Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கட்சி பெயரை மறந்த அண்ணாமலை... ட்ரோல் ஆகும் தமிழருவி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழருவி மணியனுடன் சேர்ந்து தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் கண்டெண்ட் ஆகி இருக்கிறது.

அண்ணாமலை நேற்று தமிழருவி மணியனைச் சந்தித்தபோது எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்றை அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். அந்தப் பதிவில் அவர், "கர்மவீரர் காமராஜரால் "தமிழருவி" பட்டத்தை வழங்கப் பெற்றவர். தனது வசீகரிக்கும் தமிழாலும் கம்பீர சொற்பொழிவுகளாலும் தமிழக மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கும் அப்பழுக்கற்ற அரசியல்வாதி.

Netizens are trolling the meeting between Tamilaruvi Manian and Annamalai

கட்சியின் பெயரை மறந்த அண்ணாமலை:

தமிழக அரசியலின் முன்னோடி, எளிமையின் இலக்கணமாக விளங்குபவர். 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஓய்வறியாமல் மக்கள் பணிகளை ஆற்றி வரும் காந்திய மக்கள் இயக்கத்தின் நிறுவனத் தலைவர் அய்யா தமிழருவி மணியன் அவர்களை இன்று சந்தித்ததில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்தச் சந்திப்பின் பின்னணி என்ன? அவர்கள் இருவரும் என்ன பேசிக் கொண்டார்கள் என்பது குறித்து அண்ணாமலை தனது பதிவில் எதையும் குறிப்பிடவில்லை.

அரசியல் களத்தில் இதைப் போன்ற சந்திப்புகள் வழக்கமானதுதான். ஆனால், தமிழருவியை அண்ணாமலை சந்தித்த இந்தச் செய்தி, இணையவாசிகளுக்கு 'இனிப்பான' செய்தியாக மாறிவிட்டது. ஆகவே அதை வைத்து தமிழருவி மணியனை ட்ரோல் செய்யத் தொடங்கி உள்ளனர்.

கடந்த 2022 ஜூலை மாதமே தனது இயக்கத்தின் பெயரை 'காந்திய மக்கள் இயக்கம் இனி காமராஜர் மக்கள் இயக்கமாகச் செயல்படும்' என்று தமிழருவி மணியன் அறிவித்துவிட்டார்.

ஆனால், அண்ணாமலை அதை மறந்துவிட்டு பழைய காந்திய மக்கள் இயக்கத் தை குறிப்பிட்டே தனது பதிவை வெளியிட்டிருக்கிறார். தமிழருவி தனது கட்சியின் பெயரை மாற்றியதைக்கூட அண்ணாமலை தெரியவில்லையா என்றும் சிலர் கேள்வி எழுப்பிவருகின்றனர்.

Netizens are trolling the meeting between Tamilaruvi Manian and Annamalai

ஒவ்வொரு தேர்தலின்போதும் தமிழருவி மணியன் தனக்கு என்று ஒரு புதிய அரசியல் நிலைப்பாட்டை எடுப்பார். அவர் எடுக்கும் நிலைப்பாட்டிற்குள் திமுகவைத் தோற்கடிக்கும் அரசியல் கணக்கு நிச்சயம் இடம்பெற்றிருக்கும்.

திமுகவை மட்டுமே எதிர்க்கிறீர்களே என்று கேள்வி எழுப்பினால், 'இரண்டு திராவிடக் கட்சிகளும் தமிழ்நாட்டிலிருந்து முற்றிலுமாக துடைத்து எறியப்பட வேண்டும்' என்பதுதான் என் நிலைப்பாடு என்று விளக்கம் அளிப்பார்.

ஆனாலும் அவர் திமுகவை விமர்சிப்பதைப் போன்று மிகக் கடுமையாக அதிமுகவை விமர்சித்ததில்லை என்றே பலரும் கூறிவருகின்றனர்.

