ஆன்லைனில் புதிய வசதி.. தனியார் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் முக்கிய அறிவிப்பு
சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் வரும் இணைப்பு கல்லூரிகள், அதற்கான அங்கீகாரத்தை நீட்டிப்பு செய்வதற்கும், புதிதாக அங்கீகாரம் பெறுவதற்கும் 'அப்ளியேஷன் மானிட்டரிங் சிஸ்டம்' என்ற ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. வருகிற ஜனவரி 31-ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் வரும் இணைப்பு கல்லூரிகள், அதற்கான அங்கீகாரத்தை நீட்டிப்பு செய்வதற்கும், புதிதாக அங்கீகாரம் பெறுவதற்கும் 'அப்ளியேஷன் மானிட்டரிங் சிஸ்டம்' என்ற ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ள நிலையில், அதுபற்றி இணைப்பு கல்லூரிகளின் தலைவர்கள், முதல்வர்களுக்கு அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

அதில் அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் கூறுகையில், "ஆன்லைன் விவரங்களை அண்ணா பல்கலைக்கழகத்தின் https://cai1.annauniv.edu/caiau/index.php என்ற இணையதளப் பக்கத்தில் சென்று அந்தந்த கல்லூரிகள் சமர்ப்பிக்க வேண்டும். ஆதாருடன் பயோமெட்ரிக் சாதனங்களால் அங்கீகரிக்கப்பட்ட ஆசிரியர் விவரங்கள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் ஆசிரியர்களின் செல்போன் எண், தொடர்பு முகவரிகள் சமர்ப்பிக்கப்பட்டதை உறுதிசெய்ய வேண்டும்.
கல்லூரிகளில் உள்ள அனைத்து நிரந்தர இணைப்பு படிப்புகளின் விவரங்களையும் சமர்ப்பிக்க வேண்டும். அது ஆய்வின் போது சரிபார்க்கப்படும். ஆசிரியர் தகுதிகள், அனுபவம், ஊதிய அளவு மற்றும் பணியாளர் விகிதம் போன்ற விதிமுறைகள் பின்பற்றப்பட்டு இருக்க வேண்டும். அனைத்து ஆசிரியர்களுக்கும் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலின் அடையாள அட்டை கட்டாயம் ஆகும்.
இதுதவிர, என்ஜினீயரிங், தொழில்நுட்பம், கட்டிடக்கலை மற்றும் மேலாண்மை படிப்புகளில் என்.ஐ.ஆர். தரவரிசை எண் மற்றும் சான்றிதழ்கள், முந்தைய 3 ஆண்டுகளுக்கான வருடாந்திர செலவு விவரங்கள், கட்டிடக்கலை (பி.ஆர்க்.), மற்றும் 2 ஆண்டு எம்.இ., எம்.டெக்., எம்.பி.ஏ., எம்.சி.ஏ., எம்.ஆர்க்., 5 ஆண்டு பி.இ., பி.டெக். படிப்புகளில் மாணவர்களின் விவரங்கள் ஆகியவற்றை பதிவேற்ற வேண்டும்.
அனைத்து ஆன்லைன் விவரங்களையும் சமர்ப்பித்த பிறகு, அதனை நகலாக எடுத்து பராமரிக்க வேண்டும். பல்கலைக்கழகம் கேட்கும்போதெல்லாம் அதை கொடுக்கும் வகையில் தயாராக வைத்திருக்க வேண்டும்.
ஆன்லைன் விவரங்களை சமர்ப்பிக்க வருகிற 31-ந்தேதி கடைசி நாள் ஆகும். அதன்பிறகு தாமதக் கட்டணமாக அடுத்த மாதம் (பிப்ரவரி) 7-ந்தேதிக்குள் ரூ.50 ஆயிரம் அபராதமாக செலுத்தி சமர்ப்பிக்கலாம். இதற்குள் ஆன்லைன் விவரங்களை சமர்ப்பிக்காத கல்லூரிகள் 2025-26-ம் கல்வியாண்டுக்கான இணைப்பு அங்கீகாரத்துக்கு பரிசீலிக்கப்படாது.
ஒவ்வொரு முதுகலை பட்டப்படிப்பு திட்டத்துக்கு பொருத்தமான துறையில் ஆராய்ச்சி பட்டம் பெற்ற பேராசிரியர் அல்லது இணை பேராசிரியர் கட்டாயம் இருக்க வேண்டும், இல்லையென்றால் இணைப்பு அங்கீகாரம் நீட்டிக்கப்படாது. இணைப்பு அங்கீகாரத்துக்காக நிர்ணயிக்கப்பட்ட விவரங்களை பூர்த்தி செய்யாத படிப்புகள் எந்த அறிவிப்பும் இல்லாமல் இடைநிறுத்தப்படும்" இவ்வாறு அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் வெளியிட்ட சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications