2021 சட்டசபை தேர்தலில் புதிய கூட்டணி: அரசியல்வாதிகளை ஜனவரி வரை காக்க வைத்த நவகிரகங்கள்
தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் இருந்தாலும் கொரோனா கால கட்டத்திலும் தமிழக அரசியல் படு பரபரப்பாகவே இருக்கிறது. கூட்டணி பற்றி தேர்தல் நேரத்தில் பேசுவோம் என்று ஆளும் கட்சியான அதிமுக முதல் பா
சென்னை: நிழல் கிரகங்களான ராகு கேது பெயர்ச்சி பற்றிதான் பரபரப்பாக பேச்சாக உள்ளது. இந்த ராகு கேது கிரகங்கள் அரசியலில் மிக முக்கிய மாற்றத்தை ஏற்படுத்த உள்ளன. அரச கிரகமான குரு பெயர்ச்சி நவம்பர் மாதம் நிகழ உள்ளது. வாக்கியப்படி சனிப்பெயர்ச்சி டிசம்பர் இறுதியில் நிகழப்போகிறது. இந்த கிரகங்களின் பெயர்ச்சியை வைத்தே கூட்டணிகளை பேசி முடிவு செய்யலாம் என்று அரசியல் கட்சித்தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.
செப்டம்பர் 1ம் தேதியன்று வாக்கிய பஞ்சாங்கப்படி ராகு கேது நிகழ்ந்துள்ளது. செப்டம்பர் 23 ம் தேதியன்று திருக்கணித பஞ்சாங்கப்படியும் ராகு கேது பெயர்ச்சி நடைபெறுகிறது. ராகு ரிஷப ராசிக்கும், கேதுவானது விருச்சிக ராசிக்கும் இடப்பெயர்ச்சி அடைவதால் நாட்டில் நல்ல வேலை வாய்ப்புகள் பெருகும், பொருளாதாரம் எதிர்பார்த்ததைவிட கணிசமாக உயரும். மக்களின் வாங்கும் சக்தி அதிகரிக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.
தமிழகத்தை பொறுத்தவரை பொருளாதார மேன்மை பலப்படும். தமிழ்நாட்டில் அரசியல் நிகழ்வுகள் பரபரப்பாக இருக்கும். அரசியல் தலைவர்கள் இதுவா? அதுவா என்று யோசித்துக்கொண்டிருப்பார்கள். கூட்டணி சேரவே மாட்டார்கள் என்று நினைத்தவர்கள் எல்லாம் ஒன்றிணைவார்கள். எதிர்பாராத மாற்றங்களுக்கு ஏற்படும்.

அரசியல் கட்சிகள் நிலை
2021 சட்டசபை தேர்தலை சந்திக்க அதிமுக, திமுக, தேமுதிக, மதிமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், மக்கள் நீதிமய்யம், சீமானின் நாம் தமிழர் கட்சி, பாஜக, விடுதலை சிறுத்தைகள், புதிய தமிழகம் என தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சியினருமே தயாராகி வருகின்றனர். ஆளும் அதிமுக ஆட்சியை தக்கவைக்க நினைக்கிறது. திமுக ஆட்சியை கைப்பற்ற போராடுகிறது. அதிமுக திமுகவின் கீழ்தான் கூட்டணியே அமையும்.

தனித்து போட்டி நன்மை
நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுவோம் என்று அறிவித்து விட்டது. பாஜகவும் தங்கள் தலைமையில் கூட்டணி என்று கூறி வருவதால் அதிமுக பாஜக தலைமையை ஏற்க தயாராக இருக்காது. அதே போல தேமுதிக தனித்து போட்டி என்று சொன்னாலும் கடந்த தேர்தலைப் போல தேமுதிகவின் கீழ் அணிகள் சேருமா என்பதை எதிர்பார்க்க முடியாது.

