"வா.. வா.. வா.." சைலெண்டாக இருந்த ஒற்றை யானைக்கு தொல்லை தந்த இளைஞர்கள்! கொதிக்கும் நெட்டிசன்கள்
சென்னை: சாலையில் அமைதியாகச் சென்று கொண்டிருந்த யானையை சில இளைஞர்கள் தொந்தரவு செய்யும் வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
சர்வதேச அளவில் அதிகம் வேட்டையாடப்படும் விலங்குகளில் ஒன்றாக யானை இருக்கிறது. அதன் மதிப்பு மிக்க தந்தங்களுக்காக யானைகள் வேட்டையாடப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது.
இதன் காரணமாகவே யானைகளின் எண்ணிக்கை கடந்த நூற்றாண்டில் பல மடங்கு அதிகரித்தது. இப்போது உலகெங்கும் சில லட்சம் யானைகள் மட்டுமே இருப்பதாகக் கணிக்கப்பட்டுள்ளது.

யானைகள்: யானைகள் வேட்டையாடுவதைத் தடுக்க உலகின் பல்வேறு நாடுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் மூலம் யானைகள் வேட்டை ஓரளவுக்குக் குறைந்துள்ளது என்றே சொல்லாம். யானைகள் வேட்டை ஒரு பக்கம் என்றால் அமைதியாகச் செல்லும் யானைகளுக்குத் தொல்லை கொடுக்கும் போக்கும் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இணையத்தில் லைக், ஷேர்களுக்காக இவர்கள் செய்யும் காரியம் யானைக்கும் சரி, மனிதர்களும் சரி ஆபத்தை ஏற்படுத்துபவையாக இருக்கிறது.
பொதுவாகவே யானைகள் தனது வாழ்நாளில் ஒரே இடத்தில் இருக்காது. அவை வாழ்வில் ஒவ்வொரு இடத்திற்கும் தொடர்ந்து பயணித்துக் கொண்டே இருக்கும். சீசனுக்கு ஏற்ப ஒவ்வொரு இடத்திற்கும் செல்லும் அவை எப்போதும் குறிப்பிட்ட குறிப்பிட்ட வழித்தடத்தைப் பின்பற்றியே பயணிக்கும். இதைத்தான் நாம் யானைகள் வழித்தடம் எனக் குறிப்பிடுகிறோம். அதாவது யானைகள் எப்போதும் சராசரியாக 500 சதுர கி.மீ பரப்பளவு கொண்ட காடுகளைப் பயன்படுத்தும்.
பாதைகள்: இந்த இடங்களுக்கு அவை தொடர்ந்து பயணிக்கும். யானையின் வாழ்விடங்கள் என அழைக்கப்படும் இது, பல வனப்பகுதிகளைச் சேர்த்து இருக்கும். முன்பு எல்லாம் காடுகள் பரந்து விரிந்து இருந்ததால் யானையால் சுதந்திரமாகப் பயணிக்க முடிந்தது. யானைகள் Traditional Migrating Path என்ற வழித்தடங்களிலேயே எப்போதும் பயணிக்கும். இப்போது காடுகள் பெருவாரியாக அழிக்கப்பட்டுவிட்டன.
இதனால் யானைகளின் வழித்தடங்களும் பாதிக்கப்படுகிறது. இதன் காரணமாகவே யானைகள் சில நேரங்களில் ஊருக்குள் வந்துவிடுகின்றன. யானை வழித்தடத்தில் காடுகளுக்கு நடுவே சாலைகள் அமைக்கப்படுவதால் இதனால் யானைகள் குழம்பிவிடுகிறது. யானைகள் சில நேரங்களில் சாலையோரம் சுற்றிக் கொண்டு இருக்கும். இதுபோன்ற நேரங்களில் யானைகளை நாம் தொந்தரவு செய்யக் கூடாது. இது குறித்து வனத்துறை ஏற்கனவே பல முறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
தொல்லை: இருப்பினும், அதைக் கண்டுகொள்ளாமல் சிலர் தொடர்ந்து யானைக்குத் தொந்தரவு கொடுப்பதை வாடிக்கையாக வைத்துள்ளனர். அதுபோன்ற ஒரு சம்பவத்தின் வீடியோ தான் இப்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. அதில் டூவிலரில் இருக்கும் இளைஞர்கள் சிலர் அங்கு இருக்கும் யானைக்குத் தொல்லை கொடுக்கிறார்கள். அந்த யானை அமைதியாகச் சாலையோரத்தில் நின்று கொண்டிருக்கிறது.
இவர்கள் யானை நோக்கி ஏதோ சொல்வதையும் கத்துவதையும் அந்த வீடியோவில் பார்க்க முடிகிறது. அந்த பாதையில் கார்கள் வர வேண்டும் எனச் சொல்வதும் தெரிகிறது. அவர்கள் யானை விரட்ட இப்படிச் செய்ய முயன்றாலும் கூட அது மிகப் பெரிய ஆபத்தில் முடியும். ஏனென்றால் பொதுவாகவே ஒற்றை யானை மிக எளிதாகக் கோபமடையும். இவர்கள் செய்யும் செயலால் யானை கோபப்பட்டு யாரையாவது தாக்கியிருந்தால் அது பெரும் விபத்தில் முடிந்திருக்கும்.
செய்யக் கூடாது: இதுபோன்ற நேரங்களில் யானையே சில நிமிடங்களில் அங்கிருந்து நகர்ந்துவிடும். அப்படியில்லை என்றால் வனத்துறைக்குத் தான் பொதுமக்கள் தகவல் கொடுக்க வேண்டும். அதைவிட்டுவிட்டு இதுபோல யானைக்குத் தொல்லை கொடுத்து, அதைக் கோபப்படும் செயல்களில் யாரும் ஈடுபடக் கூடாது. அது அனைவருக்கும் மோசமான பாதிப்பையே ஏற்படுத்தும்.
இந்த வீடியோ இணையத்தில் இப்போது டிரெண்டாகி வரும் நிலையில், பொறுப்பு இல்லாமல் வனத்துறை எச்சரிக்கையைப் புறந்தள்ளும் வகையில் நடந்து கொள்ளும் இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications