சசிகலா பெயரில் புது கட்சி “என்னது பு.ம.மு.கவா?” பாஜக கூப்பிட்ட நேரத்தில் போஸ்டரே அடித்த நிர்வாகிகள்!
சென்னை : முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, அதிமுக விரைவில் தனது தலைமையில் செயல்படும் எனக் கூறி வரும் நிலையில், அவரை பாஜகவிற்கு வரவேற்கிறோம் என நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
இந்நிலையில், சசிகலாவை முன்னிலைப்படுத்தி, புரட்சித்தாய் மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் ஒருவர் கட்சி தொடங்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்னும் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்படாத அந்தக் கட்சிக்கு ஆட்களை சேர்த்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல் சசிகலாவுக்கு தெரியுமா என்றும் கேள்வி எழுந்துள்ளது.

சசிகலா
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியாக இருந்த சசிகலா, ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் சொத்து குவிப்பு வழக்கில் கைதாகி சிறைக்குச் சென்றார். அந்த நேரத்தில் சேர்ந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி முதல்வராகவும், ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்வராகவும் செயல்பட்டனர். சசிகலாவை கட்சியில் இருந்து தூக்கிவிட்டு அதிமுகவின் தலைமையிலும் மாற்றம் ஏற்படுத்தி, எடப்பாடி பழனிசாமி இணை ஒருங்கிணைப்பாளராகவும், ஓ.பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளரும் செயல்பட்டு வருகின்றனர்.

எதிர்க்கும் எடப்பாடி
சிறையிலிருந்து விடுதலையான சசிகலா, அதிமுகவை கைப்பற்ற எடுத்த முயற்சிகள், எடப்பாடி பழனிசாமியின் கடும் எதிர்ப்பால் பலனளிக்காமல் போனது. அவர் எதிர்பார்த்த ஆதரவு கட்சியில் கிடைக்காததால் கடந்த தேர்தலின்போது ஒதுங்கியிருப்பதாக அறிக்கை விட்டார் சசிகலா. அதிமுக தோல்வியை தழுவியபின் மீண்டும் அரசியல் பிரவேசத்தை தொடங்கிய சசிகலா அதிமுகவில் இருக்கும் தனது ஆதரவாளர்களோடு பேசி வருகிறார். தொடர்ந்து, அதிமுகவை கைப்பற்றுவேன் எனச் சூளுரைத்து வருகிறார் சசிகலா.

புரட்சித்தாய்
இதற்கிடையே, அரசியல் அரங்கில் சசிகலா அடியெடுத்து வைத்தது முதல் அவருக்கு எண்ணற்ற பட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஜெயலலிதாவை அம்மா என அழைத்தது போல், சசிகலாவை சின்னம்மா என அவரது ஆதரவாளர்களும், தொண்டர்களும் அழைத்து வருகின்றனர். தியாகத் தலைவி என்றும் புரட்சித்தாய் என்றும் அவரை வாழ்த்தி பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. புரட்சித்தலைவி என ஜெயலலிதா அழைக்கப்பட்டதால், புரட்சித்தாய் என சசிகலாவை அழைத்தனர் அவரது ஆதரவாளர்கள்.

புரட்சித்தாய் மக்கள் முன்னேற்றக் கழகம்
இந்நிலையில் சசிகலாவை முன்னிலைப்படுத்தி 'புரட்சித்தாய் மக்கள் முன்னேற்றக் கழகம்' எனும் பெயரில் ஒருவர் கட்சியை தொடங்கியுள்ளார். பெரம்பலூரை பூர்வீகமாக கொண்ட சிங்கப்பூரில் வசிக்கும் சேரசோழ பாண்டியன் என்பவர் இக்கட்சியின் தலைவராக இருக்கிறார். இன்னும் கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யாத நிலையில் இந்தக் கட்சிக்கு ஆட்களைச் சேர்க்கும் பணிகளும் நடைபெற்று வருகிறதாம்.

கட்சி போஸ்டர்
புரட்சித்தாய் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாநில கொள்கை பரப்பு செயலாளர் எனக் குறிப்பிடப்பட்டிருக்கும் தனஞ்செயன் என்பவர் ஜெயலலிதா, சசிகலா, எம்.நடராஜன் ஆகியோரின் படங்களோடு கட்சியின் மாநில தலைவர், செயலாளர்களையும் குறிப்பிட்டு போஸ்டர் அடித்துள்ளார். இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்தக் கட்சியில் சேர விரும்புபவர்களுக்கு முக்கிய பதவிகளையும் அளித்து வருகின்றனராம்.

சசிகலாவை சுற்றி அரசியல்
சசிகலா, அதிமுகவுக்கு தலைமையேற்க இருப்பதாக கூறி வரும் நிலையில், பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன், சசிகலாவை அதிமுகவில் சேர்த்துக்கொண்டால் அக்கட்சி மேலும் வளரும். சசிகலா பாஜகவுக்கு வந்தால் நிச்சயம் நாங்கள் அவரை வரவேற்போம். அது எங்களுக்கு உறுதுணையாக இருக்கும் எனத் தெரிவித்திருந்தார். இது அரசியல் அரங்கில் விவாதங்களைக் கிளப்பி இருக்கும் நிலையில் புரட்சித்தாய் மக்கள் முன்னேற்றக் கழக போஸ்டர் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications