"மதுபோதை.." புது மாப்பிள்ளை விபத்தில் பலி! மூன்றே நாளில் விதவையான இளம்பெண்! கண் முன்னே நடந்த கொடூரம்
புது மாப்பிள்ளை திடீரென உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: தலைநகர் சென்னையில் மாமியார் வீட்டு விருந்திற்குச் சென்ற புது மாப்பிள்ளை உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் சாலை விபத்துகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. சாலை விபத்தால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் கூட தொடர்ந்து அதிகரித்தே வருகிறது.
விபத்துகளை தடுக்க மத்திய மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை எடுத்தாலும் கூட அது பெரியளவில் பலன் தருவதாக இல்லை. இதுபோல கொடூர விபத்துகள் நடைபெற பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது.
தாறுமாறாக வந்த ஆம்னி பேருந்து! ஹை வேஸில் அலறல்.. சென்னை-மார்த்தாண்டம் சாலையில் விபத்து.. 2 பேர் பலி
சென்னை
தலைநகர் சென்னையில் மதுரவாயல் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். அங்கு செல்லியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த மணிகண்டன் கார் டிரைவராக உள்ளார். 26 வயதே ஆன இவருக்குச் சமீபத்தில் தான் திருமணம் நடந்துள்ளது. சென்னை அமைந்தகரை புல்லா அவென்யூவைச் சேர்ந்த ஷோபனா என்பவருடன் மணிகண்டனுக்கு திருமணம் நடந்துள்ளது. புதுமண ஜோடி திருமணத்திற்குப் பிறகு உற்சாகமாக நாட்களைக் கழித்துள்ளனர்.
மாமியார் வீட்டில் விருந்து
இருப்பினும், அவை அனைத்தும் கொஞ்சக் காலமே நீட்டித்துள்ளது. இந்த புதுமண ஜோடி ஷோபனாவின் தாயார் வீட்டுக்கு விருந்துக்குச் சென்றுள்ளனர். நேற்று முன்தினம் இரவு இவர்கள் மாமியார் வீட்டிற்கு விருந்துக்குச் சென்றுள்ளனர். அதன் பின்னர் அங்கேயே கொஞ்ச நேரம் இருந்த தம்பதி, பின்னர் பைக்கில் வீடு திரும்பியுள்ளனர். அப்போது தான் அந்த மோசமான சம்பவம் அரங்கேறியுள்ளது.
உயிரிழந்தார்
அவர்கள் வந்த பைக் புல்லா அவென்யூ அருகே வந்தபோது, திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்துவிட்டார் மணிகண்டன். இதில் அவருக்குத் தலை மற்றும் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருந்த போதிலும் அவர் சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்தார்.
மதுபோதை
இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த அண்ணா நகர் புலனாய்வு பிரிவு போலீசார், மணிகண்டன் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பிரேதப் பரிசோதனையில், மணிகண்டன் மது போதையில் இருந்தது தெரிய வந்தது. மதுபோதையில் மணிகண்டன் வாகனத்தை இயக்கியதே விபத்திற்குக் காரணம் என்பது தெரிய வந்துள்ளது. புது மாப்பிள்ளை விபத்தில் உயிரிழந்துள்ளது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
போலீசார்
மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டக் கூடாது என்பதை அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவோருக்கு அபராதம் தொடங்கி லைசென்ஸ் ரத்து வரை பல தண்டனைகள் உள்ளன. இருப்பினும், இளைஞர்கள் பலரும் விதியை மதிக்காமலும் ஆபத்தை உணராமலும் மது குடித்துவிட்டு வாகனத்தை ஓட்டுகிறார்கள். இதனால் பல கனவுகளைச் சுமந்து நிற்கும் அவர்கள் எதிர்காலம் நொடிகளில் பாலாகிறது.