Vande Bharat: தமிழ்நாட்டிற்கு மேலும் ஒரு வந்தே பாரத் ரயில்.. அதுவும் இந்த ரூட்டிலா? பயணிகள் நீண்ட கால கனவு நிறைவேறுது
சென்னை: தமிழகத்திற்கு மேலும் ஒரு வந்தே பாரத் ரயில் இயக்க ரயில்வே முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதுவும் பயணிகள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த ரூட்டில் தான் இந்த வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளதாம்.. சென்னை டூ ராமேஸ்வரம் வழித்தடத்தில் இந்த புதிய வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளது.
ராமநாதபுரம் - ராமேஸ்வரம் இடையேயான 53 கி.மீ ஒற்றை அகல ரயில் பாதையில் மின்மயமாக்கல் பணிகள் நிறைவடைந்துள்ளதையொட்டி, சென்னை முதல் ராமேஸ்வரம் வரை வந்தே பாரத் ரயில் சேவை இயக்க வாய்ப்பு உள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

சென்னை டூ ராமேஸ்வரம் வந்தே பாரத் ரயில்
தற்போதைய நவீன காலத்திற்கு ஏற்ப பல்வேறு வசதிகளை இந்தியன் ரயில்வே செய்து வருகிறது. பயணிகள் கோரிக்கைகளையும் ரயில்வே நிறைவேற்றி வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் சென்னை எழும்பூர் அல்லது தாம்பரத்தில் இருந்து பகல் இரவு நேர சேவையாக இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னையில் இருந்து தற்போது ராமேஸ்வரத்திற்கு சேது சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ், போட் மெயில் எக்ஸ்பிரஸ் உள்பட 3 தினசரி ரயில் சேவைகளும், 4 வாராந்திர ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயில்களில் வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை காலங்களில் கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கிறது. இதேபோன்று வந்தே பாரத் ரயில் இயக்கவும் பயணிகள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்தனர்.
53 கி.மீ தூரம் மின்மயமாக்கப்பட்டது
இந்த நிலையில் தான், சென்னை எழும்பூர் அல்லது தாம்பரத்தில் இருந்து புதிய பகல் நேர வந்தே பாரத் ரயிலை இயக்குவதற்கான திட்டமானது ரயில்வே வாரியத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:-
ராமநாதபுரம் - ராமேஸ்வரம் இடையே 53 கி.மீ நீளமுள்ள முழு ரயில் பாதையும் இப்போது மின்சார என்ஜினை இயக்கும் வகையில் மின்மயமாக்கப்பட்டு உள்ளது. இருந்த போதும், உச்சிப்புளி ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள பருந்து கடற்படை விமான நிலையத்திற்கு அருகில் மேல்நிலை மின்கேபிள்கள் இல்லாமல் சுமார் 220 மீட்டர் இடைவெளி காணப்பட்டது.
8 மணி நேரம் பயணம்
வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்படுவதற்கு முன்பு இந்த குறிப்பிட்ட இடைவெளிக்குள் தனி சோதனையானது செய்யப்படும். இதேபோல் வந்தே பாரத் ரயில் இயக்குவதற்கான இறுதி பாதை எது எனவும் இப்போது வரை முடிவு செய்யப்படவில்லை. எனினும் பயண நேரம் 8 மணி நேரத்திற்குள் இருக்கும் வகையில் இந்த பாதையானது முடிவு செய்யப்படும்.
சென்னை எழும்பூர் அல்லது தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து ராமேஸ்வரம் வரை பயணம் தூரம், நின்று செல்லும் நிறுத்தங்கள் உள்ளிட்டவை குறித்து ஆராயப்படும். அதற்கு பின்னர் இறுதி செய்யப்படும்" என்று கூறியுள்ளனர்.
தமிழகத்தில் ஓடிக்கொண்டிருக்கும் வந்தே பாரத் ரயில்கள்:
* சென்னை - மைசூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் (பெங்களூர் வழியாக)
* சென்னை - கோயம்புத்தூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்
* சென்னை - விஜயவாடா வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்
* சென்னை - திருநெல்வேலி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்
* சென்னை - திருவனந்தபுரம் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்
* மதுரை - சென்னை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்
* கோயம்புத்தூர் - பெங்களூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்
* சென்னை - சேலம் - பெங்களூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்












Click it and Unblock the Notifications