நீட் விவகாரத்தால் வெடித்த சர்ச்சை: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் டெல்லி பயணம் திடீர் ரத்து
சென்னை: நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரும் தமிழக சட்டசபை தீர்மானத்தை திருப்பி அனுப்பியதால் சர்ச்சையில் சிக்கியிருக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி தமது டெல்லி பயணத்தை திடீரென ரத்து செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, நாகாலாந்து ஆளுநராக பதவி வகித்த போதும் சர்ச்சையில் சிக்கினார். நாகாலாந்து மாநில அரசின் நிர்வாகத்தில் தலையிட்டதால் அவருக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது.
இதனால் தமிழகத்துக்கு ஆளுநராக ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டார். இதனை நாகாலாந்து பொதுமக்கள், அரசியல்வாதிகள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். தமிழகத்துக்கு ஆளுநராக ஆர்.என்.ரவி பொறுப்பேற்றது முதலே அவரது நடவடிக்கைகள் கவனத்தை ஈர்த்தன.
சமூக நீதிக்கு எதிரானது.. நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்ப ஆளுநர் ரவி சொன்ன காரணம் என்ன தெரியுமா?
5 மாதங்களாக கிடப்பில்...
இந்நிலையில் தமிழக சட்டசபையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு கோரும் மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதனை ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்க வேண்டிய கடமை மட்டும்தான் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு உள்ளது. ஆனால் இம்மசோதாவை அனுப்பி வைக்காமல் 5 மாதங்களாக கிடப்பில் போட்டிருந்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி.
திருப்பி அனுப்பினார்
இதனால் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று மசோதாவை டெல்லிக்கு அனுப்பி வைக்கவும் கேட்டுக் கொண்டிருந்தார். ஆனால் 5 மாதமாக கிடப்பில் போட்டு வைத்திருந்த மசோதாவை திடீரென தமிழக சட்டசபை சபாநாயகருக்கே திருப்பி அனுப்பினார் ஆளுநர் ரவி. இது தமிழகத்தில் மிகப் பெரும் சர்ச்சையானது. ஆளுநர் ஆர்.என்.ரவியின் இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன.
வெடித்த போராட்டங்கள்
மேலும் ஆளுநர் ஆர்.என்.ரவியை மத்திய அரசு உடனே திரும்பப் பெற வேண்டும் என்கிற கோரிக்கையும் வலுத்தது. தமிழக ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டங்கள், அவரது உருவப் படம் எரிப்பு போராட்டம் என கொந்தளித்தது தமிழகம். தமிழகத்துக்கு ஆளுநர் பதவியே தேவை இல்லை என்கிற முழக்கமும் உரத்து கேட்டது. இந்த நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி 3 நாட்கள் பயணமாக டெல்லி செல்வதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.
டெல்லி பயணம் ரத்து
இதனிடையே தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க கோரும் மற்றொரு தீர்மானத்தை நிறைவேற்ற தமிழக சட்டசபையின் சிறப்பு கூட்டம் நாளை கூடுகிறது. இந்த பின்னணியில் திடீரென தமது டெல்லி பயணத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி ரத்து செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னர் ஆளுநர் ரவி டெல்லி செல்லக் கூடும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.