ஒவ்வொரு தேர்தலுக்கும் ஒவ்வொரு முதல்வர்:

இதற்கு முன்னதாக வைகோவை முதல்வர் ஆக்குவேன் என்று ஒரு முடிவை எடுத்தார் தமிழருவி மணியன். அதற்காக மேடைகளில் மணிக்கணக்காகப் பிரச்சாரம் செய்யவும் செய்தார்.

வைகோ மக்கள் நலக்கூட்டணி அமைத்தபோது தமிழருவி மணியன் அதை ஆதரிக்காமல் தனியாகக் கூட்டணி அமைத்தார். வைகோவை விரும்பிய அவர் அந்தக் கூட்டணிக்குப் போகாமல் தவிர்த்ததைக் கண்டு பலரும் அதிர்ச்சியடைந்தனர். அதன்பின்னர் அந்தக் கணக்கு எல்லாம் கானல் நீராக மாறிவிடவே, ரஜினியை முன்வைத்து ஒரு புதிய கூட்டணியை உருவாக்க முயன்றார். அதற்கு அவரே ஆலோசகராக இருந்தார்.

காந்தி, காமராஜர் எனப் பேசி வந்தவர் இறுதியில் ரஜினியை முன்வைத்துப் பேசிய அரசியல் பேச்சுக்கள் மிகக் கடுமையாக விமர்சிக்கப்பட்டன. அதன் பிறகு ரஜினி, தனது கட்சி ஆரம்பிக்கும் திட்டத்தைக் கைவிட்டார். இறுதியாக அமைதி நிலைக்குச் சென்ற தமிழருவி, மீண்டும் ரஜினியை நம்பி தான் ஏமாந்துவிட்டதாக வெளிப்படையாகப் பேச ஆரம்பித்தார்.

'நானா ரஜினி வீட்டுக்குத் தேடிப் போனேன். அவருக்கு நானா போய் காவடி தூக்கினேன்? ரஜினிதான் தன் வீட்டைத் தேடிவந்து அழைத்தாரே தவிர, நான் ரஜினி வீட்டுக்குப் போய் வாய்ப்புக் கேட்கவில்லை' என்றும் பேட்டி அளித்தார். அதன்பிறகு அவருக்கும் ரஜினிக்குமான தொடர்பு இல்லாமல் போனது.

அதனைத் தொடர்ந்துதான் சமீப காலமாக அவர் பாஜகவை ஆதரவாளராகச் செயல்படத் தொடங்கினார். கடந்தகால வரலாற்றைத் திரும்பிப் பார்க்கும்போது தமிழருவியின் அரசியல் கூட்டணியை மக்கள் இதுவரை ஏற்றுக் கொள்ளவே இல்லை.

கடந்த காலங்களில் 'எங்கள் கூட்டணியை மக்கள் ஏற்கவில்லை என்றால் நான் அரசியலைவிட்டே ஒதுங்கிவிடுவேன்' என்றார். ஆனால் கூட்டணி படுதோல்வி யை சந்தித்தபோதும் அரசியலைவிட்டு தமிழருவி விலகவில்லை.

Netizens are trolling the meeting between Tamilaruvi Manian and Annamalai

அண்ணாமலை மீதான விமர்சனங்கள்:

அதன்பிறகு ரஜினி அரசியல் கனவு காலியான போதுகூட 'இனிமேல் அரசியல் வாழ்க்கையே இல்லை' என்று சொல்லிவிட்டுப் போனவர் தமிழருவி மணியன். மீண்டும் இப்போது பாஜகவை ஆதரித்துத் தேர்தல் களத்திற்குத் திரும்பி இருக்கிறார்.

அதிலும் அவரது நிலைப்பாடு உறுதியானதாக இருந்ததில்லை. கடந்த 4 மாதங்கள் முன்புகூட ஒரு தொலைக்காட்சி நேர்காணலில் தமிழருவி மணியன் "அண்ணாமலையைத்தான் முதல்வராக்க வேண்டும் என்று எழுதி வச்சிருக்கா என்ன?. அவரை முதல்வராக்குங்கள் என்று நான் சொன்னேனா? ஊழலை எதிர்த்து யார் புறப்பட்டாலும் அவர்களை நான் ஆதரிப்பேன்" என்று பேசியிருந்தார். அண்ணாமலை 20 ஆயிரம் புத்தகங்களைப் படித்துள்ளேன் என்று சொன்னதைக் கூட விமர்சித்திருந்தார்.

