சென்னை வங்கி கொள்ளை.. வெளியான புதிய சிசிடிவி காட்சிகள்! கொள்ளையர்கள் தப்பியது இப்படி தான்
சென்னை: சென்னை அரும்பாக்கத்தில் தனியார் வங்கி கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாகு புதிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
Recommended Video
சென்னையில் அரும்பாக்கம் 100 அடி சாலையில் பெடரல் வங்கி செயல்பட்டு வருகிறது. நேற்றைய தினம் இந்த வங்கியில் கொள்ளை சம்பவம் அரங்கேறியது.
தலைநகரிலேயே இப்படிப்பட்ட சம்பவம் அரங்கேறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அரசைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

வங்கி கொள்ளை
அதாவது அரும்பாக்கம் 100 அடி ரோட்டில் அமைந்துள்ள பெடரல் பேங்கின் நகைக்கடன் பிரிவில் நேற்றைய தினம் வழக்கம் போல் ஊழியர்கள் பணி செய்து வந்தனர். வாரத்தின் கடைசி வேலை நாள் என்பதால் பொதுமக்கள் சிலரும் அங்கு இருந்தனர். அந்தச் சமயத்தில் திடீரென மாஸ்க் அணிந்து உள்ளே புகுந்த சில மர்ம நபர்கள் வங்கியில் இருந்த நகைகளைக் கொள்ளை அடித்துச் சென்றுள்ளனர்.

எப்படி
இரு சக்கர வாகனத்தில் வந்தவர்கள் முதலில் வாடிக்கையாளர்கள் போலவே வங்கிக்குள் வந்துள்ளனர். அங்குப் பாதுகாப்பிற்கு இருந்து காவலாளிக்குக் குளிர்பானத்தில் மயக்க மருந்தைச் சேர்த்துக் கொடுத்துள்ளனர். அவர் மயங்கிய நிலையில், மற்ற ஊழியர்களிடம் கத்தியைக் காட்டி மிரட்டிய கொள்ளையர்கள், அவர்கள் கழிவறையில் கட்டுப்போட்டு உள்ளனர். அங்கு ஊழியர்களிடம் இருந்து லாக்கர் சாவியையும் பிடுங்கி உள்ளனர்.

பல கோடி நகைகள்
அதைத் தொடர்ந்த லாக்கரை உடைத்து வங்கியில் இருந்த பல கோடி மதிப்பிலான நகைகளை அவர்கள் கொள்ளை அடித்துவிட்டுத் தப்பிச் சென்றுவிட்டனர். இது தொடர்பான தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த சென்ற அண்ணாநகர் மற்றும் அரும்பாக்கம் போலீசார் வங்கி ஊழியர்களை மீட்டனர். மேலும் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் அந்த வங்கியில் பணிபுரிந்த ஊழியரே நண்பர்களுடன் இணைந்து கொள்ளையில் ஈடுபட்டது தெரிய வந்தது.

போலீசார்
சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணையைத் தொடங்கி உள்ளனர். இதற்காகத் தனியாக 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே கொள்ளை சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும், இது தொடர்பாகத் துப்பு கொடுப்பவர்களுக்கு ஒரு லட்ச ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

புதிய சிசிடிவி
இந்தச் சூழலில் வங்கியைக் கொள்ளை அடித்த பின்னர் கொள்ளையர்கள் தப்பிச் செல்வது தொடர்பான புதிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. அதில் கொள்ளை அடித்த பின்னர், வெளியே இரு சக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்தபடி செல்வது தெளிவாகிப் பதிவாகி உள்ளது. யாருக்கும் சந்தேகம் ஏற்பட்ட கூடாது என்பதற்காக அவர்கள் ஒவ்வொருவராக வெளியேறி உள்ளனர்.

அடுத்தகட்ட விசாரணை
இவை அனைத்தும் அந்த வீடியோவில் தெளிவாகப் பதிவாகி உள்ளது. இதன் அடிப்படையில் போலீசார் அடுத்தகட்ட விசாரணையைத் தொடங்கி உள்ளனர். அவர்கள் எந்த திசையில் சென்றனர் என்பதை வைத்து அடுத்தடுத்து இடங்களில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர். விரைவில் குற்றவாளிகளைப் பிடிப்போம் என்று போலீசார் தெரிவித்து உள்ளனர்.

வங்கி விளக்கம்
இதனிடையே பெடரல் வங்கி சார்பில் இது தொடர்பாக முக்கிய விளக்கம் கொடுக்கப்பட்டு உள்ளது. அதாவது, சென்னை தனியார் வங்கியில் கொள்ளை அடிக்கப்பட்ட நகைகள் குறித்து வாடிக்கையாளர்கள் பயம் கொள்ள வேண்டாம். நகைகள் அனைத்தும் இன்ஸ்யூரன்ஸ் செய்யப்பட்டுள்ளது, நகைகள் கிடைக்கவில்லை என்றாலும் இன்ஸ்யூரன்ஸ் மூலம் திரும்பக் கொடுக்கப்படும் என்று அதில் கூறப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications