விஜய்க்கு தான் முதல் வாக்கு.. அடம் பிடிக்கும் 2கே கிட்ஸ்.. புஸ்ஸி புது தகவல்
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் தன் முதல் மாநாட்டுக்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டுள்ளது. இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நடந்து வருகிறது. அதில் பேசிய புஸ்ஸி ஆனந்த், "18 வயது நிரம்பிய வாக்காளர்கள் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்கவில்லை. தங்கள் முதல் வாக்கை விஜய்க்கு தான் அளிப்போம் என, 2026 தேர்தலுக்காக காத்திருக்கிறார்கள்." என்று கூறியுள்ளார்.
பொதுவாக நடிகர் விஜயின் திரைப்படங்கள் குறித்த அறிவிப்புக்கு தான் எதிர்பார்ப்பு அதிகம் இருக்கும். அவர் தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கி அரசியலில் இறங்கிவிட்டார். தற்போது அவரது கட்சி தரப்பில் விக்கிரவாண்டியில் நடத்தப்படும் முதல் மாநாட்டுக்கு எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

விக்கிவாண்டியில் அக்டோபர் 27ம் தேதி, தவெக முதல் மாநாடு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு காவல்துறையும் நிபந்தனைகளுடன் கூடிய அனுமதி வழங்கியுள்ளது. மாநாடு தொடர்பாக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு ஏற்பாடுகள் நடந்து வருகிறது. ஏற்கனவே மாநாட்டுக்கு வருபவர்கள் மது அருந்தக் கூடாது உள்ளிட்ட அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
தற்போது மாவட்ட ரீதியாக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடந்து வருகிறது. அதில் நிர்வாகிகளுடன் தமிழக வெற்றிக் கழகம் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பேசி வருகிறார். "தளபதி என்றால் அது நம் தலைவர் மட்டும் தான். 2026 தளபதி தான் முதலமைச்சர் ஆவார்." என்று ஆனந்த் கூறியிருந்தார்.
இதுதொடர்பான வீடியோக்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. தவெக நிர்வாகிகளுடன் இன்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திலும் ஆனந்த் பல விசயங்களை பேசியுள்ளார். "மாநாடு எப்படி நடத்த வேண்டும் என்று எல்லாருக்கும் எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும். அது உங்களின் கைகளில் தான் இருக்கிறது. தளபதியே உங்கள் வீட்டுக்கு வந்து அழைத்ததாக நினைத்து, நீங்கள் மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும்.
உங்களை எல்லாம் மாநாட்டுக்கு நேரில் பார்த்து அழைக்க வேண்டும் என்று தளபதி அறிவுறுத்தியுள்ளார். பத்திரமாக வண்டியில் வந்து செல்ல வேண்டும். எந்த வழித்தடம் வழியாக வருகிறீர்கள் என்பதை முன்கூட்டியே சொல்ல வேண்டும். விக்கரவாண்டியில் அடுத்த வாரம் பூமி பூஜை போட்டு, மாநாட்டு பணிகளை தொடங்க உள்ளோம். சாலையில் பொது மக்களுக்கு தொந்தரவு ஏற்படாமல் கவனமாக வர வேண்டும்.
தளபதியின் தொண்டர்கள் இப்படித்தான் இருப்பார்கள் என்று எல்லாரும் பாராட்டும்படி நடந்து கொள்ள வேண்டும். மாநாட்டு பணிகளுக்காக 25 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. சுமார் 5,000க்கும் மேற்பட்டவர்கள் இந்தப் பணிகளில் ஈடுபடுவார்கள். ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும், 150 பேருக்கு மாநாடு பணி செய்வதற்கான வாய்ப்பு வழங்கப்படும். இதை வெற்றி மாநாடாக நடத்திக் காட்ட வேண்டும்.
மாநாடுக்கு என்று தனி பாஸ் எதுவும் வழங்கப்படாது. அனுமதி இலவசம். மாநாட்டில் தளபதி என்ன பேச போகிறார் என்று தெரிந்துகொள்ள அனைவரும் காத்திருக்கின்றனர். கடந்த நாடாளுமன்ற தேர்தலில், 18 வயது நிரம்பிய பலர் வாக்களிக்கவில்லை. அவர்கள் தங்களின் முதல் வாக்கை தளபதி விஜய்க்கு தான் அளிப்போம் என்று வாக்களிக்காமல் இருந்தனர். 2026 எப்போது வரும் என்று தான் அவர்கள் காத்திருக்கின்றனர்." என்றார்.
பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் இன்று சென்னை நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்யப்பட்டது. இதேபோல நாளை பெரம்பலூர், அரியலூர், திருச்சி, கும்பகோணம் உள்ளிட்ட டெல்டா மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட உள்ளனர்.












Click it and Unblock the Notifications