தேர்தல் கூட்டணி எப்போது
தேர்தல் நேரத்தில் கூட்டணியை சொல்வோம் என்று கூறியுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் மனைவி பிரேமலதாவும் ஜனவரி மாதம் கூட்டணி யாரென்று முடிவு செய்வோம் என்று கூறியுள்ளார். அதிமுக, திமுகவிற்கு மாற்று நாங்கள்தான் என்றும் கூறி வருவதால் இந்த முறையும் அவர் திமுக உடன் இணைய மாட்டார் என்றே நம்பலாம். அதே நேரத்தில் அதிமுக உடன் கூட்டணி பேரம் பேசலாம் என்று எதிர்பார்க்கலாம்.

கிரகங்களின் பெயர்ச்சிக்கு காத்திருப்பு
நவம்பர் மாதம் குருபகவான் மகரம் ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். ஏப்ரல் மாதம் அதிசாரமாக கும்பம் ராசிக்கும் நகர்கிறார். வாக்கிய பஞ்சாங்கப்படி சனிபகவான் டிசம்பர் மாதம் மகரம் ராசிக்கு வந்து அமர்கிறார். இந்த கிரகங்களின் பெயர்ச்சியும் அரசியல்வாதிகள் கூட்டணி கணக்கு போடுவதில் யோசிக்க வைக்கிறது எனவேதான் பிரேமலதா சூசகமாக ஜனவரிக்குப் பிறகு கூட்டணி பற்றி சொல்கிறோம் என்று கூறியுள்ளார்.

எந்த தலைமையை ஏற்க தயார்
அதிமுக கடந்த சட்டசபைத் தேர்தலில் தனித்து போட்டியிட்டு வெற்றி பெற்றது. அப்போது ஜெயலலிதா என்ற ஒற்றை தலைமையை நம்பி மக்கள் வாக்களித்தனர். திமுக கூட்டணியில் காங்கிரஸ் உள்ளிட்ட ஒரு சில கட்சிகள் இணைந்தன. தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் கீழ் மதிமுக, விசிக, கம்யூனிஸ்ட்டுகள், தமாக ஆகிய கட்சிகள் அணி திரண்டன. நாம் தமிழர் கட்சியும், பாஜகவும் தனித்தனியே போட்டியிட்டன. இந்த பலமுறை போட்டிதான் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வர காரணமாக இருந்தது. இந்தமுறையும் பல கட்சிகள் தனித்து களமிறங்கினால் அது அதிமுகவிற்குத்தான் சாதகமாக அமையும் காரணம் அதிமுக வாக்குகள் அனைத்தும் சிந்தாமல் சிதறாமல் அந்த கட்சிக்கு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. எனவேதான் தேர்தல நேரத்தில் கூட்டணி பற்றி முடிவை அறிவிப்போம் என்று கூறியுள்ளார் முதல்வர் பழனிச்சாமி.

எதிர்பார்க்காத கூட்டணி
சில நேரங்களில் பகைவரின் வீட்டில் பகை கிரகங்கள் கூட்டணி சேரும். அதுபோல அரசியலில் நிரந்த நண்பனும் இல்லை நிரந்தர பகைவனும் இல்லை என்ற சொல்லிற்கு ஏற்ப இந்த தேர்தலில் யாருமே எதிர்பார்க்காத புதிய கூட்டணிகள் உருவாகும். பழைய பகைகள் மாறும். எதிரிகள் அனைவரும் ஒன்றாக இணைவார்கள். பொறுமையோடும், நிதானத்தோடும் காய் நகர்த்தினால் மட்டுமே அரியணையை கைப்பற்ற முடியும். அரச கிரகங்களின் சஞ்சாரம், ராகு கேது பெயர்ச்சி, குரு,சனி பெயர்ச்சி, கிரகங்களின் கூட்டணி பார்வை பலத்தை பொறுத்து அரசியல் கட்சியினரும் கூட்டணி சேரலாம் என்று காத்திருக்கின்றனர். கடைசியில் நவ கிரகங்களும் அரசியல்வாதிகள் அத்தனை பேரையும் காத்திருக்க வைத்து விட்டது.












Click it and Unblock the Notifications