுக மீது தீரா கோபத்தை வெளிப்படுத்தினார். கட்சிக்கு மக்கள் நீதி மய்யம் என்று பெயரிட்டார் [Nanjil Sampath].

கமல், ரஜினி மீது விமர்சனம்
தற்போது அந்தக் கட்சி அறிவாலயம் வாசலில் இப்போது சாகுமா, எப்போது சாகுமா என இழுத்துக் கொண்டிருக்கிறது.திமுக, அதிமுகவுக்கு மாற்றம் என்று வேகமாக புறப்பட்டவர்கள் எல்லாம் பாதியிலேயே முடங்கிவிட்டனர். சிலபேர் அடங்கிவிட்டனர். ஆன்மிக அரசியல், லேட்டாக வந்தாலும்.. லேட்டஸ்டாக வருகிறேன் என்று சொன்னார் சூப்பர் ஸ்டார்.
அவர் அரசியலுக்கே வரவில்லை. சூப்பர் ஸ்டாரால் முடியாததை எங்கள் ஸ்டார் விஜய் செய்துள்ளார். இந்தக் கூட்டம் ஓட்டாக மாறுமா என சீட்டாடும் சின்ன பையன் எல்லாம் கேட்கிறார்கள். இது ஓட்டாக மட்டுமல்ல, வேட்டாகவும் மாறும் என்பதை நாங்கள் நிரூபிப்போம். எங்கள் தலைவர் அனுபவம் குறைந்தவர் தான்.
விஜய் மீது குறை
அவரிடம் குறை இருக்கிறதா என்றால் குறை இருக்கிறது என இந்த சபையிலேயே கூறுகிறேன். நீரில் பாசி இல்லையா, நிலவில் கலங்கம் இல்லையா அதேபோல தான் இதுவும். அதற்காக எங்கள் தலைவரின் வருகை இவர்களை ஏன் ஆத்திரப்படுத்துகிறது. ஏன் நிதானம் இழந்து பேசுகிறார்கள். ஏன் தனி மனித விமர்சனங்களை முன்னெடுக்கிறார்கள்.
ஏன் கண்ணாடி வீட்டில் இருந்து கல் எறிகிறீர்கள். திருப்பி எறிந்தால் தாங்குவீர்களா. மிக மோசமான.. மட்டமான அரசியலை கையில் எடுத்துள்ளனர். இது அநியாயமாக உள்ளது. எங்களின் அணுகுமுறையை தவறு இருந்தால் சொல்லுங்கள். அண்ணன் ஓபிஎஸ் திமுகவில் இணைந்துள்ளார். அவருக்கு ஏதோ பொறுப்பு கொடுக்க போவதாக சொல்கிறார்கள். ஓபிஎஸ் இந்த இமாலய தவறை செய்திருக்க கூடாது" என்றார்.












Click it and Unblock the Notifications