இனி பார்க்கிங் இருந்தால் தான் காரே வாங்க முடியும்..சென்னையன்ஸ்க்கு ஷாக் கொடுத்த போக்குவரத்து ஆணையம்!
சென்னை: சென்னையில் நாளுக்கு நாள் மக்கள் நெருக்கம் அதிகரித்து வரும் நிலையில் சாலையோரம் பார்க்கிங் செய்யப்படும் கார்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த நிலையில் சென்னையில் புதிதாக கார் வாங்குபவர்கள் அதனை பதிவு செய்யும்போது பார்க்கிங் இடம் இருப்பதற்கான சான்றை சமர்ப்பிப்பது அவசியம் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை பெருநகர் போக்குவரத்து ஆணையம் பரிந்துரைத்துள்ளது. மேலும், இது விரைவில் சட்டமாகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தின் தலைநகரான சென்னையில் சற்று ஏறக்குறைய இரண்டு கோடி மக்கள் வசிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் லட்சக்கணக்கான கார்கள், பைக் போன்ற சொந்த வாகனங்கள் பயன்பாட்டில் இருக்கிறது.

சென்னையைப் பொறுத்தவரை அரசு பேருந்து, மின்சார ரயில் சேவை, மெட்ரோ ரயில் சேவை என பொதுப் போக்குவரத்து இருக்கிறது. ஆனாலும் லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வசதிக்காக கார் மற்றும் பைக் ஆகிய வாகனங்களை அதிகம் பயன்படுத்துகின்றனர். இதனால் சென்னையில் பிரதான சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதற்கு முக்கிய காரணமே கார்கள் தான்.

கடந்த 2022 ஆம் ஆண்டு வரை சென்னையில் சுமார் 90 லட்சம் கார்கள் இருந்ததாக கூறப்படுகிறது. தற்போது 2025 ஆம் ஆண்டில் அந்த எண்ணிக்கை ஒரு கோடியே 20 லட்சத்தை கடந்து இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இரு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை இதை விட அதிகமாக இருக்கலாம்.

ஆனால் சென்னையை பொருத்தவரை கார் பார்க்கிங் தான் பெரிய பிரச்சனையே. பெரிய பெரிய அப்பார்ட்மெண்ட்களில் கார் பார்க்கிங் இருந்தாலும் சிறிய சிறிய வீடுகளில் வசிப்போர் கார்களை சாலை ஓரங்களிலும் தெருகளிலும் நிறுத்தும் நிலை தான் இருக்கிறது. இதனால் அருகில் வசிப்பவருக்கு இடையூறு ஏற்படுவதோடு போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.
மேலும் இரவு நேரங்களில் சிலர் அந்த கார்களை அடித்து உடைத்து சேதப்படுத்துவதும், துப்புரவு பணி, சாலை அமைக்கும் பணி போன்றவற்றின் போது கார்களால் இடையூறு ஏற்படுவதும் வாடிக்கையாக வருகிறது. இந்த நிலையில் தான் சென்னையில் புதிதாக கார் வாங்க பார்க்கிங் இடம் அவசியம் என போக்குவரத்து ஆணையம் பரிந்துரைத்துள்ளது.
அதன்படி இனிமேல் சென்னையில் ஒருவர் புதிதாக கார் வாங்குகிறார் என்றால் அந்த காரை பதிவு செய்யும் போது அந்த காரை நிறுத்துவதற்கான பார்க்கிங் இருப்பதற்கான சான்று இணைக்க வேண்டும் என கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஒருவர் எத்தனை காரை வாங்கினாலும் அத்தனை காருக்குமான பார்க்கிங் ஆவணத்தை காட்ட வேண்டும் என்பது அவசியம். ஒவ்வொரு பகுதியிலும் அதிக தேவை, நடுத்தர தேவை மற்றும் குறைந்த தேவை என மூன்று வகையான பார்க்கிங் உருவாக்கப்பட இருக்கிறது.
அதற்கு கட்டணத்தை செலுத்தி கார்களை பார்க்கிங் செய்யும் இடம் என காட்டி பதிவு செய்து கொள்ளலாம். அதேபோல அகலமான சாலைகளில் பார்க்கிங் உருவாக்கப்பட்டு அந்த இடங்களில் கார்களை நிறுத்திக் கொள்ளலாம். மேலும் குடியிருப்பாளர்கள், மால்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், அலுவலகங்கள் என அனைத்து இடங்களிலும் பொதுமக்களுக்கான பார்க்கிங்கை உருவாக்க வேண்டும் எனவும், 20% மின்சார கார்களின் சார்ஜிங் ஸ்டேஷனுக்கு ஒதுக்க வேண்டும் எனவும், சென்னை பெருநகர போக்குவரத்து ஆணையம் தமிழக அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. இதன் மூலம் இந்த பரிந்துரை சட்டமாகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications