புத்தாண்டு கொண்டாட்டம் 2024.. மெரினா, ஈசிஆர் பக்கம் போறீங்களா.. போலீஸாரின் ரூல்ஸ் இதுதான்
சென்னை: சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு 20 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் மெரினா கடற்கரையில் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டுக்கு பை பை சொல்ல இன்னும் 5 நாட்களே இருக்கின்றன. 2024 ஆம் ஆண்டை வரவேற்க மக்கள் தயாராகிவிட்டனர். இந்த 2023 இல் பிரபலங்கள் இறப்பு, புயல், மழை, வெள்ளம் உள்ளிட்டவைகளால் கவலையில் உள்ள மக்களுக்கு 2024 ஆம் ஆண்டாவது நற்பலன்களை கொடுக்கும் என நம்புகிறார்கள்.

இந்த நிலையில் புத்தாண்டை எல்லா இடங்களிலு் சிறப்பாக கொண்டாடுவார்கள். அந்த வகையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள நட்சத்திர ஹோட்டல்கள் மற்றும் தங்கும் விடுதிகள் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு முழு வீச்சில் தயாராகி வருகின்றன.
இதையொட்டி புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகளும் வகுக்கப்பட்டுள்ளன. இதன் படி புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளையும் போலீஸார் செய்து வருகிறார்கள். சென்னையில் டிசம்பர் 31 ஆம் தேதி இரவு 20 ஆயிரம் போலீஸார் முக்கிய சாலைகளில் முக்கிய இடங்களில் பாதுகாப்பு பணிகளில் இருப்பார்கள்.
சென்னை மெரினா, பெசன்ட் நகர், உள்ளிட்ட கடற்கரை பகுதிகள் முழுவதிலும் போலீஸார் தீவிர கட்டுப்பாடுகளை விதிக்கவுள்ளார்கள். புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தேவையான முன்னேற்பாடுகளை மேற்கொள்ள ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மெரினா கடற்கரையில் 31 ஆம் தேதி அன்று இரவு பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தற்காலிக புறக் காவல் நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன. சிறுவர், சிறுமிகள் கூட்டத்தில் காணாமல் போனால் அவர்களை கண்டுபிடிக்க கைகளில் அடையாள வளையம் (tag) கட்டிவிடப்படுகிறது.
இதில் பெற்றோர்களின் செல்போன் எண், போலீஸாரின் எண்ணும் கொடுக்கப்பட்டிருக்கும். இதனால் காணாமல் போகும் குழந்தைகளை எளிதாக கண்டுபிடிக்கலாம். சென்னை மாநகரில் 400 இடங்களில் வாகன சோதனையில் போலீஸார் ஈடுபடுகிறார்கள். ஈசிஆர் சாலை, மெரினா காமராஜர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் கூடுதல் போலீஸாரை நியமித்து கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளும் போலீஸார் ரேஸை தடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
மது போதையில் வாகனங்களை இயக்கி விபத்துகளை ஏற்படுத்துபவர்களை பிடிக்க சென்னை முழுவதும் வாகன தணிக்கை மேற்கொள்ளப்படுகிறது. மதுபோதையில் வாகனம் ஓட்டினால் ரூ 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படவுள்ளது. கூட்ட நெரிசலை பயன்படுத்தி பிக்பாக்கெட், பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுவோர் டிரோன் மூலம் கண்காணிக்கப்படுகிறார்கள்.












Click it and Unblock the Notifications