ஆனால், பாஜக இந்துத்துவாவை உயிர்மூச்சாகக் கொண்ட கட்சி. தமிழருவி பாஜகவின் இந்துத்துவாவை நான் ஏற்பவன் இல்லை என்கிறார். ஒரே நாடு, ஒரு மொழி, ஒரு இனம் என்ற கொள்கையில் தனக்கு உடன்பாடு இல்லை என்றும் அவர் முன்னே தெளிவுபடுத்தி இருக்கிறார்.

இந்த அடிப்படை கொள்கை முரண்களைத் தாண்டியதுதான் தேர்தல் கூட்டணி. அதை மறுப்பதற்கு இல்லை. பலரும் தங்கள் கொள்கைகளைக் கடந்தே தேர்தல் கூட்டணியை அமைக்கிறார்கள். அது இல்லை இங்கே பிரச்சினை.

யாரும் அவரை அரசியலைவிட்டுப் போகச் சொல்லவில்லை. தேர்தலில் கூட்டணியில் ஒரு கட்சி வெல்லும். ஒரு கட்சி தோற்கும். தோற்பவர்கள் யாரும் கட்சியைக் கலைத்துவிட்டு அரசியலைவிட்டு ஒதுங்கிவிடுவது இல்லை. அப்படி அவர்கள் வாக்குறுதி தருவதும் இல்லை.

தமிழருவி மணியனும் இதை அறிவார். ஆனால் உணர்ச்சி வேகத்தில் அவர் உச்சரிக்கும் வாக்குறுதிகள் பின்னதாக விமர்சனத்திற்கு உள்ளாக்கப் படுகின்றன. அதைக் குறிவைத்தே இங்கே பேச்சுகள் எழுகின்றன. அவர் ட்ரோல் செய்யப்படுகின்றார்.

திமுகவினர் மற்றும் திமுக ஆதரவாளர்கள் அனைவரும் அண்ணாமலை இந்தச் சந்திப்பை வைத்து ட்ரோல் செய்வதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. பாஜகவினர் சிலர்கூட நேரடியாக விமர்சித்து வருகின்றனர். மேலும் வேறு சிலர் ஃபேக் ஐடி மூலம் அவரை ட்ரோல் செய்கின்றனர்.

அப்படி ஒரு ஃபேக் ஐடி மூலம் ஒருவர், "நாலு பேர் 4 விதமா பேசுவாங்கன்னு சொல்லுவாங்கள்ல... But, இவர் கதைல அந்த 4 ரோல்'மே சார்தான் பண்றாரு" என்று நகைச்சுவையாக பதிவிட்டிருக்கிறார்.

ஏதோ திமுக மற்றும் அந்தக் கட்சியின் ஆதரவாளர்கள் மட்டும் இவரை இந்தச் சந்திப்பை எதிர்த்துப் பதிவிட வில்லை. பாஜக ஆதரவாளர்களே கூட தமிழருவி சந்திப்பை விமர்சித்திருக்கிறார்கள் என்பது மிகப் பெரிய ஹைலட் நியூஸ்.

ரவிசந்திரன் ஜெ என்பவர், "மோடியை நேர்மையானவர் என என் நாவால் சொல்ல மாட்டேன் என்று ஒரு பேட்டியில் சொல்லியவர்தான் இந்த தமிழருவி. உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கக் கூடிய இவர் போன்றவர்களை வைக்க வேண்டிய இடத்தில் வைக்க வேண்டும்" என்று தனது கருத்தைப் பதிவிட்டிருக்கிறார்.

தமிழன் என்ற பதிவர், "தனது வசீகரிக்கும் தமிழாலும் கம்பீர சொற்பொழிவுகளாலும் தமிழக மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கும்.. அல்ல; "இடம் பிடித்திருந்த" என்று மாற்றினால் சரியா இருக்குமுங்க... உங்க சகவாசத்துக்குள்ளாற வந்துட்டாலே, தமிழர்கள் சகவாசத்துல இருந்து, யாரும் வெளியே போயிருவாங்க.!" என்று ஆதங்கப்பட்டிருக்கிறார்.

