போட்டி “பொதுக்குழு” கூட்டம் - பன்னீரின் “பலே ப்ளான்”.. ஆனால் ஒரு சிக்கல்! களமிறங்கிய லிங்கம்
சென்னை: எடப்பாடி பழனிசாமி தரப்பு நடத்திய பொதுக்குழு கூட்டத்துக்கு போட்டியாக புதிய பொதுக்குழு கூட்டத்தை நடத்த ஓ.பன்னீர்செல்வம் தரப்பு தயாராகி வருகிறது.
ஓ.பன்னீர்செல்வம் தரப்பின் பல்வேறு எதிர்ப்புகளையும் மீறி அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டு 3 வாரங்கள் கடந்துள்ளன. இதில் ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம் ஜே.சி.டி. பிரபாகர் உள்ளிட்டோர் நீக்கப்பட்டனர்.
அதன் தொடர்ச்சியாக ஓ.பன்னீர்செல்வத்தின் மகன்கள் ரவீந்திரநாத் எம்.பி, ஜெயபிரதீப் உள்ளிட்ட பலர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். ஓ.பன்னீர்செல்வமும் பதிலுக்கு எடப்பாடி பழனிசாமி, எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார் உள்ளிட்ட பல மூத்த நிர்வாகிகளை கட்சியிலிருந்து நீக்குவதாக அறிவித்தார்.
ஆடி போய் ஆவணி வரட்டும்.. அதிரடிக்கு ரெடியாகும் ஓபிஎஸ்! எடப்பாடிக்கு எதிராக பிரம்மாஸ்திரம்
ஓபிஎஸ் தரப்பு
இருப்பினும் இதற்கு எதிராக தேர்தல் ஆணையம், நீதிமன்றங்களில் பல்வேறு வழக்குகள் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்கிடையே கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்த ஓ.பன்னீர்செல்வம் அடையாறில் உள்ள தனது இல்லத்தில் அடுத்தடுத்து தொடர் ஆலோசனைகளை மேற்கொண்டு வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன் அவர் சொந்த ஊரான தேனிக்கு சென்று ஆதரவாளார்களை சந்தித்து வருகிறார்.
ஊக்கம் கொடுத்த ஓபிஎஸ்
கட்சியிலிருந்து நீக்கப்பட்டு எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டபோதிலும், ஓ.பன்னீர்செல்வம் மனம் தளராமல் வழக்குகள், அரசியல் நகர்வுகளை எடுத்து வருகிறார். இதற்கு முக்கிய காரணம் டெல்லி மற்றும் மன்னார்குடி. ஒற்றைத் தலைமை பிரச்சனை பூதாகரமானதில் இருந்தே டெல்லியை மலைபோல் நம்பி தனது ஆதரவாளர்களுக்கு ஊக்கம் கொடுத்து வந்திருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம்.
ஐடி சோதனை
அதேநேரம் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு தொடர்புடையவர்களின் இடங்களில் நடக்கும் வருமான வரி சோதனைகள், டெல்லியில் பிரதமர் மோடி நேரம் கொடுக்காதது போன்றவை ஓ.பன்னீர்செல்வத்துக்கு சற்று நம்பிக்கையை கொடுத்தன. ஆனாலும் டெல்லி தரப்பு ஒரு பிடி கொடுக்காமலேயே உள்ளதே. இதே நிலையில்தான் சசிகலா, டிடிவி தரப்பும் இருந்து வருகிறது.
போட்டி பொதுக்குழு
இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி தரப்பு நடத்திய பொதுக்குழுவுக்கு போட்டியாக புதிய பொதுக்குழு கூட்டத்தை நடத்த ஓ.பன்னீர்செல்வம் தரப்பு திட்டமிட்டுள்ளதாம். இதற்காகவே இணை ஒருங்கிணைப்பாளராக வைத்திலிங்கத்தை உடனே ஓ.பன்னீர்செல்வம் நியமித்ததாக கூறப்படுகிறது. தற்போது சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலை ஓபிஎஸ் அலுவலமாக பயன்படுத்து வருவதாக புதிதாக அவருக்கு அலுவலகம் தயாராகி வருவதாகவும், புதிய நிர்வாகிகள் தேர்வுக்கான நேர்காணல் வைத்திலிங்கம் தலைமையில் முழுமூச்சாக நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.