கருணாநிதி பிறந்தநாள் கொண்டாட்டங்கள் வேண்டாம்.. ஏழைகளுக்கு உதவுங்கள்.. முதல்வர் ஸ்டாலின் கடிதம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வரும் ஜூன் 3ஆம் தேதி முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாள் கொண்டாடப்படவுள்ள நிலையில், கொரோனா பரவல் காரணமாகப் பொதுவெளியில் கொண்டாட்டங்கள் வேண்டாம் என்றும் கொரோனா வழிகாட்டுதல்களைக் கடைப்பிடித்து எளிமையாகக் கொண்டாட வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாள் வரும் ஜூன் 3ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. ஸ்டாலின் முதல்வராகப் பொறுப்பெற்ற பிறகு, வரும் முதல் பிறந்தநாள் என்பதால் திமுக தொண்டர்களுக்கு மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.

இந்நிலையில், கொரோனா பரவல் காரணமாகப் பொதுவெளியில் கொண்டாட்டங்கள் வேண்டாம் என்றும் கொரோனா வழிகாட்டுதல்களைக் கடைப்பிடித்து எளிமையாகக் கொண்டாட வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலின்கேட்டுக்கொண்டுள்ளார்.

ஸ்டாலின் கடிதம்

ஸ்டாலின் கடிதம்

இது தொடர்பாக திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் இன்று அக்கட்சியின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், "ஜூன் 3 ஆம் தேதி தலைவர் கருணாநிதியின் பிறந்தநாள். ஐந்து முறை மொத்தம் 19 ஆண்டுகள் தமிழகத்தின் முதலமைச்சராக இருந்து ஒவ்வொரு முறையும் உயர்தனிச் செம்மொழியாம் தமிழையும், உயிரனைய தமிழர்களையும் உயர்த்தியவருக்கு ஆறாவது முறையாக முதலமைச்சராகும் வாய்ப்பு அமையாமல் போனாலும், ஆறாவது முறையாக தி.மு.க. ஆட்சிப் பொறுப்புக்கு வந்திருக்கும் இன்றைய நிலையில், உடன்பிறப்புகளாம் உங்கள் ஒவ்வொருவரின் உள்ளத்திலும் ஊற்றெடுக்கும் மகிழ்ச்சியை, மனநிறைவை உங்களில் ஒருவனான நான் நன்கறிவேன்.

மக்கள் நலன்

மக்கள் நலன்

கட்சியினர் மட்டுமல்ல, இந்த ஆட்சி மாற்றத்திற்குக் காரணமான தமிழக மக்களின் நெஞ்சத்திலும் ஒரு நிம்மதி ஏற்பட்டிருக்கிறது. இருண்ட காலத்தை விரட்டியடித்து, சூரியன் உதித்திருப்பதால் நாளைய பொழுதுகள் எல்லாம் நல்லதாகவே விடியும் என்கிற நம்பிக்கை பிறந்திருக்கிறது. அனைவருக்குமான ஆற்றல்மிகு அரசு இது என்பதை அவர்கள் ஒவ்வொரு நாளும் உணர்கிறார்கள். இது கருணாநிதி வடித்துத் தந்த வழியில் மக்கள் நலன் காக்கும் அரசு என்பதைக் கட்சி அரசின் ஒவ்வொரு செயல்பாட்டின் வாயிலாகவும் அறிந்து கொள்கிறார்கள்.

கருணாநிதி பிறந்தநாள்

கருணாநிதி பிறந்தநாள்

கடந்த ஆண்டு நாம் எதிர்க்கட்சியாக இருந்தபோதும், இதேபோல கொரோனா கால ஊரடங்கு காரணமாக கருணாநிதி பிறந்தநாளை மிக எளிய முறையிலே தான் கொண்டாடினோம். ஓராண்டுக்குள் நிலைமை மாறும் என எதிர்பார்த்தோம். அதனால், தி.மு.க. ஆட்சி அமைந்த முதல் ஆண்டில் கருணாநிதி பிறந்தநாளை எப்படியெல்லாம் கொண்டாடுவது என்று மனதளவில் நீங்கள் திட்டமிட்டிருப்பீர்கள் என்பதை உங்களில் ஒருவனான என்னால் உணர்ந்து கொள்ள முடிகிறது.

விழா வேண்டாம்

விழா வேண்டாம்

ஆனாலும், கொரோனா ஊரடங்கு காலம் என்பதால் பொதுவெளியில் கருணாநிதி பிறந்தநாள் விழா நிகழ்வு எதுவும் நடத்திட வேண்டாம். கட்சியை நிறுவிய பேரறிஞர் அண்ணா நமக்கு வழங்கிய முத்தான மூன்று அன்புக் கட்டளைகள், 'கடமை - கண்ணியம் - கட்டுப்பாடு' ஆகியவையாகும். இந்த மூன்றில் மிக முக்கியமானது, 'கட்டுப்பாடு' என்பதை கருணாநிதி பல முறை நமக்கு வலியுறுத்தியிருக்கிறார்.

வீடுகளில்

வீடுகளில்

நம் உள்ளமெல்லாம் நீக்கமற நிறைந்துள்ள கருணாநிதியின் பிறந்தநாளில் கட்டுப்பாடு காத்து, அவரவர் இல்லங்களில் கருணாநிதியின் உருவப் படத்திற்கு மரியாதை செலுத்திக் கொண்டாடுங்கள். அவர் கொள்கைகளை நெஞ்சில் ஏந்தி, ஊரடங்கில் உணவு உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளை எதிர்பார்த்திருக்கும் ஏழை, எளிய மக்களுக்கு அவர்களின் இருப்பிடம் சென்று உதவிகளை வழங்கிடுங்கள்.

ஏழைகளுக்கு உதவுங்கள்

ஏழைகளுக்கு உதவுங்கள்

நலன் காக்கும் உதவிகளைச் செய்வதற்கேற்ப, அதிகாரிகளிடம் உரிய அனுமதி பெற்று, முகக் கவசம், தனி மனித இடைவெளி உள்ளிட்ட கொரோனா பேரிடர் கால நெறிமுறைகளைச் சரியாகக் கடைப்பிடித்து, எவ்வகையிலும் கூட்டம் சேர்ந்திடாதவாறு கவனமாகச் செயலாற்றுங்கள். ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்பதே பேரறிஞர் அண்ணாவின் தம்பியான கருணாநிதியின் பிறந்தநாள் விழாவுக்கான செயல்திட்டமாக அமையட்டும். மக்கள் நலன் காத்து பேரிடரை வெல்வோம்" என்று அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+