சிவ சுப்ரமணிய சர்மா, "நல்ல மனிதர். மனதில் பட்ட கருத்துக்களைத் தயங்காமல் கூறுபவர்.(ஆனால் அவர் ரஜினியின் பின்னால் போனதுதான், சற்றே நெருடலான விஷயம். நல்லவேளை ! ரஜினியும் வரவில்லை. இவரும் தப்பித்தார்)" என ப்ளாக் ஹியூமர் டயலாக் அடித்திருக்கிறார்

இப்படி அனைத்து பதிவுகளும் எதிரானதாக உள்ளது என்று நாம் சொல்லவில்லை. ஆதரவாக பேசுபவர்கள் கூட தமிழருவி என்றால் எச்சரிக்கை உணர்வுடன்தான் கருத்தை எடுத்து வைக்கிறார்கள் என்பதைத்தான் பிரதானமாகச் சொல்ல வருகிறோம்.

தமிழருவி போடும் அரசியல் கணக்குகள்:

சொல்லப்போனால் இந்த இணையவாசிகள் செய்யும் கிண்டலை எல்லாம் அறியாதவர் அல்ல தமிழருவி மணியன். அவரிடம் இதைப் பற்றிக் கேட்டால் இவர்களுக்கு எல்லாம் நான் பதில் சொல்லத் தேவை இல்லை என்று மறுத்துவிடுவார். இதுவரை அப்படியே செய்திருக்கிறார்.

அடிப்படையில் புள்ளியியல் படித்தவர் தமிழருவி மணியன். கூடவே சட்டமும் படித்தவர். ஆகவே தேர்தல் களத்தில் ஒவ்வொரு கட்சியும் பெறும் வாக்கு சதவீதத்தை வைத்துக் கூட்டிக் கழித்து ஒரு வியூகத்தை வகுக்கிறார். சிறுசிறு கட்சிகள் பெறும் வாக்கு சதவீதத்தை ஒன்றிணைப்பதன் மூலம் பலம் பொருந்திய ஒரு பெரிய கட்சியை வீழ்த்திவிடலாம் என்பது அவரது அரசியல் கணக்காக உள்ளது.

ஆனால், தமிழ்நாட்டின் தேர்தல் களம் அப்படி இல்லை. ஒரு தேர்தலில் ஒரு சீட்டு கூடப் பெற முடியாமல் படுதோல்வியைச் சந்தித்த அதிமுக பிற்காலத்தில் விஸ்வரூப வளர்ச்சியைப் பெற்று ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ளது. அடுத்த தேர்தலில் அதிமுக ஆட்சிக்கே வராது எனப் பலரும் கணிப்பை வெளியிட்டிருந்த போது , வரலாற்றில் எப்போதும் இல்லாத சாதனையாகத் தொடர்ந்து 2வது முறையாக ஆட்சியைத் தக்கவைத்துள்ளது அதிமுக.

கட்டத்தைக் காரணம் காட்டி ஸ்டாலின் முதல்வர் ஆக வாய்ப்பே இல்லை என வதந்தி பரவிய நேரத்தில்தான் அவர் முதல்வராக வந்து ஆட்சியில் அமர்த்தப்பட்டார்.

இந்தக் கணக்குகள் எல்லாம் நமக்குச் சொல்வது தேர்தல் களத்தில் மக்கள்தான் எஜமானர்கள் என்பதைத்தான். அனைத்து கட்சிகளின் வாக்கு கணக்கைச் சரியாகக் கூட்டிக் கணக்குப்போடும் தமிழருவி மணியன், தேர்தல் களத்தில் மக்கள் உணர்த்தும் அடிப்படை அரசியல் கணக்கைப் புரிந்துகொள்ளாமல் தடுமாறுகிறார் என்பதுதான் இங்கே சோகக் கதை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+